-->

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

கொரோனா உயிர்கொல்லி நோயால் உலகமே ஸ்தம்பித்திருந்த சமயத்தில், விமானங்கள் ரத்து, விசா appointment கிடைக்காதது என்று பல தடங்கல்களால் மூன்றரை ஆண்டுகளாக இந்தியாவுக்கு செல்ல முடியாமல், ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும்போது பார்த்த எனது தங்கையின் குழந்தையை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்று ஏங்கியிருந்த சமயத்தில், வார இறுதி என்றால் தவறாமல் வீடியோ அழைப்பில் மட்டுமே பார்த்து வந்த அத்துக்குட்டியுடன் (அத்வித் சேஷாத்திரி) அதையும் தாண்டி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்று எண்ணியபோது ஒரு நாள் whatsapp-இல் கதை ஒன்று சொல்லி அனுப்பினேன்.

அப்போது அவனுக்கு இரண்டரை வயது இருக்கும், அனுப்பிய கதை பிடித்துப்போகவே இரண்டு மூன்று நாள்கள் தூங்கும் முன்பு அந்தக் கதையையே கேட்டுக் கேட்டு ரசிக்கிறான் என்று என் தங்கை சொல்லவே, வேறு புதுக் கதையை அடுத்தடுத்த நாட்கள் அனுப்பியபோது அதையும் மிகவும் ரசித்துக் கேட்டு உறங்க ஆரம்பித்தான் என்று என் தங்கை சொல்வதை கேட்டவுடன் கிடைத்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


எனக்கும் என் தங்கைக்கும் நாங்கள் சிறு வயதில் இருந்தபோது எங்கள் அப்பா நாள் தவறாமல், சலிக்காமல் கதைகள் சொல்வதை கேட்டுக்கொண்டே தூங்கிய பழக்கத்தோடு வளர்ந்தவர்கள் நாங்கள். அந்த ஒரு தருணம் மீண்டும் வந்தது போல இருந்தது. இப்படி whatsapp-இல் சில நாட்களாக கதைகளை அனுப்பியபோது, அந்தக் கதையை எனது உறவினர்களின் குழந்தைகளுக்கும் அனுப்பியபோது அந்தக் குழந்தைகளும் ரசித்து கேட்டு தூங்கினார்கள் என்று தெரிந்த சமயம் தான் இந்தக் கதைகளை அனைத்து மழலைகளுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்தது.


அப்படி ஆரமித்தது தான் "கதை நேரம்" என்ற இந்தக் குழந்தைகளுக்கான ஆடியோ podcast.


பெரும்பாலான இல்லத்தில் இன்றைய குழந்தைகளின் தூங்கும் நேரம் மிக மிக தாமதமாக மாறிவிட்டது, இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி மற்றும் கைபேசியில் காணொளிகளை தூங்கச் செல்லும் நேரம் வரை பார்ப்பது தான், iPad/கைபேசியிலிருந்து வரும் நீல வெளிச்சமானது தூக்கத்தை உண்டுபண்ணும் Melatonin என்ற அமிலத்தை சுரப்பதில் சுணக்கம் காட்டி மேலும் தூக்கத்தை தாமதமாக்கிவிடும் தன்மைக் கொண்டது. 


ஆனால், சமீப ஆண்டுகளாக பெருகி வரும் podcast கலாச்சாரம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையேயும் கூட தாமதமாக தூங்கும் பழக்கத்திலுருந்து மாற்ற ஆரமித்திருக்கிறது என்பது பெருகிவரும் பல புதிய podcast-களினால் தெரிகிறது. Spotify போன்ற சில பெரிய  நிறுவனங்கள் பல முக்கிய பிரமுகர்களைக் கொண்டு தங்களுக்காக பிரத்தியேகமாக ஒலிநாடாக்களை தயாரித்து வெளியிட்டு வருவது, குறிப்பாக தமிழில் பல புதிய படைப்புகள் நாளுக்கு நாள் பெருகிவருவது, மக்கள் மத்தியில் இந்த podcast கலாச்சாரம் பெற்றிருக்கும் வரவேற்பைக்  காட்டுகிறது.


வானொலியில் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன கதைகளை கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள், அப்படி இருக்க முன்பு எட்டாக்கனியாக இருந்த வானொலியில் பேசுவது என்பது இன்று podcast வழியே பலருக்கும் வகை செய்துகொடுத்துள்ளது. மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்த சமயத்தில் சென்னை All India Radio/தூர்தர்ஷன் - ஆகாஷ்வாணியில் நான்கு, தனித் தனி பத்து நிமிட நிகழ்ச்சிகளை செய்யும் வாய்ப்பு கிடைத்தது, அங்கே வானொலி நிலையத்துக்கு சென்று பிரத்யேக அறைகளில் இருந்துகொண்டு ஒலிப்பதிவு செய்தபோதெல்லாம் பிந்தைய ஆண்டுகளில் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே வானொலியில் பேசுவதுபோன்ற அனுபவங்களை தனி நபர்களாலேயே செய்துகொள்ள முடியும் என்பது எண்ண சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்.




ஆனால் இன்றோ, நான் சிறு வயதில் அப்பாவிடம் கேட்ட கதைகள், ஓசூரில் எங்கள் வீதியில் வளர்ந்த குழந்தைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வாரம் இருமுறைக்குமேல் எங்களுக்கு முதல் அத்தை என்ற ஒரு பெண்மணி கதைகள் சொல்வார், அந்தக் கதைகளை நினைவுகூர்ந்தும், பள்ளிக்கூடத்தில் என்னைக் கவர்ந்த, இன்றும் எனக்கு நினைவில் நிற்கும்படி அமைந்த துணைபாடபுத்தகத்தில் படித்த கதைகளுள் சில, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் என்று எனது சிறு வயது குறும்பு அனுபவங்கள், இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் சொல்லப்படும் பொதுவான நன்னெறிக்கதைகள் என்று மொத்தம் இருபத்தெட்டு மணிநேரங்கள் கொண்ட 280க்கும் மேற்பட்ட கதைகளை இதுவரையில் கதைநேரம் podcast-இல் சொல்லி வருகிறேன். நூறாவது கதையை சொன்னபோது அத்துக்குட்டிக்கு இந்த மாமா சொல்லும் கதைகள் தவிர, தனது தாத்தா சொல்லும் கதையும் இருக்க வேண்டும் என்று எண்ணி என் அப்பாவையும் அவரையே கதை சொல்லச்சொல்லி, வார இறுதியில் ஓசூர் தாத்தா கதைகள் என்று அவரின் கதைகளையும் வெளியிட்டு வருகிறேன்.


இப்படியாக 2020 ஆக்டோபரில் ஆரம்பித்த கதை நேரத்தில் இன்று படிப்படியாக Spotify, Google Podcasts, Apple Podcasts, Amazon Music என்று பல தளங்கள் மூலம், 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நான்கு லட்சம் முறைக்கும் மேலே இந்தக் கதைகள் கேட்கப்பட்டுள்ளன. எங்கள் வீட்டுக் குழந்தையைத் தாண்டி இன்று பல குழந்தைகள் தொடர்ந்து கதைகள் கேட்பது என்னை மேலும் கதைகள் சொல்ல ஊக்குவிப்பதாய் உள்ளது.


இயன்ற வரையில் கதைநேரத்தை interactive-ஆக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறேன். அப்படி குழந்தைகளின் பெற்றோர்கள் வழியே குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு சர்வே வழியே அன்மையில் கேட்டிருந்தேன். அப்படி சில பெற்றோர்கள்  குழந்தைகளுக்கு இந்தக் கதைகளை சொல்லி தூங்க வைப்பதுடன், அவர்களுமே கேட்டுத் உறங்குகிறார்கள் என்பது தெரிந்தபோது மிகப்  பெரிய மனநிம்மதியைக் கொடுத்தது. பலர் அவர்களின் குழந்தைகள் மிக விரைவிலேயே தூங்க ஆரமித்துவிடுகிறார்கள் என்று சொல்வதைக் கேட்க்கும் போது அதைவிட பெரிய ஆனந்தம் வேறு இல்லை என்று தான் தோணும். நாள் தவறாமல் கதைகளை ஒளிப்பதிவு செய்ய என் மனைவி என்னை ஊக்கப்படுத்துவதாக இருப்பதும் சரி, மாமா இன்று கதை சொல்லலைன்னா நாளைக்கு ரெண்டு கதைகள் சொல்லனும் என்று செல்லமாய் கோபித்துக்கொள்ளும் எனது தங்கையின் குழந்தைகள் மட்டுமே இன்று கதை நேரம் 4500க்கும் மேற்பட்ட நபர்களால் பின்தொடரப்பட்டு வருகிறது.


இப்படியாக இருக்கும் இந்த கதை நேரம் podcast-ஐ நீங்களும் இலவசமாக அனைத்து podcast செயலிகளிலும் இலவசமாக கேட்கலாம். நிச்சயம் உங்கள் குழந்தைகளும், குழந்தைகளுக்கு நீங்கள் சிறுவர்களாக இருந்தபோது கேட்டு மகிழ்ந்த கதைகளையும் நன்னெறிக் கதைகளையும் சொல்ல விரும்புவோரும் பயனடைவீர்கள் என்று நம்புகிறேன். கதைகளைக் கேட்டுக்கொண்டே கற்பனை ஆற்றலை வளர்த்துக்கொள்வதுடன் தங்களின் கற்பனை உலகில் பயணிக்க தயாராகும் அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.


பி.கு - இந்த QR code-ஐ உபயோகித்து அல்லது https://bit.ly/m/kadhaineram URL மூலம் உங்களுக்கு விருப்பமான செயலி வழியே நீங்கள் கதைநேரம் கேட்கலாம்.

Blogger Widget

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

அமெரிக்க தமிழ் மாத இதழில் வெளியான எனது கட்டுரை

அமெரிக்காவில் கடந்த 23 ஆண்டுகளாக தென்றல் மாத இதழ் வெளியாகி வருகிறது.

குழந்தைகளுக்கான இரவுநேர கதைகளை சொல்லிவரும் எமது கதைநேரம் podcast பற்றிய கட்டுரையொன்றை கடந்த மாதம் எழுதி அனுப்பியிருந்தேன், இம்மாத (டிசம்பர் 2022) தென்றல் இதழில் அட்டைப்படத்துடன் அந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. (பக்கம் 53)

புத்தக வடிவில் கட்டுரையைப் படிக்க (பக்கம் 53) -  https://bit.ly/ThendralMagazineDec2022

தென்றல் இதழின் இணையத்திலும் இக்கட்டுரையைப் படிக்கலாம், ஒளிவடிவிலும் கேட்கலாம் - https://bit.ly/KadhaiNeram-ThendralMagazine

சமயம் கிடைக்கும்போது படிக்கவும். மிக்க நன்றி.

Blogger Widget

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கிடைத்துவிட்ட காணாமல் போன கதை சொல்லிகள்

காணாமல் போகும் கதை சொல்லிகள் என்று பத்து வருடங்களுக்கு முன்பு இந்த வலைதளத்தில் ஒரு பதிவு வெளியானது சிலருக்கு நினைவிருக்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இணையத்தள   உபயோகமும், இன்று இருக்கும் உபயோகத்துக்கும் முடிச்சு போடவே முடியாத அளவுக்கு இமாலய வளர்ச்சி கண்டுள்ளது இணையத்தள உபயோகம். நினைத்தும் பார்த்திராத வகையில் இன்று மிக இயல்பாக அனைத்து விஷயங்களிலும் நம்முடன் பின்னிப்பிணைந்து இருக்கிறது இணையத்தளம். 

அதுவும், கடந்த ஆண்டு கொரோனா உயிர்கொல்லி நோயால் உலகமே தலைக்கீழ் ஆனபோது; பொதுவாக மென்பொருள் பொறியாளர்கள் மட்டும் Computer, Laptop வைத்துக்கொண்டு வீட்டில் இருந்து அவ்வப்போது வேலைபார்த்த வழக்கம் சென்று பொட்டு, பொடுசுகள் முதற்கொண்டு பள்ளிகளும், கல்லூரிகளும் என்று மொத்த உலகமும் இணையதளத்தின் வழியே இயங்க முடியும் என்பது இந்த சமயத்தில் புலனானது.

இப்படி இருக்கும் இந்த சமயத்தில், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம் வீட்டுடனும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நம்மை நொடிப்பொழுதில் இணைத்திடும் Video Call, Whatsapp Audio call என்பதை தாண்டி; பெரியவர்களும், குழந்தைகளும் YouTube, Netflix என்று தாம் நினைத்தும் பார்த்திராத வகையில் அசத்தலாக இவை அனைத்தையும் கற்றுக்கொண்டு உபயோகித்து வருகின்றனர். 

முன்பு இருந்ததைப்போல வழக்கமான Sun TV, Vijay TV என்று மட்டும் இல்லாமல் தனி நபர்களின் திறமையை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் உள்ள YouTube சேல்களும், Prime Video, Hotstar போன்ற OTT தளங்களில் அழுகை, குடும்பத்தை கெடுக்கும் மாமியார் மருமகள் கதைகள் என்று தொலைக்காட்சி தொடங்கியது முதல் நானும் நாடகம் எடுக்கிறேன் என்ற பெயரில் கொலையாய் கொன்றது போன்ற கேவலமான கதைகள் இல்லாமல் பல அற்புதமான கதைகளும், நம் நாட்டு தொடர்கள் மட்டும் இன்றி உலகின் பல பகுதிகளை சேர்ந்த திரைப்படங்களையும் இணைய தொடர்களையும் எப்போது வேண்டுமானாலும் தமது நேரத்துக்கேற்ப பார்க்கும் வகையில் மக்களுக்கு பொழுதுபோக்குக்கு குறைவே இல்லை என்னும் வகையில் வளர்ந்திருக்கிறது இணையத்தளம்.

