-->

வியாழன், 23 அக்டோபர், 2014

சினிமா பைத்தியம்...!

சினிமா... நினைவு தெரிந்த நாளிலிருந்தே எல்லோருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். சிலருக்கு சில வருடங்களில் அலுத்து போகும், பலருக்கு சினிமா மீதான மோகம் பெருகிக்கொண்டே போகும்.

வீட்டில் தொலைகாட்சிப் பெட்டி இல்லாத காலங்களில் வாரம் ஒரு முறை, அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை நம்மை, பெற்றோர் திரை அரங்கிற்கு அழைத்து செல்வர்.

1.50, 2.50 க்கு சினிமா டிக்கெட் வாங்கியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், இன்று ஒரு நபருக்கு வாங்கும்  டிக்கெட் விலையில், அன்றைய காலங்களில் ஒரு வருடம் முழுதும் படம் பார்த்து விடலாம். இப்போது விலைவாசியை பற்றி விரிவாக பேசப் போவதில்லை.

சினிமா, வாழ்வில் ஒரு அங்கம் என்று ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் சினிமா செய்திதான், இப்போது விளம்பரங்களிலும் சினிமா காட்சிகள் பெரிதாக பயன் படுத்த படுகிறது. சில ஆண்டுகளாக சினிமா ஒரு முக்கியமான விஷயமாகவே மாற்றப் பட்டுள்ளது.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் மற்றும் சில பண்டிகை தினங்களில் தான் புதுப் படம் வெளியாகும். இப்போது வாரம் ஒரு படம் வெளியாக வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையே வெளியிட்டுள்ளது.

நீங்க வெளியிடுங்க , வெளியிடாம போங்க... இப்போது அவர்களுக்கு அல்ல இந்த பதிவு, இதை படிக்கும் உங்களுக்கு தான்.

ஒரு படம் தயாரிப்பு வேலை ஆரம்பம், என்று அறிவிப்பு வெளியானவுடனேயே முகநூளில் அந்த படத்திற்கு ஒரு பக்கத்தை ஆரமித்து, அந்தப் படம் திரைக்கு வரும் வரை அடிக்கடி ஒரு still, poster வெளியிட்டு அந்த பட வலையிலேயே ரசிகர்களை சிக்க வைப்பது ஒரு வழக்கமாகிவிட்டது.

நேரில் முன் பின் பார்க்காத திரையில் மட்டுமே பார்க்கப்படும் ஒரு கதாநாயகனுக்காக, எங்கேயோ இருக்கும் வேறு பல முன் பின் பார்த்திராத நபர்கள் இழிவாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வது அநாகரிகமாக உள்ளது.

யாரோ ஒரு நடிகர், தன் பிழைப்பிற்காக நடிக்கிறார், அவரை பிடித்த ஒரு கூட்டம், பிடிக்காத ஒரு கூட்டம், ஏதோ இரு நாடுகளுக்கிடையே போர் நடப்பது போல நாள் தோறும் பல மணிநேரம் இதிலேயே செலவழிக்கும் நேரத்தை வேறு எத்தனையோ முக்கியமான விஷயங்களுக்காக செலவிடலாம்.

இப்போது இருக்கும் சூழலில், ஒருவர், புதிதாக வெளியாகிக்கொண்டிருக்கும் படத்தை பார்க்கவில்லை என்றால், ஏதோ தவறிழைத்து விட்டது போலவே பார்க்க ஆரமித்து விட்டனர். இதில் , ஒரே படத்தை இரண்டு மூன்று தடவை பார்ப்பதை பெருமையாக வேறு கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.

பிடித்திருக்கும் படத்தை ஒரு முறைக்கு மேல் வேண்டுமானாலும் பார்த்துவிட்டு போகட்டும், ஆனால், பாலபிஷேகம், பெரும் மாலைகள் அணிவிப்பது என்று Cut Out களுக்கு நடக்கும் கூத்துகளை, அடுத்த மாநில மக்கள் கூட இழிவாகவும், ஏளனமாகவும் பார்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.



அண்மையில் வெளியான ஒரு படத்தின் Cut Out இற்கு  பாலபிஷேகம் செய்யும் போது ஒரு ரசிகர் இறந்தே விட்டார். பாலபிஷேகம் செய் என்று அந்த படத்தில் நடித்த நடிகரா கேட்டார்? பிடித்தால் இரண்டு முறை பார்ப்பதை விட்டு, தனக்கு தான் அந்த நடிகரை மிகவும் பிடிக்கும் என்று காட்டிக்கொள்ள இதுபோல விஷயங்களில் ஈடு படும் ரசிகர்கள், அறிவிழந்து விட்டனரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

யாரோ ஒரு நடிகருக்காக உயிரை விடவா இத்தனை ஆண்டுகள் பல கடினங்களை தாண்டி பெற்றோர் நம்மை வளர்கின்றனர்? விடியற்காலை ஒரு அரை லிட்டர் பால் பாக்கெட் அம்மா, அப்பாவுக்காக எழுந்து போய் வாங்கிவந்தால் பெற்றோர் மனமாவது மகிழ்ச்சி அடையும்!

இதெல்லாம் போதாதென்று சமிபத்தில் ஒரு நடிகருக்கு சிலை வைத்து வழிபட தொடங்கியுள்ளனர்! சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நடிகைக்கும் சிலை வைத்தனர் என்பதை அனைவரும் அறிவர்!

                      

யாருக்காகவோ எப்பொழுதும் வாக்குவாதம் செய்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, சினிமாவை ஒரு மூன்று மணிநேர பொழுதுபோக்கு அம்சமாக எப்போது பார்க்க தொடங்குகின்றனரோ, அப்போது தான் விடிவு வரும் இந்த 'சினிமா பைத்தியம்' என்று பறை சாற்றிக் கொள்பவர்களுக்கு.

Blogger Widget