அப்படி இருக்க, காணாமல் போன கதை சொல்லிகளும் இந்த இணையத்தின் வழியே கிடைக்க ஆரமித்திருக்கின்றனர்! 

எனது குழந்தை பருவத்தில் நானும் என் தங்கையும் அப்பாவையும், அம்மாவையும் தினமும் கதை சொல்லச் சொல்லிக் கேட்டு, அவர்களும் விடாமல் சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே எப்போது தூங்குவோம் என்றே தெரியாமல் தூங்குவதும், ராட்ஷச இயந்திரங்களில் நாள் முழுதும் வேலை பார்த்துவிட்டு வந்த களைப்பிலும் விடாமல் கதை சொல்லும் சில நாட்களில் கதை சொல்லும்போதே களைப்பில் எனக்கு முன்பு அப்பா தூங்கிவிடுவதும் மலரும் நினைவுகள்.

இது மட்டும் இன்றி, எங்கள் வீதியில் இருக்கும் சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடிவிட்டு, வீட்டுக்கு போகும் முன்பு, கடைசி வீட்டில் இருந்த திண்ணை முன்பு சாலையில் ஒரு ஏழு மணிவாக்கில் உட்கார்ந்துக்கொள்வோம், எங்கள் தெருவில் வசித்து வந்த "முதல் அத்தையிடம்" கதை கேட்போம் (எங்கள் தெருவின் தொடக்கத்தில் உள்ள முதல் வீட்டில் அவர் வசித்து வந்ததால் அவரை நாங்கள் அனைவரும் முதல் அத்தை என்று கூப்பிடுவோம்). அவர் தம் கிராமத்து கதைகளை எங்களுக்கு சொல்வார், சில நாட்கள் சட்டென்று சில நண்பர்கள் பேய்க் கதை சொல்லச் சொல்லி கேட்டு முதல் அத்தையும் பேய் கதை சொல்வார்கள், நாங்கள் அனைவரும் பயம் ஏற்படாமல் இருக்க மேலும் நெருக்கமாக உட்கார்ந்துக்கொண்டு கதை முடிந்ததும் தடதடவென்று வீட்டுக்கு ஓடிவிடுவோம்! மேலும்  எங்கள் ஓசூரிலேயே பலரிடம் கதை கேட்ட அனுபவமும் இருக்கிறது.

இப்படியாக அப்போதெல்லாம் நம் வீதியில் வசித்த யாரிடம் வேண்டுமானாலும் கதை கேட்கலாம், அவர்களும் பிரியத்துடன் கதை சொல்வார்கள். இதன்பின் அதை எல்லாம் கெடுத்துவிட்ட தொலைக்காட்சி பெட்டியும், காணாமல் போன திண்ணைகளும், காணாமல் போன கதை சொல்லிகளும் என்று நம் கருத்துக்களத்திலேயே சில பதிவுகளை முன்பு படித்திருப்பீர்கள். 

ஆனால் இன்று மீண்டும் இந்த கதை சொல்லிகளுக்கு இந்த இணையதளம் உயிர் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது, நம் வீட்டில் நமது குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லமுடியும் என்ற நிலை சென்று இன்று நாம் இருந்த இடத்திலிருந்தே உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு கதை சொல்லி, அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் அருமையான வாய்ப்பை பயன் படுத்தி சிலர் இன்று கதை சொல்ல ஆரமித்துள்ளனர். அதில் நானும் ஒருவனாக இருந்து என் தங்கைகளின் குழந்தைகளுக்கு, அக்கா குழந்தைகளுக்கு, அண்ணாவின் குழந்தைகளுக்கு என்று ஆரமித்து பின்னர் எனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரமித்து கதை கேட்கும் ஆர்வம் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் என்று இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன். இப்போதெல்லாம் இரவு பத்து மணிக்குள் நான் கதை சொல்லி இணைப்பை அனுப்பவில்லை என்றால் என் தங்கை குழந்தை அவனாகவே Whatsappஇல் Voice Message அனுப்பிவிடுகிறான்!

இந்த கதைகள் சொல்லும்போதெல்லாம் நான் சிறுவனாக இருந்த சமயத்தில் ஆர்வமாக கடைக்கு சென்று முல்லா நஸ்ருதின், தெனாலிராமன் கதைப் புத்தகங்கள் வாங்கி குதூகலத்துடன் படித்ததும், சிறுவர்மலர், வார மலர் (திண்ணை பகுதி), விகடன் (செழியனின் உலக சினிமா), குமுதம் என்று ஒரு புத்தகம் விடாமலும்; கல்லூரிச் சமயத்தில் அரசாங்க நூலகமும், Luz கார்னரில் உள்ள "ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலே" அவர்களால் திறந்து வைக்கப்பட்ட Ranade நூலகத்திலும் என்று நல்ல கதைகளை தேடித்தேடிப் படித்ததும் தான் நினைவுக்கு வருகிறது.

இதுதான் எனது கதை நேரத்தின் இணைப்பு - https://bit.ly/KadhaiNeram-BhargavKesavan 

நான் சொல்லும் கதை மட்டும் இன்றி மேலும் பலர் ஆர்வமாக கதைகள் சொல்லி வருகிறார்கள், Spotify என்ற இலவச செயலியை தங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்துகொண்டு இப்போதே கேட்க ஆரமிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி நீங்களும் உங்களுக்கு விருப்பமான கதைகளை கேட்டுக்கொண்டே உங்கள் மழலைப் பருவத்து நினைவலைகளுக்கு சென்றுவாருங்கள்.





 
 
 
 


தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள். அடுத்தப் பதிவில் விரைவில் சந்திப்போம், நன்றி.
Blogger Widget

வியாழன், 9 ஏப்ரல், 2020

கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் நாம்!

மூன்று மாதங்களுக்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத சம்பவங்கள் இந்த உலகத்தில் இப்போது  நடந்துக்கொண்டிருக்குறது. இது ஏன் ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, இதற்கு தீர்வு காண்பது எப்படி என்பதை எல்லாம் நாம் ஆராயப்போவதில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் உலகின் ஒட்டுமொத்த பகுதியுமே ஸ்தம்பித்து நிற்கிறது என்பதை மறுக்கமுடியாது.

உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நமது பாரததேசம், முதன்முறையாக இப்படி பல நாட்களுக்கு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறது. பகுத்தறிவு வாதிகளும், மெத்த படித்த மேதாவிகளும் பலரைக் கொண்ட நாடு என்று பறைசாற்றிக்கொண்ட நாடும், உலகின் மற்ற நாடுகளில் பிரச்சனை எழும்போதெல்லாம் (தானாகவோ அல்லது அவர்கள் ஏற்படுத்தியோ) தனது கழுகு மூக்கை நுழைத்துக்கொண்டு "அமைதியை" நிலைநாட்டுகிறேன் என்று அவர்கள் மேல் "போர்" புரிந்து அனைவரையும் அடக்கியாண்டு வந்த அமெரிக்காவெல்லாம் கடந்த மூன்று மாதங்களாக உலக மக்கள் முன் சந்தி சிரிக்க நின்று கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கொடுமையான தொற்றுநோய்ப் பரவிக்கொண்டிருக்கும் இந்த மூன்று மாதகாலத்தில், படிப்புக்கும் அறிவுக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை என்று மிகத் தெளிவாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் நிரூபணம் செய்துக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் அனுபவத்தின் மூலம் பாடம் கற்ற மக்களை அதிகமாகக் கொண்ட நாம் சிறந்தவர்களாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பொது இடங்களுக்கு செல்லவேண்டாம், கூட்டம் கூடவேண்டாம், அனாவசியமாக வெளியே செல்லவேண்டாம் என்றும், இருபத்தியொரு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஊரடங்கு பிறப்பித்தவுடன் நூற்று முப்பது கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நமது நாடு ஒரு மனிதனின் கட்டளைக்குட்பட்டு, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பது என்பது, யார் ஏற்க மறுத்தாலும் இது மிகப்பெரிய சாதனை தான். இப்படி இருந்தால் தான் நோய் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர இயலும் என்ற விஷயத்தைப் புரிந்துக்கொண்டு இருக்கின்றோம். முப்பது பேர் இருக்கும் ஒரு வகுப்பிலேயே ஆசிரியர் சொல்வதை கேட்காமல் திமிராக இருக்கும் மூன்று, நான்கு பேர்களைப்போல சில முட்டாள்கள் தேவையின்றி வெளியே கும்பல் கும்பலாக சுற்றுவதையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

ஆனால் வெறும் முப்பத்து மூன்று கோடி மட்டுமே ஜனத்தொகை கொண்டு, நிலப்பரப்பில் நம் நாட்டை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ள அமெரிக்காவோ, திமிராகவும், ஆராய்ந்துப்பார்க்கும் அறிவில்லாமலும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமலும், இதுத் தொற்றுநோயே இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு இன்று அம்போ என்ற கதியில் நிற்கிறது! கண்கெட்ட பிறகு சூரியனை வணங்கியவனைப்போல பதினாறாயிரத்துக்கும் மேல் (இந்தப் பதிவு எழுதும்போது 16,246, எழுதி முடிப்பதற்குள் 16,444!!) தம் மக்களை இந்தத் தொற்றுநோய்க்கு பலிகொடுத்தப்பின் ஆங்காங்கே சில மாநிலங்களில் மேம்போக்காக ஊரடங்கு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. (முழு ஊரடங்கு பிறப்பிக்காததற்கு இவர்கள் சொல்லும் காரணம், இவர்கள் சர்வாதிகாரிகள் இல்லையாம் மக்களை முடக்கி வைக்க..! ஆம், சர்வாதிகாரிகள் இல்லை, வெறும் முட்டாள்கள் தான் போலும்!)

இப்படி ஐரோப்பியா, எழுபத்தியாறு நாட்களுக்கு சீனாவின் சில பகுதிகள், இந்தியா என்று உலகமே முடங்கிக்கிடக்கும் இந்த வேளையில் தான், இந்த உலகத்தின் முதல் உரிமையாளர்களும் இயற்கை வாசிகளுமான விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்தும் பயமில்லாமல் உரிமையாக வெளியே வந்து உலகைப் பார்க்கின்றன! ஆயிரம், நூறு ஆண்டுகளாக தாம் வசித்து பராமரித்து வந்த தங்கள் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க, மனிதனிடம் இருந்து மீதி இருக்கும் சொற்ப காடுகளிலிருந்து வெளியே வந்துப் பார்க்கின்றன! மூன்றே மாதத்தில், மாசற்ற இத்தாலியின் வெனிசு நதிகளில் டால்பின் மீன்களும், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் கரடியும், ஜப்பானில் மான்களும் பல வருடங்களுக்கு பிறகு சுதந்திரமாக வெளியே வந்துள்ளதை பார்த்து தம் நாட்டில் இவையெல்லாம் இருக்கின்றனவா என்று பிரமிக்கும் நிலைக்கு மக்கள் வியப்படைந்துள்ளனர்!

அந்த விலங்கினங்கள், தாம் வசித்து வந்த எழில்மிகு இந்த பூவுலகை, எங்கு பார்த்தாலும் புகைப் படிந்த இடமாகவும், குப்பைக் கூடமாகவும், நீர் வற்றிய வறண்ட பூமியாகவும், இயற்கைக் கொடுத்த கொடையான பிராணவாயுவையே சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் முகமூடி போட்டுக்கொண்டும், முக்காடு போட்டுக்கொண்டும் சுவாசிக்கும் அளவுக்கு சில நகரங்களையும் (விரைவில் பல நகரங்கள்!), சில நாடுகளையும் மாற்றிவிட்ட பொறுப்பற்ற, கேடுகெட்ட சுயநல குடித்தனக்காரர்களாக இருப்பார்கள் என்று சற்றும் எதிர்பாராதவையாக இந்த உலகை வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன!

உலகின் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலம், தன் வசிப்பிடமான நடுக்கடலில் உண்ண மீன்கள் இன்றி, பெரிய கப்பல்களில் ராட்சத போக்லைன் மூலம் ஒரே வலை விரிப்பில் ஆயிரக்கணக்கான மீன்களை இயற்கை வாசிகளான திமிங்கலம், சுறா மற்றும் ஒவ்வொரு மீனையும் சார்ந்திருக்கும் வேறு மீன்களிடமிருந்து கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு கொடூரர்களாக மக்களையும்; தேவைக்காக, தேவையான போது மட்டும் உணவைத் தேடிச் சென்றும், தன் கூட்டத்துடன் பகிர்ந்து உண்ணும் விலங்கினங்கள், ஊரடங்கு என்றதும் அடித்து பிடித்து தேவையானது, தேவையில்லாதது என்று கண்டதையெல்லாம் வாங்கி அதை தேவையானவர்களுக்கு கிடைக்காதவாறு செய்த மனிதக் கூட்டத்தை வினோதமாக பார்த்துக்கொண்டே சுற்றித்திரிகின்றன!


பல ஆண்டுகளுக்கு பிறகு மாசற்ற காற்றும், கீங் கீங் என்று வாகன சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசுகளும் இல்லாமல் புள்ளினங்கள் பறப்பதையும், மனித மந்தைகளைப்பற்றி கவலையின்றி   விளையாடிக்கொண்டே பரந்துத் திரிவதை வீட்டின் உள்ளேயே நின்றுகொண்டு சாளரம் வழியே வெறித்து பார்க்கும்போது தான்.., இப்படி விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்து ஜீவராசிகளுடனும் சேர்ந்து இந்த உலகில் வாழாமல் இவைகளை அச்சப்படுத்தும் விதத்தில் இயற்கையின் கனிம வளங்களை தோண்டி எடுத்து, அதற்காக வேறு நாடுகளுடன் போர் புரிந்து, அடுத்த உயிர்களைக் கொன்று குவித்து, தேவைக்கு அதிகமாக பூமியைத்தோண்டி அந்த நிலப்பரப்பின் தட்பவெட்பமே அதனால் அதிகரிக்க காரணமாகி, அதனால் காட்டுத்தீயை ஏற்படுத்தி கோடிக்கணக்கான; என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ள முடியாத, தன் குமுறல்களை வாய்விட்டுப் பேசத்தெரியாத வாயில்லா ஜீவன்கள் எரிந்து சாம்பலாவதற்கு காரணமாகவும், இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஆடை ஆபரணங்களுக்காக காட்டினுள் சென்று மிருகங்களை வேட்டையாடுவதும், தந்தங்களுக்காக இயற்கையின் கொடையான யானையையே கொல்லும்  அளவுக்கு மனசாட்சியில்லாத ஜந்துவாகவும், மருத்துவ குணத்துக்காக என்று பொய்யை சொல்லி பல மிருகங்களையும், வெள்ளை காண்டாமிருகம் என்ற ஒரு இனத்தையே இந்த உலகத்திலிருந்து அழித்து என்று என்னென்ன கொடுமைகளை இந்த இயற்கை பூமிக்கு செய்துக்  கொண்டிருக்கிறோம்?

திங்காதடா என்று சொன்ன ஒரு ஆப்பிள் பழத்தை தின்று தொலைத்த ஆதாமாலோ என்னமோ, இந்த உலகில் மனித வகை வந்த பிறகு, தம்முடன் இனைந்து வாழ இந்த பூமியாகிய தமது கூடாரத்தில் மனிதராகிய நமக்கு இடம் கொடுத்த விலங்கினங்களையும் காடுகளையும் மெல்ல மெல்ல அபகரித்து, ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி பின்னர் அவைகளையே இல்லாமல் செய்துக்கொண்டிருக்கும் நாம், எப்படியும் சில மாதங்களில் முன்புபோல வெளியே நடமாட ஆரமித்தபின்னர் இயற்கை அளித்த கொடைக்கு நன்றியுடன் நடந்துக்கொள்ள முயற்சிப்போம்!
Blogger Widget

புதன், 17 ஜூலை, 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள்




பொழுதுபோக்கைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் இங்கே என்ன செய்வார்கள், எங்கே செல்வார்கள் என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நேரடியாக இந்த அத்தியாயத்தில் நுழைவதற்கு முன், "வேலை முடிஞ்சா கிளம்பு" என்ற அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்குமிடம், அங்கே இருக்கும் வழக்கம் பற்றி விரிவான தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அத்தியாயத்தை படித்துவிட்டு இதை தொடர்ந்து படிக்கவும்.

நம் நாட்டில் ஆண்டுக்கு இருபத்து இரண்டு முதல் இருபத்து ஐந்து பண்டிகைகளும், அதில் மாநிலத்திற்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் பொது விடுமுறை கொடுக்கப்படும். அமெரிக்காவில் நம் அளவுக்கு பண்டிகைகளெல்லாம் கிடையாது என்பதை "அமெரிக்கப் பண்டிகைகள்" என்ற அத்தியாயத்தில் விரிவாக பார்த்தோம். அப்படி ஒவ்வொரு விடுமுறைக்கு முதல் நாள், "Early dismissal" என்று ஒரு வழக்கம் உண்டு, விடுமுறை தினத்துக்கு முந்தைய தினம், மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு செல்லலாம், இது எதற்காக என்றால், விடுமுறையை ஒட்டி வெளியே செல்பவர்களுக்கு சௌகரியமாக இருப்பதற்காக கொண்டு வந்த வழக்கம். சில அலுவலகங்களில் இந்த பழக்கம் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வார இறுதியில் மற்றும் மூன்று அல்லது நான்கு நாட்கள் என்று தொடர்ந்து விடுமுறை (Long weekend) வந்தால் கோடைக் காலத்தில் பெரும்பான்மை மக்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தத்தம் மாநிலத்திலேயே இருக்கும் தேசிய மற்றும் மாநில பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். இங்கே விடுமுறையை கழிக்க மக்கள் தொலைக்காட்சி முன்பு உட்காருவதில்லை என்பது வெளியே சென்றுபார்த்தால் தெரியும். பெரும்பாலும் அந்த தொடர் விடுமுறைக்கு முதல் நாள் சாலைகள் அலைகடலென வாகனங்களைக் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வாகனங்களில் ஒருவர் பின்னர் ஒருவராகத்தான் செல்வர். 

இப்படி செல்லும் வாகனங்களில் முதல் முறை நான் வெளியே சென்ற போது ஒவ்வொரு வாகனங்களின் பின்னர் "trailer" என்று அழைக்கப்படும் வண்டியுடனான இணைப்பில், சைக்கிள், moterbike, Dirt Bike மற்றும் AVT (சேற்றில் ஓடிக்கொண்டு போகும் வண்டிகள்), படகு, Kayak, குதிரைகள் - குதிரையை பத்திரமாக கொண்டு செல்ல பேருந்து போல தங்கள் காரின் பின்பு ஒரு இணைப்பு இருக்கும், குதிரையை மலைப்பகுதிக்கு கொண்டு சென்று ஓட்டி மகிழ்வர். இப்படி பல தரப்பட்ட மக்களும் தங்களுக்கு விருப்பம் போல பொழுதைக்கழிக்க அதற்கு ஏற்ற இடங்களுக்கு செல்வர். 

இது தவிர RV எனப்படும் Recreation Vehicle என்று ஒரு வண்டி உண்டு, அத்த வண்டியிலேயே படுக்கை, சமையல் என்று எல்லா வசதியும் உண்டு. கழுகு என்ற 1981ஆம் ஆண்டு  வெளிவந்த ரஜினி படத்தில் தான் இதை முதல் முறை பார்த்தேன், அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது அதை பார்த்தபோது. இங்கே அந்த வண்டி நூற்றில் ஐந்து பேரிடம் இருக்கும் (ஒரு கணக்கு தான்!), சிறிய பெரிய என்று பல வடிவில் இருக்கும் அந்த வண்டியின் முக்கியத்துவம் என்னவென்றால், அது வைத்திருப்பவர்கள் வெளியில் தங்க தேவை இல்லை, RV parking station என்றே தனி இடம் உண்டு, அவர்கள் அங்கே நாள் கணக்கில் வண்டியை நிறுத்தி விட்டு (தினக் கட்டணம் $10 முதல் $30 வரை இருக்கும்), அந்த வண்டியின் பின்னர் அவர்களின் வாகனத்தை trailerஆக கொண்டு வந்திருப்பார்கள், அருகில் இருக்கும் இடங்களை அதில் சுற்றி பார்த்துவிட்டு அடுத்த மாநிலத்துக்கு செல்ல மீண்டும் பெரிய வாகனத்தை கிளப்பிக்கொண்டு செல்வார்கள். இப்படி இந்த வண்டியில் தொடர்ந்து மாதக் கணக்கில் சுற்றுவோர். பனி ஓய்வு பெற்றவர்கள், சில ஆண்டுகள் வேலை செய்து சேமித்து வைத்துவிட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வெளியே சுற்றி பார்ப்பவர்கள் என்று இதற்கு ஒரு தனி மக்கள் தொகையே உண்டு!

முதல் முதலில் ஒரு மாநில பூங்காவிற்கு செல்வதற்கு முன், "அட.. என்னடா இது சின்ன பசங்க மாதிரி பார்க்குக்குலாம் போயிகிட்டு" என்று நினைத்தேன். எனக்கு தெரிந்த பூங்காவெல்லாம் எங்கள் ஓசூரில் கோட்டை மாரியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் பூங்காவும், சென்னையில் சிறு வயதில் அப்பா அம்மா அழைத்து சென்றபோது பார்த்த பாம்புப் பண்ணையும், VGPயும், மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வராவ் பூங்காவும், தஞ்சை பெரியகோவில் எதிரில் இருந்த பூங்காவும் மட்டும் தான். இப்படி இரண்டு ஊஞ்சல், ஒரு சறுக்குமரம், காலாற நடக்க கொஞ்சம் இடம் இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தது அங்கு சென்ற பின்னர் தான் புரிந்தது!

அமெரிக்காவில் இருக்கும் தேசிய பூங்காக்களின் மொத்த பரப்பளவு மட்டும் மூன்று இங்கிலாந்தை கொள்ளும்!!! அவ்வளவு விசாலமான இடங்களாக தான் ஒவ்வொரு பூங்காக்களும் இருக்கும். இது வெறும் தேசிய பூங்காக்கள் இடம் மட்டும், இதை தவிர மாநிலப் பூங்காக்கள், உள்ளூர் பூங்காக்கள் என வகைவகையான இயற்கை எழிலூட்டும் பூங்காக்கள் உள்ளன. முதல் அத்தியாயத்திலே சொன்னதுபோல இங்கே ஐம்பது மாநிலங்கள் உள்ளன, ஒரு கோடியிலிருந்து இன்னுரு கோடிக்கு 3,500 மைல்கள் (5,650 கிலோமீட்டர்), இது வடகிழக்கிலிருந்து மேற்கு திசைக்கு செல்ல மட்டுமே! இப்படி மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால், ஒவ்வொரு திசையிலிருக்கும் பூங்காவுக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. அதுவும், குளிர்காலத்தில் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மலைகளைக் கொண்ட பூங்காவைப் கோடைகாலத்தில் பார்த்தால் அப்படியே மாறுபட்டு தோன்றும், அதையே இலையுதிர் காலத்தில் பார்த்தால் சொர்கத்துக்கு செல்லும் பாதையை ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வந்தது போல வண்ணமயமாக இருக்கும், பனிக்காலம் ஆரமிப்பதற்கு முன்னர் சென்று பார்த்தல் மொட்டை மரங்களாக காட்சியளிக்கும்.



இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு பூங்காவைப் பார்க்கலாம், ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புது அனுபவத்தைக் கொடுக்க காத்துக்கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கான மையில்கள் ஓடும் கணக்கில்லா ஆறுகளும், கோடிக்கணக்கான ஏக்கரில் பராமரிக்கப்பட்டு வரும் வனங்களும், அதில் இலட்சக்கணக்கில் காலத்துக்கு ஏற்ப இனப்பெருக்கத்துக்கு வந்து முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும் பறவைகளும், விலங்குகளும் என்று அனைத்தும் மிக சிரத்தையுடன் பராமரிக்கின்றனர். தேசிய பூங்காவிற்கென்று தனியே வரவு செலவு திட்டம் தீட்டப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசுகள் மாநிலப் பூங்காவுக்கு நிதி ஒதுக்கி பாதுகாத்து வருகிறது. 

ஒரு மாநில பூங்காவில் ஒரு நாள் முழுதும் செலவழிக்கும் அளவுக்கு பல விஷயங்கள் உண்டு. முன்பே சொன்னதுபோல ஒவ்வொரு பூங்காவுக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. பெரும்பாலான பூங்காக்களில் எழில்மிகு ஏரிகள் இருக்கும் - அதில் தண்ணீரும் இருக்கும்! ஆம் தண்ணீருடன் ஏரியையோ, குளத்தையோ நம் தாய்த் தமிழ்நாட்டில் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், இங்கே எங்கு சென்றாலும் தண்ணீர், குளம், ஆறு, ஏறி, நீர் வீழ்ச்சி என்று எண்ணற்ற நீர்நிலைகள். ஒவ்வொன்றையும் பூங்கா ஊழியர்களும், அதைக் கண்டும், விளையாடியும், படகோட்டியும், நீந்தியும், எண்ணற்ற நீர் விளையாட்டுகளை விளையாடியும் மகிழும் பலதரப்பட்ட மக்களும் அவ்வளவு பொறுப்புடன் உபயோகப்படுத்தி குப்பையாகாமல் பார்த்துக்கொள்கின்றனர். எவ்வளவு பெரிய பூங்காவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு என்று எண்ணற்ற மர மேஜைகளும், Barbeque (திறந்த வெளியில் உணவு சமைக்க உதவும் கருவி - அதற்கு கரி மற்றும் எரிபொருள் நாம் கொண்டு செல்லவேண்டும்), குடி நீர் குழாய், கழிப்பிட வசதி என்று ஒவ்வொன்றும் அணைத்து பூங்காக்களிலும் இருக்கும்.



பெரும்பாலான பூங்காக்களுக்கு தங்கள் வளர்ப்பு நாய்குட்டிகளையும் அழைத்துக்கொண்டு தான் செல்வார்கள். அப்படி அழைத்து வரும் செல்லப் பிராணிகள் மலம் கழித்தாலும், அதை கொண்டு வந்தவர்களே அப்புறப்படுத்திவிடுவார்கள். அதற்காகவும் ஒரு கறுப்புப் கவர் ஒன்று பெரும்பாலான இடத்தில் வைத்திருப்பார்கள். யாரும் சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை, அவர்களே சுத்தம் செய்திவிடுவார்கள்.




மாநில பூங்காக்களில் $5 முதல் $10 வரையும், தேசிய பூங்காக்களில் $15 முதல் $35 வரை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும், இது மட்டும் தான் செலவு. வண்டியை நிறுத்துவதற்கும் வேறு எதற்கும் கட்டணம் கிடையாது. குறிப்பாக இங்கே எங்கும் கழிப்பிடத்துக்கு பணம் வசூலிப்பது கிடையாது, ஆனால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தபோது ஐந்து ரூபாய் கட்டணம் கொடுத்து சிறுநீர் கழிக்க உள்ளே நுழைந்து, அடுத்த நொடியே மூக்கை பொத்திக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டேன், கேவலம்! சுற்றுலா செல்லும் இடத்தை எப்படி வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு, அது மட்டுமா? நம் நாடு முழுவதும் கூடாததற்கு தான் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றது! சரி, இங்கே வருவோம்.

நெவாடா என்னும் மாநிலத்தில் ஒரு பூங்காவிற்கு சென்றிருந்தேன், அங்கே நுழைவு கட்டணம் பெற்றுக்கொள்வதற்கு ஆள் கிடையாது, பூங்காவிற்குள் நுழையுமிடத்தில் ஒரு அஞ்சல் பெட்டி ஒன்று இருக்கும், அதனருகில் ஒரு படிவம் இருக்கும், அதில் நம் வண்டியின் எண், நமது பெயர் மற்றும் இதர விபரங்களை பூர்த்தி செய்துவிட்டு, $10 பணத்தை அந்த படிவத்தில் வைத்து ஒரு அஞ்சல் உரையில் வைத்து (எல்லாம் அங்கேயே வைத்திருப்பார்கள்!) அந்த அஞ்சல் பெட்டியில் போடவேண்டும், நமக்கு ரசீது போல ஒரு சிறு பகுதி அந்த படிவத்திலிருந்து கிழித்து நம் வண்டியில் கண்ணாடியின் அருகில் வைத்துவிட வேண்டும், பூங்காவினுள் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றிப்பார்க்க செல்லும்போது ஒரு வேளை காவலரோ அல்லது பூங்கா ஊழியரோ வண்டியருகே வந்தால் நாம் நுழைவு கட்டணம் செலுத்தியதற்கு இது அத்தாட்சியாக இருக்கும். அனைவரும் இதை கடைபிடித்து தான் செல்வார்கள், மக்களின் மேலும் அப்படி ஒரு நம்பிக்கை!!

Death Valley National Park என்ற பூங்காவிற்கு சென்ற ஆண்டு சென்ற பொது, வேற்று கிரஹத்தில் இருந்ததை போலவும், வேற்று கிரஹத்தில் வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பதுபோலவும் பல முறை தோன்றியது! அப்படி ஒரு நிசப்தமான இடம், அந்த பூங்காவின் பரப்பளவு மட்டும் ஐந்து கோவா மாநிலத்தை கொள்ளும்!! கேரளாவின் மொத்தப் பரப்பளவில் பாதி பகுதி இந்த ஒரு பூங்காவின் பரப்பளவு மட்டும்! இதனுள் உப்புத்தரையும் உண்டு, மணல் மேடுகளைக் கொண்ட பாலைவனமும் உண்டு, கனிம வளங்களை கொண்ட மொட்டை மலைகளும், பாறைகளும் உண்டு, காற்று தள்ளிக்கொண்டு போகும் பாறாங்கல்லும் உண்டு! இப்படி மாநிலத்துக்கு குறைந்தது ஐந்து பெரிய்ய பூங்காக்களாவது நிச்சயம் இருக்கும். தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை மட்டும் 112. இதன் பரப்பளவுதான் மூன்று இங்கிலாந்தைக் கொள்ளும்!



தேசிய பூங்காவுக்கு, மாநில பூங்காவுக்கு ஆண்டு சந்தா கூட செலுத்தி "pass" பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு மட்டும் தேசிய பூங்காவின் நுழைவு கட்டணத்தை மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் $310 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 21,291,208,791 கோடி ரூபாய்!!! இது முழுக்க முழுக்க மக்கள் விரும்பி அவர்களின் விடுமுறை நாட்களை கழிக்க குடும்பத்துடன் சென்று எந்த தொந்தரவும் இன்றி மகிழ்ச்சியாக செலவழித்துவிட்டு வந்த தொகை! மக்கள் கொடுத்த இந்த நுழைவு கட்டணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்று தேசிய பூங்காவின் வலைத்தளத்திலே மிக தெளிவாக ஒவ்வொரு பூங்காவிலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிப்பறையின் விபரண்களைக் கூட "உங்கள் கட்டணப் பணத்தில் நடக்கும் வேலைகள்" என்று வெளியிட்டிருக்கிறார்கள் விபரங்கள் இங்கே


இப்படி ஒரு திசைக்கு சென்றால் எழில் சொட்டும் பணிமலைகளும், மலையை ஒட்டி அடிவாரத்தில் ஆனந்தமாக படகோட்டி செல்ல  ஏரிகளும், பனிப்பாறைகளும், பச்சை பசேலென்று ஐநூறு மைல்கள் செல்லக்கூடிய பூங்காவும் (ஒரு பூங்காவின் நீளம் மட்டும் 800 கிமி), பல வெள்ளை நிற பாலைவனகளும், வெயில் சுட்டெரிக்கும் ஆண்ட வெளிகளும், அங்கே வழங்கி வரும் பல நூறு கணக்கான பறவை இனங்களும், விலங்குகளும், காலத்துக்கு ஏற்ப பச்சையாகவும், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் மரங்களும் அதன் இலைகளின் நிறங்களும் மாறி சொர்கம் என்றால் ஒருவேளை இப்படி இருக்குமோ என்று தோன வைக்கும் வியப்புகளும் என்று அமெரிக்கா முழுவதும் எழில் கொழிக்கும் பூங்காக்கள் எண்ணற்று இருக்க இங்கே தான் இம்மக்கள் தங்கள் வார இறுதியை கழிப்பார்கள். பலர், விடுமுறை எடுத்துக்கொண்டு, சில மாதங்களுக்கு முன்னரே திட்டம் தீட்டி, விமான முன்பதிவு, தங்குமிடம் முன்பதிவு என்று அனைத்தையும் செய்துக்கொண்டு தங்கள் விடுமுறையை திட்டமிடுவார்கள்.



இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒருவர், ஒவ்வொரு ஆண்டு ஒரு மாநிலத்தில் ஒரு முக்கிய தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிடலும் கூட, ஐம்பது பூங்காக்களை பார்க்கவே, ஐம்பது ஆண்டுகள் ஆகும்!!! இது தவிர இதர அழகு முகும் இடங்கள் வேறு!! இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஒவ்வொரு  வார இறுதியும் வெளியே சென்று சுற்றி பார்த்தாலும் அலுக்காது!



அத்தியாயம் 18 அடுத்த வாரம் வெளியாகும். மேலும் மூன்று அத்தியாயங்களுடன் இந்த கட்டுரைத் தொடர் முற்று பெரும்.

Blogger Widget

சனி, 2 மார்ச், 2019

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...


நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று வந்தாலும், பேருந்தில் சென்று வந்தாலும், ஒரு முறையாவது ஒரு கோபம் அல்லது எரிச்சல் அல்லது "ச்சை" என்னடா இது என்று தோணும். இப்போதிருக்கும் வண்டி நெரிசல்களில் எங்கள் ஓசூரிலேயே ஒரு சிறிய சாலையை கடக்க ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. சாலையை கடக்கலாம் என்று சிறுவரோ, வயதானவரோ, இளம் வயதினரோ யார் முயன்றாலும் மதிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக வண்டிகள் வந்த வண்ணம் இருக்கும். நூற்றில் நான்கு ஐந்து விபத்துகளும் இதனால் நேரிடுகின்றன.

வண்டியில் சென்றாலோ, wrong side என்னும் பயம் துளியும் கூட இல்லாமல் அப்படியே எதிர் திசையில் வண்டிகளை ஓட்டுவது, கண்ணாபிண்ணாவென்று ஒலிபெருக்கியை உபயோகிப்பது, பின்னால் வரும் வண்டிக்கு வழிவிடாமல் பெப்பரப்பே என்று சாலையை மறைத்துக்கொண்டு செல்வது, சாலையில் இருக்கும் lane; சாலை நடுவில் இருக்கும் வெள்ளைக் கோடுகள், சாலையை இரண்டு வழி, மூன்று வழி, எட்டு வழி சாலை என்று பிரிப்பது, அதை மதித்து கோட்டுக்குள் செல்லாமல் அந்த laneஇல் பாதியிலும், இந்த laneஇல் பாதியும் என்று அடுத்த வண்டியை ஒழுங்காக ஓட்டவிடாமல் செல்வது. பேருந்தில் சென்றால் சுங்கச்சாவடியில் பல மணிநேரம் காத்துக்கொண்டும், தனியார் வண்டி என்றால் தலைகால் தெரியாமல் மின்னல் வேகத்தில் செல்வதும், அரசு பேருந்து என்றால் ஒரு இருக்கை உருப்படியாக இல்லாமலும், மூட்டைப்பூச்சிகளும், கடகடவென ஜன்னல் ஆடும் சத்தமும் என்று நமது இலக்குக்கு சென்றுசேரும் வரை ஏதாவது ஒரு இடைஞ்சல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்!

ஆனால் அமெரிக்காவில் இவற்றில் ஒரு தொல்லையும் கிடையாது, காரணம் இங்கிருக்கும் சாலை விதிகள்.

முதல்முதலில் ஒருவர் இங்கே ஓட்டுநர் உரிமம் பெறவேண்டுமென்றால், படிக்கவேண்டும். ஆன்லைனில் அவரவர் மாநிலத்திற்கு ஏற்ப சாலை விதிகள் கொண்ட புத்தகம் இருக்கும், அவற்றில் ஒவ்வொரு விதிகளும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த விதிகளைப் படித்த பின்னர், DMV அலுவலகம் சென்று (நம் நாட்டில் RTO அலுவலகம்) ஒரு படிவத்தை நிரப்பி தேர்வு எழுத வேண்டும், அந்த தேர்வில் சாலை விதிகளைப் பற்றிய கேள்விகள் இருக்கும். அந்தத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே Learner's Permit கொடுக்கப்படும், அதாவது அந்த தேர்வில் "தேறினால்" மட்டுமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஒரு வேலை தேர்வாகவில்லை என்றால், மறுபடி தேர்வு எழுத முப்பது நாட்கள் காத்திருக்க வேண்டும்.

RTO - Road Transport Office DMV - Driving Motor Vehicle

மிதிவண்டிகள் செல்வதற்கென உள்ள தனி மார்க்கம்.
அந்த புத்தகத்தைப் படித்தும், இந்த தேர்வு எழுதி முடித்தாலுமே நூறு சதவிகிதம் சாலை விதிகள் ஒருவருக்கு புரிந்துவிடும்.  அந்த விதிகளில் - பள்ளி அருகில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், மேடாக இருக்கும் சாலையில் வண்டியை நிறுத்தும்போது steering எந்தப் பக்கம் திரும்பி இருக்கவேண்டும் (ஒருவேளை வண்டி தானே நகர்ந்துவிட்டால், வெகு தூரம் செல்லாமல் இருக்க, steeringஐ சாலையில் நிறுத்தி இருக்கும் திசைக்கு ஏற்ப திருப்பி வைத்தால், வண்டி அங்கேயே நின்றுவிடும்), மழை சமயத்தில் முன்பிருக்கும் காரிலிருந்து எவ்வளவு தொலைவில் செல்லவேண்டும் எனது போன்ற அணைத்து விதிகளும் இந்த தேர்வில் அடங்கியிருக்கும்.


தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் வாங்க RTO அலுவலகம் சென்றால், ஒரு நாளைக்கு நாற்பது படிவங்கள் தான் என்று சொல்லி, Driving School அல்லது தானாக வரும் நபர்களை அலைக்கழிப்பார்கள். Driving Schoolமூலம் வரும் படிவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்மை மதிக்கக்கூட மாட்டார்கள். RTO அலுவலகத்துக்குள் யார்யாரோ எல்லாம் இருப்பார்கள். ஆனால் இங்கே, சம்மந்தப்பட்ட நபர் தவிர வேறு யாரும் அலுவலகம் உள்ளே வரமுடியாது. DMV அலுவலகம் உள்ளே நுழையும் முன்னரே வெளியில் வரிசையில் நிற்கும்போது ஒரு ஊழியர் வந்து தேவையான படிவங்களை கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் வரிசையில் நிற்கும் நேரம் மட்டும் தான் ஆகும், எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கான நேரம், அதற்கான கட்டணம் தவிர எந்த அலைக்கழிப்பும் இருக்காது.


சரி சாலை விதிகளுக்கு வருவோம், முதல்முறையாக அமெரிக்கா வந்த பின் தான் சாலையில் இருக்கும் கோடுகளைப்பற்றி புரிந்தது. அந்த கோட்டினுள் தான் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதும், அது எவ்வளவு முக்கியம் என்பது எனது இருபத்தி ஏழாவது வயதில் தான் தெரிந்தது! இங்கே பெரும்பாலும் மூன்று வகையான சாலைகள் உண்டு. கிராமப்புற சாலை, உள்ளூர் சாலைகள், நெடுஞ்சாலை. ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருக்கும். சாலைகளில் உள்ள கோடு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது இரு மார்க்க சாலை என அர்த்தம். நடுவில் விடுபட்டு போடப்பட்டிருக்கும் கொடு இருந்தால் நமக்கு முன்னே செல்லும் காரை முந்தி செல்லலாம், தொடர்ந்து கோடு இருந்தால் அடுத்த வண்டியை முந்தக்கூடாது.

சாலையில் பாதசாரிகளுக்கு தான் முன்னுரிமை. எவரேனும் நடந்து சென்றால் வண்டியின் வேகத்தை அப்படியே குறைத்துவிடுவார்கள், சாலையை கடக்க மக்கள் நின்றிருந்தால் அவர்கள் சாலையை கடந்த பின்னர் தான் வண்டி செல்லவேண்டும். நம் நாடு போல நெடுஞ்சாலையில் எல்லாம் இங்கே மனிதர்கள் நடந்து செல்ல மாட்டார்கள். உள்ளூர் சாலைகளில் மற்றும் கிராமப்புற சாலைகளில் எப்போதாவது மக்கள் நடப்பதை பார்க்கமுடியும். ஏனென்றால் நடந்து செல்லும் தூரத்தில் எதுவும் இருக்காது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்காக தான் பொதுவாக சாலையில் மக்கள் நடப்பார்கள். மற்றபடி சாலையில் நடந்து செல்ல ஏதும் காரணமிருக்காது. முதல் பதிவில் சொல்லியிருந்ததை போல நடந்து சென்று காய்கறியோ, பச்சைமிளகாயோ நம்மூரில் வாங்குவது போல இங்கே வாங்க முடியாது, ஏனென்றால் கடைகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில மட்டும் தான் கடைகள் இருக்கும்.


ஒவ்வொரு சாலையிலும் ஒரு வேக வரம்பு இருக்கும். கிராமப்புற சாலைகளில் 35mph அல்லது 40mph, பள்ளி அருகில் 25mph, உள்ளூர் சாலைகளில் 50 mph, நெடுஞ்சாலைகளில் 65mph இதில் வேக வரம்பு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறும். ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு சாலையிலும் மிக தெளிவாக வேக வரம்பு எவ்வளவு என்று குறிப்பிட்டிருக்கும். அந்த வேகத்தை மீறி சென்றால் நிச்சயமாக காவலர் நம் பின்னேயே வந்து வண்டியை ஓரம் கட்டி அபராதம் விதிப்பர், மேலும் காரணத்திற்கு ஏற்ப தண்டனையும் இருக்கும். அதாவது மிக வேகமாக வண்டியை ஓட்டினால் கிட்டத்தட்ட $350 வரை அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு இரண்டு அல்லது நான்கு புள்ளிகள் கொடுக்கப்படும், இப்படி ஒருவரது ஓட்டுநர் உரிமத்தில் பன்னிரண்டு புள்ளிகள் வந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு அவரது உரிமம் ரத்து செய்யப்படும். இந்நாட்டில், நம்நாட்டில் செல்வதுபோல ஓட்டுநர் உரிமம் இல்லாமலேல்லாம் வெளிய செல்ல முடியாது. ஆக உரிமத்தை இழந்தால் அவ்வளவுதான். அதனால் பெரும்பாலானோர் மிக ஜாக்கிரதையாக தான் வண்டியை ஓட்டுவார்கள்.

காவலர் நம்மை ஓரம் கட்டினால் அவர்கள் கேட்கும் கேள்வியை தவிர அநாவசியமாக ஒரு வார்த்தை கூட பேசமுடியாது, வந்து நமது உரிமம், வண்டியின் காப்பீடு மற்றும் வண்டியின் பதிவீடை வாங்கி செல்வர், இதில் ஒரு ஆவணம் இல்லை என்றாலும் ஒவ்வொரு தவறிய ஆவணத்துக்கும் $180 அபராதம் விதிக்கப்படும். அதனால் இது மூன்றும் இல்லாமல் யாவரும் இருக்கமாட்டார்கள். மேலும், நம் நாட்டில் வெட்கப் படாமல் காவலர் கை ஏந்துவதும், நாமும் வெட்கப்படாமல் ஐம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீண்டும் அதே தவறை செய்வது போலெல்லாம் இங்கே செய்யமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அப்படி ஒரு கலாச்சாரம் இருப்பது இங்கே பெரும்பாலானோருக்கு தெரியாது. அவ்வளவு கண்ணியமாக நடந்துக்கொள்வார்கள் காவலர்கள் மற்றும் மக்களும் கூட. இன்னும் சொல்லப்போனால் காவலர்கள் சில நேரத்தில் நமக்கு உதவும் முயற்சியில், பெரிய அபராததுக்கு பதிலாக சிறிய அபராதம் வழங்கி விட்டுவிடுவார் ஆனால் கை மட்டும் எந்தமாட்டார்கள். இது இரண்டு முறை காலவரிடம் மாட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். ஒருமுறை வண்டியில் முன்விளக்கு (Headlight) போட மறந்தமைக்கும், மற்றொரு முறை 25mph சாலையில் 41mph வேகத்தில் சென்றமைக்கும் இருமுறை $50 அபராதம் விதித்தார்கள். எந்த தேதிக்குள் கட்டவேண்டும் என்று அபராத சீட்டில் குறிப்பிட்டிருப்பர், இதை பெரும்பாலும் இணையதளத்திலும், சிலமுறை நீதிமன்றத்திலும் சென்று செலுத்தவேண்டும்.


ஒருவேளை இரண்டு புள்ளிகள் கொடுத்து விட்டால் வண்டிக்கான மாத காப்பீட்டு தொகை அதிகரித்துவிடும். அதனால் இது வெறும் ஒருமுறை காவலருக்கு செலுத்தும் அபராதம் மட்டும் இன்றி, நமது காப்பீட்டையும் பாதித்து விடும், இதனாலேயே மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.

எதிரே வரும் வண்டி highbeamஇல் முன்விளக்கு போட்டுக்கொண்டு வந்தால் ஒருமுறை நம் highbeam விளக்கை போட்டு அணைத்தால் (blink) உடனே அவர்களின் highbeamஐ குறைத்துவிடுவார். 90% ஓட்டுனர்கள் இதை கடைபிடிப்பார். சில மடையர்கள் இங்கேயும் உள்ளனர்.

எங்கே எப்போது திரும்பினாலும் வண்டியின் indicator போடாமல் திரும்ப மாட்டார்கள். இந்நாட்டில் ஒலிபெருக்கி சத்தம் கேட்கவே முடியாது,  சொல்லப்போனால் ஒருவர் தம் வண்டியின் ஒலிபெருக்கியை மாத கணக்கில் எல்லாம் உபயோகப்படுத்தாமல் இருந்ததுண்டு. மிக சில சமயங்களில் மட்டுமே ஒலிபெருக்கி பயன் பட நேரிடும். மற்ற படி ஒலிபெருக்கி அடித்துவிட்டால் தமக்கு முன் செல்லும் ஓட்டுனருக்கு அது ஒரு அவமானம் நேரிட்டதுபோல இங்கே. அடடா நமக்கு horn அடிச்சிட்டானே, என்ன தப்பு பண்ணோம் என்று தோணும் அளவுக்கு இருக்கும்.


அதேபோல சாலையில் கண்ட இடத்தில் எல்லாம் வேகத்தடை கிடையாது, இதுபற்றி நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். எந்த ஒரு சாலையிலும் போக்குவரத்து காவலர் என்று ஒருவர் இருக்கவே மாட்டார். அப்படி ஒரு காவலர் இங்கு கிடையாது. மிக முக்கிய நேரங்களில் மட்டும்; ஏதேனும் வண்டி பழுது ஏற்பட்டாலோ, விபத்து நேரிட்டாலோ காவலர் வந்து வண்டிகளை நிறுத்தி அனுப்புவார், மற்றபடி போக்குவரத்துக்கு காவலர் என்று எந்த ஒரு சாலையிலும் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒவ்வொரு சாலையிலும் பகலானாலும் நள்ளிரவானாலும் signalஇல் சிகப்பு விளக்கு இருந்தால் வண்டிகள் நிறுத்தப்படும். மஞ்சள் விளக்கு வந்த உடனே வண்டியை நிறுத்திவிடுவார். கோட்டுக்கு முன் கூட மிக சில வண்டிகள் தான் நிற்கும்.

இதெல்லாம் இவர்கள் கடைபிடிக்க காரணம் உரிமம் வாங்கும்போதே விதிகளை படித்ததும், learners permit வாங்கும்போது வைத்த தேர்வும், மற்றும் சிறு வயதிலிருந்தே பெற்றோருடனும், மற்றவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தும் வளந்த விதம் தான். வாகனத்தினுள் உட்கார்ந்தவுடனேயே முதல் வேலை seat belt அணிவது, அணியாவிட்டால் வண்டியில் சத்தம் வந்துக்கொண்டே இருக்கும். முன்னிருக்கையில் இருக்கும் இருவரும் கட்டாயமாக அணியவேண்டும். (seat belt அணியாமல் யாரும் இருக்க மாட்டார்கள்), சில மாநிலங்களில் பின்னிருக்கையில் இருப்பவரும் அணியவேண்டும்.


நம் நாட்டில் என்ன விதிகள் இருக்கின்றது என்பது போக்குவரத்து காவலருக்கு கூட நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால் நாமெல்லாம் எங்கே விதிகளைப் படித்தோம், தேர்வு எழுதினோம்? எனக்கு நான் விவேகானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது அவர்களாகவே வந்து மாணவர்களுக்கு இலவச learners permit என்று கொடுத்தார்கள், எந்த வயதில் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டுமோ, அங்கேயே தேர்வு இல்லாமல் learners permit கொடுத்துவிடுகிறார்கள். பிறகு எங்கே விதிகளை மதிப்பது?

மூன்று மாதத்துக்குள் சென்று எனது நண்பன் கற்றுக்கொடுத்த வண்டியை எடுத்துக்கொண்டு சென்று; முதல்நாள் நாற்பது பேர் ஆச்சு நாளைக்கு வா என்று அனுப்பிவிடப்பட்டு அடுத்தநாள் சென்று ஏதோ ஓட்டி காட்டினேன், அவர்களும் சேரி இந்தா என்று உரிமத்தை கொடுத்தார்கள். எங்கடா கேமரா என்று தேடிக்கொண்டிருக்கும் போதே போப்பா போட்டோ எடுத்தாச்சு என்று "பே" என்று முழிக்கும் ஒரு கேவலமான போட்டோ கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் அனுப்பிவிட்டனர்.


ஆனால் இங்கு, learners permit இருந்தால் தான் வாகனம் ஓட்ட சொல்லிக்கொடுக்கும் நபர் வண்டியில் நம்மை அனுமதிப்பார். மற்றும் வண்டி ஓட்டிக்காட்டும் தேர்வு உள்ள அன்று நம்மை தவிர யாரும் DMV அலுவலகத்தில் பேசக்கூட முடியாது. நம் கூடவே DMV ஊழியர் உட்கார்ந்திருப்பார் அவர் சொல்லும் சாலையில் வண்டியை ஒட்டி காட்டவேண்டும், எந்த ஒரு தவருமின்றி ஓட்டினால் approved என்று உள்ளே அனுப்பிவைப்பார், உரிய கட்டணத்தை செலுத்தி படம் எடுக்க நின்றால், நமக்கு முன்னிருக்கும் computer monitorஇல் படம் தெரியும்,  பிடிக்கவில்லை என்றால் மற்றொரு முறை எடுப்பர்.

சில இடங்களில் சாலையில் "Deaf child in area", மான்கள் நடமாடும் இடம், கரடி நடமாடும் இடம், குதிரை செல்லும் இடம் என்று குறிப்பீடுகள் வைக்கப்பட்டிருக்கும். ஹா... எங்கள் ஓசூரில் யானைகள் நடமாடும் இடம் என்றே குறிப்பீடு உண்டு!

இது யானைகள் நடமாடுமிடம், இது எங்க ஓசூர்!
ஆக, மக்களுக்கு தேவையான அனைத்து குறிப்பீடுகளும் சாலையில் உண்டு, குறிப்பாக மேடு பள்ளம் அல்லாத சாலைகள் உண்டு, நாம் செல்லும் பாதையிலேயே எதிரே தடால் என்று வராத ஓட்டுநர்களும் அதற்கான விதிகளும் உண்டு, கண்டபடி horn அடிக்காத மக்கள், வண்டியை தேவை இல்லாமல் ஓரம் கட்டி கையேந்தாத காவலர், seat belt காவலருக்காக போடாமல், தமக்காக போடும் ஓட்டுனர்கள் என்று அடுத்தவர் வந்து விதிகளை சொல்லிக்கொடுக்க தேவை இன்றி தாமாகவே அனைத்து விதிகளையும் கடைபிடிக்கும் இந்த நாட்டின் மக்களை என்னவென்று சொல்வது? அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் என்று தான் சொல்லவேண்டும்!

அடுத்த அத்தியாயம் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளிவரும்.

இதுதாங்க அமெரிக்கா தொடர் மேலும் நான்கு அத்தியாயங்களுடன் முற்றுப்பெறும்.
Blogger Widget

புதன், 24 அக்டோபர், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு!

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்.  



அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இருக்க வேண்டிய ஆள்டா என்று கௌண்டமணியும்; அழகேசன் என்ற பெயரை பில்கேட்ஸ் போல ஆல்கேட்ஸ் என்று வைத்துக்கொண்டு  அமெரிக்காவுக்கு போக விசா அப்ளை செஞ்சிருக்கேன் இன்னும் கொஞ்ச நாள் தான், நான் அமெரிக்கா போகுற நேரம் நெருங்கிடிருக்கு என்று விவேக்கும் மற்றும் பல படங்களில் இப்படி அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது பற்றி நிறைய காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் வேறு நாடுகளைப் பற்றி பெரிதாக சொல்லாமல் அமெரிக்காவை மட்டும் இப்படி உயர்வாக கருதுகிறார்கள்? பணம் சம்பாதிக்கலாம் என்பதாலா? இதோ இந்த அத்தியாயத்தில் அமெரிக்காவில் வேலை செய்யும் அனுபவம் பற்றியும், பணியிடத்தில் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதையும் பார்க்கலாம்.

முதலில் நம் நாட்டிலிருந்து இங்கு வேலை பார்க்க வருபவர்களைப் பற்றி சுருக்கமாக ஒரு விளக்கம். நம் நாடு மட்டுமல்லாமல், உலகில் வேறு எந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைப் பார்க்க வரவேண்டும் என்றாலும் அதற்கு விசா வேண்டும். அந்த விசாவில் சில வகைகள் உண்டு, H1B, L1A, L1B, B1 போன்றவை அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு வகுக்கப்பட்ட விசாக்கள். இதில் ஒவ்வொரு வகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. B1 என்பது பிசினஸ் விசா, இதில் முந்தைய காலங்களில் (அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை) ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அமெரிக்காவில் வேலை காரணமாக தங்கியிருக்கலாம், அதற்கு பின் cooling period என்று தமது தாய் நாட்டுக்கு சென்று விட வேண்டும், இந்த cooling period மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லக் கூடாது என்பது பொருள் - ஆனால் இன்போசிஸ், TCS, Wipro போன்ற கம்பெனிகள் இதை தவறாக பயன் படுத்தியமையால் இப்போதெல்லாம் இந்த பிசினஸ் விசாவில் ஐந்து வாரம் வரை தான் அமெரிக்காவுக்கு பெரும்பாலும் வர முடியும்.

மற்ற மேற்குறிப்பிட்ட விசாக்களில் வருபவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை தான் தங்கியிருக்க முடியும். H1B விசாவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை தான் விண்ணப்பிக்க முடியும். உலகில் அனைத்து நாடுகளையும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு 65, 000 பேர் வரைதான் ஓர் ஆண்டுக்கு இந்த விசா வழியாக அமெரிக்காவுக்கு வர இயலும். இதுதவிர ஆண்டுக்கு 20, 000 F விசாக்கள் அனுமதிக்கப்படும் இந்த F விசா என்பது மேற்படிப்புக்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கானது. இந்த விண்ணப்பிக்கும் தேதி பெரும்பாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அறுபத்தைந்தாயிரத்தை தாண்டினால் லாட்டரி முறையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஓர் எண் கொடுக்கப்பட்டிருக்கும் அது கணினி வழியாக சீரற்ற முறையில் ஒரு 65,000 விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும்.
பி.கு: இப்படி ஒரு முறையில் நம் நாட்டில் ரோடு போடும் டெண்டர் விட்டால் எல்லா கான்ட்ராக்ட்டும் பழனிச்சாமியின் சம்மந்திக்கே போகாமல் வெளியாட்களுக்கும் செல்லும்.

அதே போல H1B, L1A, L1B விசாக்களும் அனைவருக்குமெல்லாம் கொடுக்கப்படாது, specialized skills என்று ஒரு குறிப்பிட்ட சில தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விசாக்கள் கொடுக்கப்படும். மேலும் இது அனைவரும் எளிதாகவும் விண்ணப்பிக்க இயலாது. அமெரிக்க விசா என்பது இங்கே இருக்கும் ஒரு கம்பெனி தனக்கு வேண்டிய வேலையை செய்ய அமெரிக்காவிலேயே ஆள் கிடையாது அதனால் நான் வேறு நாட்டிலிருக்கும் திறமைசாலிகளை அந்த வேலை செய்து முடிக்கும் வரை எனது நாட்டுக்கு நான் அழைத்துக்கொள்கிறேன், அந்த நபர் இங்கு வந்து வேலை செய்ய நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று sponsor செய்யவேண்டும், அப்படியாக அந்த வேளைக்கு ஏற்ற அனுபவமும், திறமையும் உண்டு என்று பத்தாவதிலிருந்து, +2, கல்லூரி, இதற்கு முன் வேலை பார்த்த கம்பெனி என்று அனைத்து ஆவணங்களையும் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பும் முன் அவரவர் வேலை பார்க்கும் கம்பெனிகள் அதை ஒரு முறை சரிபார்த்து பின் அ.தூ-க்கு அனுப்பிவைப்பார்கள். பின் அவரவர் மாநிலத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட அமெரிக்க தூதரகத்துக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். அங்கே இருக்கும் அமெரிக்கர்கள் அவரவர் விண்ணப்பத்துக்கு ஏற்ப கேள்விகளை கேட்பார்கள், நாம் அமெரிக்கா செல்ல திறமையானவர்கள் என்று அவர்களுக்கு பட்டால் மட்டுமே approved என்று நம் பாஸ்ப்போர்ட்டில் ஒரு சீல் அடிப்பார்கள், பின் நமது படம் போட்டு எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை நாம் அமெரிக்காவில் இருக்கலாம் என்று ரேஷன் கார்டில் இருப்பது போல ஒரு பக்கத்தை நமது பாஸ்ப்போர்ட்டில் அச்சடித்து கொடுப்பார்கள் - இதற்கு பெயர் தான் விசா.

தற்சமயம் இந்தியாவிலிருந்து ஒருவர் அமெரிக்காவுக்கு வருவது என்பது ரெட்டை குழந்தைப் பெற்றெடுப்பது போல. மிக கடினமான ஒன்று. பல கட்ட தடங்கல்களை தாண்டி தான் வர இயலும்.
சரி, விசா பற்றி பார்த்தாச்சு. இங்கே வேலைபார்க்குமிடம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

காலை ஆறு மணி முதலே பேருந்து, ரயில், கப்பல் (Ferry), கார் என்று எல்லாமே பரபரப்பாக இயங்க தொடங்கிவிடும். காலை ஏழு மணி முதல் பத்து மணிவரை நெரிசலாக இருக்கும். பேருந்திலிருந்து இறங்கி பத்து நிமிடம் எனது அலுவலகத்துக்கு நடந்து செல்லும் வழியில் உலகையே பார்த்துவிடலாம். அமெரிக்கர்கள், இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ஐரோப்பியர்கள் என்று உலக மக்கள் அனைவரும் சங்கமித்திருக்கும் இடம் தான் அமெரிக்கா, குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியா (இதுதான் நமக்கு தெரிந்த தெரியாத அனைத்து மென்பொருள் நிறுவனங்களின் பிறப்பிடம்), லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள். இங்கே தான் அனைத்து வித கம்பெனிக்களும் இருக்கும். இது தவிர இருக்கும் மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஒன்றிரண்டு பெரிய கம்பனிகள் இருக்கும்.

நம் ஊரில் கழுத்தில் ஒரு கயிறில் நமது அடையாள அட்டையை நாள் முழுதும் தொங்க விட்டிருக்க வேண்டும், சிலர் இடுப்பில் தொங்க விட்டிருப்பார், இங்கே அது தேவை இல்லை. பாக்கெட்டினுள் வைத்திருந்தால் போதும், ஏனென்றால் அலுவலக அக்கதவுகள் திறக்க அந்த அடையாள அட்டையை பயன் படுத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் மேனேஜர் போல இந்த நாட்டு மேனேஜர் ஒருவர் அலுவலகம் நுழைந்தவுடன் கடிகாரத்தை பார்ப்பதோ, ஏன் லேட்டு என்பது போன்ற கேள்விகளை கேட்கமாட்டார்கள். அவர் வேலையை அவர் பார்த்துக்கொண்டிருப்பார், நாமும் நம் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும், அவ்வளவு தான்.

நம் ஊரில் இருக்கும் கம்பெனிகளில் பொதுவாக காலை அலுவலகம் சென்ற உடன் பையை வைத்துவிட்டு ஒரு மணிநேரம் டிபன் சாப்பிட செல்வது, பின் இருப்பிடம் வந்து கணினியில் செய்தி படிப்பது, பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, மீட்டிங் என்று சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பில் சேர்ந்து அதை muteஇல் போட்டுவிட்டு முகநூலை நோண்டுவது, மதியம் ஒரு மணிநேரம் உணவு விடுப்பு எடுப்பது, பின்னர் ஒப்புக்கு ஒரு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் டீ பிரேக் என்று ஒரு அரை மணிநேரம் வெளியில் சென்று விட்டு வந்து அப்போது தான் வேலைக்கு வந்தது போல சில நேரம் வேலை பார்த்துவிட்டு எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் பெரும்பாலானோர் வேண்டுமென்றே ஏழு மணி வரை உட்கார்ந்துவிட்டு மேனேஜரிடம் நல்ல பெயர் எடுப்பதாக நினைத்து லேட்டாக வீட்டிற்கு செல்வது. அந்த மேனேஜரும் எதற்கு உட்கார்ந்திருக்கிறோம் என்று தெரியாமல் உட்கார்ந்து client இடம் நல்ல பெயர் வாங்குவதாக நினைத்துக்கொள்வார். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்று இவனால் அவன் லேட்டா வீட்டுக்கு போவான் அவனால இவன் லேட்டா வீட்டுக்கு போவான். (முட்டா பசங்க!)

பி.கு: சரி நீயும் அந்த கும்பல்ல ஒன்னு தான என்று உங்களுக்கு தோணலாம், மேற் கூறியவை  பொதுவாக பெரும்பாலானோர் பின்பற்றுவது. எனது மானேஜர் மும்பையிலும் நான் பெங்களுருவில் இருந்தமையால் நானே ராஜ நானே மந்திரி!

சரி, இங்கே எப்படி என்று பார்ப்போம். இங்கே பல நாட்டினர் பல ஆண்டுகளாக வேலை பார்ப்பதால் வேலை செய்யுமிடத்தில் அனைத்து நாட்டினரும் கலந்திருப்பர். அமெரிக்க நபர் மானேஜராக இருந்தால் எந்த தொல்லையும் இருக்காது. தாம் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது நமது வேலையை, அந்தந்த வேலை குறிப்பிட்ட நேரத்தில் முடிய வேண்டும். எந்த நேரத்துக்கு வருகிறோம் எந்த நேரத்துக்கு செல்கிறோம் போன்றவற்றில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள், அதே போல யாரும் அனாவசியமாக தாமதமாக வருவதோ சீக்கிரமாக செல்வது போன்றவையும் செய்ய மாட்டார்கள். ஒன்பது மணிக்கு வந்து டான் என்று ஐந்து மணிக்கு கிளம்பிவிடலாம், இன்னும் சொல்ல போனால் நான்கு ஐம்பத்தி எட்டுக்கு பிசியாக பார்த்த ஒருவரை ஐந்து மணிக்கு பார்க்க முடியாது, அரை குறையாக கிளம்ப மாட்டார்கள், ஆனால் அதற்கு ஏற்றார் போல வேலையை திட்டமிட்டு முடித்துவிட்டு செல்வர். சரியான நேரத்துக்கு நம் ஊரில் கிளம்பினாள் ஏதோ தவறியழைத்தது போல பார்ப்பார், ஆனால் இங்கே அப்படி இல்லை. இந்த குழாயடியில் வம்பு பேசுவது போன்ற செயலிலெல்லாம் யாரும் ஈடு படமாட்டார்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று போய்க்கொண்டே இருப்பார்கள்.
உடன் பணிபுரியும் ரஷ்ய, சீன, அமெரிக்க நண்பர்கள்.
ஆனால்.... ஹ்ம்ம் ஆனால்... இதே இந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக ஒரு இந்தியரே மானேஜராக வந்துவிட்டால் அங்கே  வலி தான். அணைத்து இந்திய மேனேஜரும் அப்படி என்று சொல்லி விடமுடியாது, இங்கேயே பிறந்து வளைந்த இந்திய வம்சாவெளியை சேர்ந்த அமெரிக்கராகட்டும், அல்லது பள்ளி, கல்லூரி சமயத்தில் இங்கே வந்து பின் பல ஆண்டுகள் இங்கேயே அனுபவம் பெற்று மானேஜராக ஆனா நபர்கள் அமெரிக்கர்களை போல தான் சிந்திப்பர், நடந்துக்கொள்வர். ஆனால் நம் நாட்டிலிருந்து ஒரு நாற்பது வயதுக்கு மேல் அல்லது நம் ஊர் அலுவலக கலாச்சாரத்திலேயே  நபர் மானேஜராக வாய்த்தால் அவ்வளவுதான். அமெரிக்கா வந்தது போலவே இருக்காது. இது போன்ற சில இந்திய மேனேஜர்களால் அமெரிக்கர்களும் கூட இந்தியர்கள் கண்டா நேரத்திலெல்லாம் வேலை செய்வதால் அவர்களும் அபப்டி செய்யவில்லை என்றால் அவர்களுடைய வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்களும் தாமதமாக செல்வது மற்றும் வீட்டிற்கு சென்ற பின்னரும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்புவதாக வேறு மாநிலங்களில் வேலை செய்யும் எனது நண்பர்கள் பிரவீன் மற்றும் கெளதம் சொல்ல கேட்டு அமெரிக்கர்களின் மேல் பரிதாபம் தான் வந்தது.

இங்கே பெரும்பாலானோர் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் அலுவலகத்தில் அனைவரிடமும் சரிசமமாக பழகுவர். யார் எந்த பதவியிலிருக்கிறார் என்று பாராமல் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவார்கள். நான் வேலை பார்க்குமிடத்தில் எங்கள் கம்பெனி Vice President மற்றும்  எங்கள் அலுவலகம் சுத்தம் செய்யும் நபர் இருவரும் தாங்கள் அந்த வார இறுதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பற்றி சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தனர். இதே நம் ஊரில் பெரும்பாலான கம்பெனிகளில் நம் மேனேஜருக்கு அடுத்த இடத்தில் இருப்பவரே நம்மிடம் பேச மாட்டார்கள்.

அதே போல பல கம்பெனிகளின் முதலாளிகள் கூட நியூயார்க்கில் பேருந்து, ரயில் என்று பொது வாகனங்களில் தான் பெரும்பாலும் பயணிப்பர். சாலையோரம் இருக்கும் food cart மற்றும் பொதுவான உணவகங்களில் மதிய உணவுக்கு செல்வர்.

இது தவிர அமெரிக்காவில் வேலை செய்பவர், அதாவது எந்த வேலை செய்பவரானாலும் அதை பெருமையாக தான் செய்கிறார்கள். காபி கடையில் வேலை பார்ப்பவராகட்டும், துணிக்கடையில் வேலை பார்ப்பவராகட்டும், ரோட்டில் பேப்பர் விற்பவராகட்டும், காவலராகட்டும், தீ அணைப்பு வீரராகட்டும், விவசாயியாகட்டும் (சும்மா சொல்ல வேண்டுமே என்று சொல்லவில்லை, சில உழவர்களிடம் பேருந்தில் பேசியிருக்கிறேன்), சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து ஓட்டுநராகட்டும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தங்கள் வேலையை செய்வர்.

சாலையை சுத்தம் செய்பவராகட்டும், பேருந்து நிலையங்களில் கழிப்பறையை சுத்தம் செய்பபவராகட்டும் அவர்களுக்கென்று கண்ணியமான சீருடை கொடுக்கப்பட்டிருக்கும், எல்லோருமே ஷூ தான் போட்டுக்கொண்டிருப்பர். கையில் gloves, சாலையில் வேலை செய்பவர்கள் reflector அணிந்திருப்பார். இப்படி அவர்களை மரியாதையாக அவர்களின் பணியாளர்கள் நடத்துகிறார்கள், அவர்களின் சம்பளம் அவர்களின் ஆடைகளில் பிரதிபலிக்காது.

படம்: நானே தான்! உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா என்றேன், தாராளமாக என்றார்.
இதோ இந்த படத்தில் இருப்பவர் ஸ்டீவ் மேக்கயா, இவர் சாலையில் செய்தித்தாள் விற்பவர் என்றால் நம்ப முடிகிறதா? இவரை கடந்து தான் தினமும் எனது அலுவலகம் செல்வேன், இருவரும் காலை வணக்கம் பரிமாறிக்கொள்வோம். ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து நான் கண்டதில்லை. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்றோ, செய்தித்தாள் விற்பவர் என்றோ அவர் முகம் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை, கம்பீரமாக தனது சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். மழையிலும் அதே கம்பீரத்துடன் உட்கார்ந்திருந்தது சென்ற வாரம் கூட கண்டேன். உலகின் மிக stylish ஆனா பேப்பர் விற்பவர் என்றுகூட இவரை கூறலாம். இவரைப் பற்றிய செய்தி ஒன்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூட வந்திருக்கிறது.

அதே போல முடி திருத்தும் இடத்திலாகட்டும், துணிக்கடையிலாகட்டும் ஏதேனும் வாங்கும் போது நாம் வாங்கும் விலையை விட குறைவாக வாங்குவதற்கான கூப்பன், அல்லது தள்ளுபடிக்கான வேறு வகைகள் இருந்தால் பல தடவை அவர்களே எனக்கு சொல்லியிருக்கிறார்கள், அதற்கு பதில் அது வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு நிமிடம் இருங்கள் வருகிறேன் என்று நான் கேமரா வாங்க சென்ற போது ஒரு ஊழியர் சொன்னார் - இந்த காமெரா அடுத்த வாரம் தள்ளுபடி விலையில் விற்கப் பட இருக்கிறது, நீங்கள் அடுத்த வாரம் வாங்கினால் பணம் சேமிக்கலாம் என்று. எனக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்!

நம் நாட்டில் துணிக்கடையில் வேலை பார்க்கும் பக்கத்து தெரு பையன் தானே கடைக்கு முதலாளி என்று நினைத்துக்கொண்டு அதெல்லாம் முடியாது என்று கறாராக பல முறை நடந்துக்கொண்டது உண்டு. ஆனால் இங்கோ, முதலாளியும் கூட தன்னை தொழிலாளியாக தான் நடத்திக்கொள்கின்றனர். இதற்கு இலான் முஸ்க் (Elon Musk) என்பவரே மிக முக்கிய கண்கூடான எடுத்துக்காட்டு. Elon Musk என்பவர் இக்கால இளைஞர்கள் (நான் உட்பட) ஹீரோவாக பார்க்கப்படும் ஒரு நபர். தமது சிறு வயது முதலே பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இப்போது எலக்ட்ரிக் கார்களுக்கு புத்துணர்ச்சியுடன் புதுப்பொலிவு கொடுத்து உலகில் உள்ள அனைத்து பெரும் கார் நிறுவனங்களும் இவர் ஒருவராலேயே அவர்களும் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்க ஆரமித்துள்ளனர். அபப்டி பட்ட ஓவர் கடந்த சில மாதங்களாக தமது நிறுவன தயாரிப்பில் சற்று பின்தங்கியது மற்றும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட சமயத்தில் மற்ற தொழிலாளர்களுடன் தாமும் கம்பெனியிலேயே சில வாரங்களாக தங்கி வேலை செய்து இப்போது பழைய படி விறுவிறுப்பாக இயங்க தொடங்கியுள்ளது Tesla நிறுவனம்.

இப்படி வேலை செய்யுமிடத்தில் அறிவுக்கும், திறமைக்கு மதிப்பளிப்பது, பதவி பாராமல் அனைவரிடமும் சமமாக நடந்துக்கொள்வது, work life balance என்று தனி நபரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மதித்து வேண்டிய சமயத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது என்று வேறு நாட்டவர் என்று ஒதுக்காமல் நம்மையும் அவர்களுள் ஒருவராகவே மதித்து நமக்கும் முக்கியத்துவம் கொடுத்து தாமும் முன்னேறுவதால் தான் ஒவ்வொருவரும் அமெரிக்காவுக்கு வந்து வேலை பார்க்க துடிக்கின்றனர்.

பி.கு: ஏதோ எழுத மறந்தது போல தோணுகிறது... நாளை இரவு மீண்டும் இந்த அத்தியாயத்தில் சில கூடுதல் தகவல் எலினாலும் எழுதுவேன். சமயம் கிடைத்தால் இரண்டு நாள் கழித்து ஒரு முறை படிக்கவும். கூடுதல் தகவலை நீல நிறத்தில் எழுதுகிறேன், அதனால் முழுதையும் படித்து தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அடுத்த அத்தியாயம் விரைவில்...

மேலும் ஐந்து அத்தியாயங்களுடன் இதுதாங்க அமெரிக்கா தொடர் முற்றுபெரும்.

பி.கு: கருத்துக்களத்தின் எண்பத்தியொரு பதிவுகளில் முதல்முறையாக பின்குறிப்பு சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. (பி.கூவுக்கே பி.குவா என்கிறீர்களா!) 
Blogger Widget

செவ்வாய், 2 அக்டோபர், 2018

கனவு, ஏக்கம்!

கனவு:
இவனுக்கு சேகுவேரா ஆகணும்னு,
அவனுக்கு பிடல் காஸ்ட்ரோ ஆகணும்னு,
ஆறு, ஏழு பேருக்கு தான் தான் முதல்வராகணும்னு,
ஒருத்தனுக்கு பிரதமராகணும்னு,
இன்னொருத்தனுக்கு பிரதமராகவே இருந்துடணும்னு,
மதத்தையும், ஜாதியையும் பேசியே மக்களை முட்டாளா வைக்கணும்னு,
மேடைல விடற கதையை மக்கள் மறந்துடுவாங்கன்னு.

ஏக்கம் (மக்களுக்கு):
தரமான கல்வி கிடைக்காதான்னு,
பள்ளி, கல்லூரிகள்ல பீஸ்க்கு பதிலா சொத்தை எழுதி கேக்கறத நிறுத்த மாடங்களான்னு,
மதிப்பெண்ணை பார்க்காம, ஜாதி பாத்து காலேஜுல சீட்டு குடுக்கறத நிறுத்தமாட்டாங்களான்னு,
படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காதான்னு, 
படிச்சவன் அரசியலுக்கு வரமாட்டானான்னு,
சினிமா பைத்தியம் பிடிச்சு, அவன் சினிமாவுல நடிக்கிறத பாத்து மக்கள் ஏமாறாம இருக்க மாடங்களான்னு,
எப்படியாவது நாடு முன்னேறிடாதான்னு,
ஊழல் ஒழிஞ்சிடாதான்னு,
நல்லது நடந்துடாதான்னு,
கறுப்புப்பணம் திரும்ப வந்துடாதான்னு,
தூய்மை இந்தியா ஆகிடாதான்னு,
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைஞ்சிடாதான்னு,
இந்த சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு சுமையையம் மீறி எப்படியாவது வெயில்லயும், மழைலையும் நடந்து, ஓடி, வயசானாலும் சரின்னு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கடன் வாங்காம, வர வருமானத்தை வெச்சு எப்படியாவது மாசத்த ஓட்டிடணுமேன்னு,
பாங்குல லோன் வாங்கிட்டு திரும்ப குடுக்காம ஓடி போனவங்க கிட்டேர்ந்து அந்த பணத்த வசூல் பண்ணமாட்டாங்களான்னு,
(ஏன்னா) நம்ம பாங்கு கணக்குலேர்ந்து கம்மி காசு இருந்தா, ஏன் கம்மியா இருக்குனு பைன் போடாம, அச்சச்சோ கம்மியா இருக்கேன்னு பைன் போடாம விடமாட்டாங்களான்னு.
லட்ச கணக்கான கோடிகள்ல கொள்ளை அடிக்கிறவன் தண்டனை அனுபவிக்க மாட்டானான்னு.


Blogger Widget

திங்கள், 1 அக்டோபர், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்!

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் என்ன செய்வார்கள் என்று எழுத ஆரமித்தேன் (அடுத்த அத்தியாயம்), ஆனால் அதற்கு முன் எப்போதெல்லாம் இங்கே விடுமுறை, எந்தந்த நாட்களில் விடுமுறை என்பது பற்றிய விவரத்துடன் இந்த அத்தியாயம் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த தொடர் எழுத ஆரமித்தபோது எனது அக்கா ராதிகா, இங்கே முக்கிய கொண்டாட்டமான Thanks Giving பற்றி எழுத சொன்னார். அது பற்றி எழுத இப்போதுதான் சமயம் வந்துள்ளது.


நம் நாட்டிற்கும் இந்நாட்டிற்கு என்ன வித்தியாசம் என்று ஒரு வரியில் சொல்லப் போனால், இவர்கள் நமக்கு வேலை கொடுப்பவர்கள், நாம் வேலை செய்பவர்கள் (கூடிய விரைவில் இது விவசாயத்தில் நேர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!). இந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு (உலகில் வேறு நாடுகளுக்கும் கூட...) ஒரு வேலையை குடுத்து, இதை எனக்கு சில மாதங்களில் முடித்துக்கொடு, அல்லது எனது இந்த வேலைகளை இத்தனை ஆண்டுகளுக்கு பராமரித்துக்கொடு என்று நம் நாட்டில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, TCS, காக்னிசண்ட் போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும், நம் நாட்டில் உள்ள நம் மக்கள் கல்லூரி முடித்தவுடன், கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும், அதாவது பொறியியல் (Computer Science, Mechanical Engineering, Textie Engineering, Electrical Engineering, Aeronatical Engineering, Marine Engineering) என்று எந்தப் படிப்பை படித்திருந்தாலும் இந்த நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பார்கள் (இது பற்றி விரிவாக அத்தியாயம் 16இல்!).

நம் நாட்டிலேயே இருந்தாலும் இந்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பதால் அவர்கள் கடைபிடிக்கும் விடுமுறையை தான் நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் கடைபிடிக்கும், அதில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் அமெரிக்க விடுமுறை நாட்களில் தான் விடுமுறை கிடைக்கும். நம் பண்டிகை நாட்களில் நம்மால் விடுமுறை எடுக்க முடியாது பெரும்பாலும், ஆனால் அமெரிக்க விடுமுறை நாட்களில் நமக்கு விடுமுறை கிடைக்கும். பெங்களூரில் உள்ள தமிழகம், கேரளா செல்லும் பேருந்து நிறுவனங்கள் அமெரிக்க விடுமுறை நாட்காட்டியை வைத்திருப்பார்கள். தீபாவளி பொங்கல் சமயத்தில் பேருந்தில் விலை ஏற்றுவதைப்போல அமெரிக்க விடுமுறையை ஒட்டி வரும் வாரயிறுதிக்கும் பேருந்தில் விலை ஏற்றுவார்கள் தெரியுமா?

அமெரிக்காவில் ஓர் ஆண்டில் பத்து நாட்கள் தான் அரசு விடுமுறை. இந்த விடுமுறை நாட்களும் எப்படி அமைந்திருக்கும் என்றால், மக்கள் கொண்டாடும் விதமாக திங்கள், வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வரும் விதமாக அமைந்திருக்கும். நம் நாட்டில் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையில் வந்தால் அவ்வளவு தான்... "அடச்சே... ஒரு நாள் தள்ளி வந்துருக்கக் கூடாதா... ரெண்டு நாள் சேர்ந்தாற்போல லீவு கிடைச்சிருக்குமே" என்று சலித்துக்கொள்வோம். ஆனால் இங்கே பண்டிகை (அமெரிக்க சுதந்திரதினம், கிருஸ்துமஸ் தவிர...) வார நாட்களில் வந்தால், அந்த வார வெள்ளிக்கிழமையோ அல்லது திங்கட்கிழமையோ அந்த விடுமுறை அனுசரிக்கப்படும். இதனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை கிடைக்கும்.

இதோ, இது இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டின் விடுமுறை நாள் பட்டியல்... இதில் தேதியில் வித்தியாசம் இருந்தாலும் வார நாளைப் பார்த்தல் பெரும்பாலும் திங்கட்கிழமையில் விடுமுறை இருக்கும்.


இது விடுமுறையின் வழிமுறை, எந்தெந்த விடுமுறை எந்த நாளில் வர வேண்டும் என்று, நாள் முறையில் அனுஷ்டிக்கப் படும், நீண்ட விடுமுறை கிடைக்கும் என்பதனால்.

பொதுவாகவே அமெரிக்காவில் பல நிறுவனங்களில் விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாளில் மதியம் மூன்று மணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். மேலும் Summer Fridays என்று கோடை காலத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் மூன்று, சில நிறுவனங்களில் மதியம் ஒருமணிக்கே வீட்டுக்கு சென்று விடலாம். இது பெரும்பாலும் Memorial Day தொடங்கி Labor Day வாரம் வரை இருக்கும். கோடை காலத்தின் முதல் நாள், குளிர்காலத்தின் முதல் நாள், இலையுதிர் காலத்தின் முதல் நாள் என்று இங்குள்ள நாள்காட்டியை குறிப்பிட்டிருக்கும்.
இது தவிர மாநில அளவில் சிறு வித்தியாசத்தில் ஒன்றிரண்டு விடுமுறை இருக்கும். மொத்தம் ஐம்பது மாநிலம் இருப்பதனால் சில மாநிலங்களில் நியூயார்க்கில் இருக்கும் விடுமுறை அன்று அட்லாண்டாவில் விடுமுறை இருக்காது, அங்கே விடுமுறை இருக்கும் நாளில் நியூயார்க்கில் விடுமுறை இருக்காது. ஆனால் எது எப்படியோ ஆண்டில் மொத்தம் பத்து நாட்கள் தான் விடுமுறை இருக்கும், அதன் படி கூடி கழித்து கணக்கு சரியாக வரும்படி பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், சில நிறுவனங்கள் அந்த ஆண்டு வருமானம் லாபகரமாக இருந்தால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் முதல் புது வருடம் வரை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் விடுமுறை கொடுத்து வேலை பார்ப்பவர்களை மகிழ்விப்பார்கள்.

ஜூலை 4 மற்றும் புது ஆண்டை ஒட்டி அன்றைய தினங்களில் எங்கெங்கும் வாணவேடிக்கை, பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி இருக்கும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை காண அந்தந்த இடங்களுக்கு சென்று கண்டு ரசிப்பர்.

கொட்டும் மழையில் வானவேடிக்கை! (அதெப்படி மழையில பட்டாசு வெடிக்குது?!)

இந்த ஆண்டு அமெரிக்க சுதந்திர தினத்தன்று நடந்த வானவேடிக்கை. இதன் முழு காணொளி எனது YouTube சேனலில் உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் பார்க்கவும்.
மேலே குறிப்பிடாத, ஆனால் விடுமுறையில் வராத நாட்கள் சில பல உள்ளன. குறிப்பாக St.Patricks Day, Easter, Halloween போன்றவை. St Patricks Day அன்று நியூயார்க்கில் ஊர்வலம் செல்வார்கள். அன்றைய தினம் அனைவரும் பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருப்பார்கள், பச்சை தொப்பி, பச்சை பலூன் என்று பச்சை பச்சையாக ஊர்வலம் (எந்த உள் அர்த்தமும் இல்லை) வருவார்கள்!

Halloween அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரும். இதுதான் திகிலான (சும்மா லுலுலுவே) கொண்டாட்ட நாள். அன்றைய தினம் அனைவரும் பேய் போல, பேர் விரட்டுபவர் போல, எலும்பு கூடு போல, முகத்தில் ரத்தம் வருவது போல என்று கன்னாபின்னாவென்று makeup செய்துக்கொண்டு இருப்பார்கள். அன்றைய இரவு பெரும்பாலான ஊர்களில் ஊர்வலம் நடக்கும். விதவிதமாக வேடம் அணிந்தவர்கள் இசையுடன் பேரணி வருவார்கள், இதை பார்த்து ரசிக்க ஊரே திரண்டு போகும். நியூயார்க்கில் இது மிக பிரபலம். இந்த Halloween கொண்டாட காரணம் அந்தக் காலங்களில் பேய் விரட்டுபவர்களை கவுரவிக்கும் பொருட்டு இந்த அக்டோபர் 31 ஆம் பிரிட்டன், அமெரிக்க போன்ற நாடுகளில் இதை அனுஷ்டிக்கிறார்கள். இந்த மாதம் எங்கு காண்டாலும் பூசணிக்காய் மற்றும் ஆரஞ்சு நிறமாக இருக்கும் அமெரிக்கா. அதாவது halloween சமயம் இங்கே இலையுதிர் காலம், கோடையின் வெப்பத்திலிருந்து குளிர்காலம் ஆரமிக்கும் சமயம், குளிரின் தன்மையால் மரங்களிலுள்ள இலைகளெல்லாம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு நிறமாக மாறும் காலம். இதை குறிக்கும் மற்றும் கொண்டாடும் விதமாக எங்கு காணிலும் ஆரஞ்சு நிற அலங்காரங்கள் இருக்கும். சோளக்காட்டு பொம்மை போல அனைவரது வீட்டின் முன்பும் வைக்கோல் போற்றிய பொம்மைகள் நிறுவப்பட்டிருக்கும், பூசணிக்காயை முகம் போல கீறி அதனுள் விளக்கேற்றி அல்லது மின்சார விளக்குகளால் அலங்கரித்திருப்பர். கடைகளில் பூசணிக்காய் காபி (ஹாஹா ஆமாம், Pumpkin latte!), பூசணி doughnut, பூசணி ஜூஸ் (pumpkin cider) என்று எங்கு காணிலும் பூசணி மயம் தான்!

நம் தமிழகத்தில் தான் இன்னும் கடவுளே இல்லை என்று சத்தமாக வெளியே வாய் கிழிக்க பேசிவிட்டு, சத்தம் போடாமல் வீட்டுக்குள் சென்று சாமியிடம் CM ஆக்கிவிட்டுடு என்று பம்பும் கூட்டம் உள்ளது, இங்கே அப்படி இல்லை. (யாருக்காக யார் கிட்ட பேசுறானுங்கன்னு அவனுங்களுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது!)


இப்படித்தான் கடைகளில் halloweenகான பொம்மைகள் விற்கப்படும்.

  

மேலும் street fair என்று கோடை, இலையுதிர் காலங்களில் அந்தந்த ஊர்களில் தெருக்களில் கடைகள் வைத்து, ஆட்டம் பாட்டத்துடன்  கொண்டாட்டமாக இருக்கும். இது நம்மூர் திருவிழாவுடன் ஒப்பிட்டால் இவர்களை பார்க்க பாவமாக இருக்கும், ஆனால் இவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம் அவ்வளவுதான்! ஒன்னும் இல்லை, நேற்று ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கினேன், ஹ்ம்ம்... ஒண்ணுமே இல்லை அதில்! நம்மூரில் பஞ்சுமிட்டாய் வாங்கினால் அவ்வளவு அடர்த்தியாக பெரிதாக இருக்கும், ஆனால் இங்கோ மெலிந்து மிக சிறியதாக இருக்கும், அதாவது இது ஒரு உதாரணம், நம் நாட்டில் நாம் அனுபவித்த திருவிழாவில் அரைப்பங்கு கூட இருக்காது, இவர்களுக்கு இதுதான் உலகம் என்பதால் அதை மகிழ்ந்துக் கொண்டாடுகின்றனர்!

நியூயார்க் நகரில் நடந்த ஒரு street fair இல் எடுத்த படம்.
Thanks Giving நவம்பர் மாதம் கடைசி வியாழன், வெள்ளி கொண்டாடப்படும். இது முதன்முதலில் 1621ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அமெரிக்காவுக்கு வந்த பின்னர் செய்த அறுவடை நாளைக்குகிரிக்கும் விதமாக கொண்டாடுவது. பின்னர் அன்றைய தினம் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய உணவில் வான்கோழியை சமைத்து உண்பார்கள், இதை grand feast என்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் வெவேறு இடங்களில் வசிக்கும் நபர்கள் புறா கூட்டிற்கு திரும்ப வருவது போல, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி விருந்துண்ணவர். இந்த Thanks Giving தினத்தன்று பெரிய நகர்களில் நம் ஊரில் பல்லக்கில் விதவிதமாக கடவுள்களை அலங்கரித்து கொண்டு வருவது போல, பொம்மைகளை, பலூன்களை அலங்கரித்து பேரணியாக கொண்டு செல்வர். அதை பார்க்க பெரும் திரளாக மக்கள் வந்து கண்டு ரசிப்பர். இதையொட்டி வருடா வருடம் நான்கு நாள் விடுமுறை கிடைக்கும்.

ஹ்ம்ம்... இப்படி ஒரு புது பண்டிகை நம் நாட்டுக்கே இப்போது வேண்டும் என்று நினைக்கிறன்... நம் நாட்டிலேயே இப்போதெல்லாம் எங்கே பண்டிகை நாட்களுக்கு எல்லோரும் வீட்டில் இருக்கிறோம்? ஒன்று ஊரில் இருந்தாலே நம்ம பண்டிகைக்கு லீவு கிடையாது என்று அலுவலகத்தில் சொல்லிவிடுவார்கள், இல்லை என்றால் இப்படி வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலத்துக்கும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுக்கு சென்று கொண்டாடுவதே குறைந்து விட்டது!






கிறிஸ்துதாஸ், புது வருடம் என்று வந்துவிட்டால் ஊரே கலைக்கட்டிவிடும், எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள், அலங்காரங்கள், இசை என்று அற்புதமாக இருக்கும். குறிப்பாக நியூயார்க் அலங்காரத்தில் ஜொலிக்கும். இந்த சமயங்களில் தான் இங்கே பனி பொழியும் காலம், எங்கு கண்டாலும் பனிபடர்ந்த வெளியிலும், சாலையிலும் வண்ண விளக்குகளும், சிகப்பு அலங்காரங்களும் நிறைந்திருக்கும் காட்சிகளை பார்க்கும்போது ஏதோ அனிமேஷன் படம் பார்ப்பது போல இருக்கும்.

இந்த மின் அலங்காரம் ஒரு கட்டிடத்தில் நவம்பர் மாதம் thanks giving முதல் புத்தாண்டு வரை ஒவ்வொரு கால் மணிநேரத்துக்கும் நடக்கும். இதன் காணொளி கீழே.



எவ்வளவு பனி இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்வார்கள், தேவாலயம், இசை நிகழ்ச்சிகள் என்றும் புது ஆன்டு பிறக்கும்முன் டிசம்பர் 31ஆம் தேதி இரவில் நியூயார்க் நகருக்கு உலகில் பல இடங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து BallDrop கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள்.

Balldrop என்பது நமது தேசியக்கொடியை கம்பத்தில் கீழிருந்து மேலே ஏற்றுவோம் அல்லவா? அதுபோல, டிசம்பர் 31 மாலை ஆறு மணிக்கு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் (Timessquare) பெரிய கட்டிடத்தின் மேலே, ஒரு கம்பம் இருக்கும், அந்த கம்பத்தில் கொடிக்கு பதிலாக ஒரு பெரிய 13 டன் எடை கொண்ட மினுமினுக்கும் பந்து வடிவில் படிகக்கல்லை (Crystal Ball),  ஏற்றுவார்கள், பின் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் அந்த கட்டிடத்தின் மேலிருந்து பட்டாசு வெடிப்பார்கள் (ஒரு மணி நேரம் என்பதை குறிக்க) பின் சரியாக 11:59:50 நொடிகள் இருக்கும்போது அங்கிருக்கும் பெரிய திரைகளில் 10, 9, 8, 7 என்று அன்றைய ஆண்டின் இறுதி பத்து நொடிகள் அடிக்கும் போது அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த எண்களைக் கூறி கத்தி ஆர்ப்பரிக்க ("வெற்றி வேல்...வீர வேல்..." என்று கந்தன் கருணை படத்தில் போர் காட்சில் வரும் காட்சி போல) சரியாக 12:00 மணிக்கு அந்த கம்பத்தில் ஏற்றிய பந்தை கட்டிடத்தின் மேலுள்ள கம்பத்தின் கீழ் பகுதிக்கு வரும் படி இறங்குவார்கள். இதுதான் balldrop, நமக்கு கேட்கவும் பார்க்கவும் இது சிரிப்பாகவும், இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றிருக்கும், ஆனால் இம்மக்கள் அதை மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

ஆக பண்டிகைகளை அமெரிக்க தொலைக்காட்சியில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன.... மாலை ஆறு மணிக்கு....  என்றெல்லாம் நம் போல தொலைக்காட்சிக்கு அடிமை ஆகிவிடாமல், பண்டிகை தினங்களை வெகு சிறப்பாகவும் எவ்வளவு குளிர், பனி இருந்தாலும் வெளியே சென்றும், குடும்பத்துடன் இணைந்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget