-->

வியாழன், 9 ஏப்ரல், 2020

கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் நாம்!

மூன்று மாதங்களுக்கு முன் நாம் நினைத்தே பார்த்திராத சம்பவங்கள் இந்த உலகத்தில் இப்போது  நடந்துக்கொண்டிருக்குறது. இது ஏன் ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்தது, இதற்கு தீர்வு காண்பது எப்படி என்பதை எல்லாம் நாம் ஆராயப்போவதில்லை. ஆனால், கடந்த மூன்று மாதங்களில் உலகின் ஒட்டுமொத்த பகுதியுமே ஸ்தம்பித்து நிற்கிறது என்பதை மறுக்கமுடியாது.

உலகிலேயே மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நமது பாரததேசம், முதன்முறையாக இப்படி பல நாட்களுக்கு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறது. பகுத்தறிவு வாதிகளும், மெத்த படித்த மேதாவிகளும் பலரைக் கொண்ட நாடு என்று பறைசாற்றிக்கொண்ட நாடும், உலகின் மற்ற நாடுகளில் பிரச்சனை எழும்போதெல்லாம் (தானாகவோ அல்லது அவர்கள் ஏற்படுத்தியோ) தனது கழுகு மூக்கை நுழைத்துக்கொண்டு "அமைதியை" நிலைநாட்டுகிறேன் என்று அவர்கள் மேல் "போர்" புரிந்து அனைவரையும் அடக்கியாண்டு வந்த அமெரிக்காவெல்லாம் கடந்த மூன்று மாதங்களாக உலக மக்கள் முன் சந்தி சிரிக்க நின்று கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கொடுமையான தொற்றுநோய்ப் பரவிக்கொண்டிருக்கும் இந்த மூன்று மாதகாலத்தில், படிப்புக்கும் அறிவுக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை என்று மிகத் தெளிவாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் நிரூபணம் செய்துக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் அனுபவத்தின் மூலம் பாடம் கற்ற மக்களை அதிகமாகக் கொண்ட நாம் சிறந்தவர்களாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பொது இடங்களுக்கு செல்லவேண்டாம், கூட்டம் கூடவேண்டாம், அனாவசியமாக வெளியே செல்லவேண்டாம் என்றும், இருபத்தியொரு நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று ஊரடங்கு பிறப்பித்தவுடன் நூற்று முப்பது கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நமது நாடு ஒரு மனிதனின் கட்டளைக்குட்பட்டு, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பது என்பது, யார் ஏற்க மறுத்தாலும் இது மிகப்பெரிய சாதனை தான். இப்படி இருந்தால் தான் நோய் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர இயலும் என்ற விஷயத்தைப் புரிந்துக்கொண்டு இருக்கின்றோம். முப்பது பேர் இருக்கும் ஒரு வகுப்பிலேயே ஆசிரியர் சொல்வதை கேட்காமல் திமிராக இருக்கும் மூன்று, நான்கு பேர்களைப்போல சில முட்டாள்கள் தேவையின்றி வெளியே கும்பல் கும்பலாக சுற்றுவதையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

ஆனால் வெறும் முப்பத்து மூன்று கோடி மட்டுமே ஜனத்தொகை கொண்டு, நிலப்பரப்பில் நம் நாட்டை விட மூன்று மடங்கு பெரிதாக உள்ள அமெரிக்காவோ, திமிராகவும், ஆராய்ந்துப்பார்க்கும் அறிவில்லாமலும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்காமலும், இதுத் தொற்றுநோயே இல்லை என்று தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு இன்று அம்போ என்ற கதியில் நிற்கிறது! கண்கெட்ட பிறகு சூரியனை வணங்கியவனைப்போல பதினாறாயிரத்துக்கும் மேல் (இந்தப் பதிவு எழுதும்போது 16,246, எழுதி முடிப்பதற்குள் 16,444!!) தம் மக்களை இந்தத் தொற்றுநோய்க்கு பலிகொடுத்தப்பின் ஆங்காங்கே சில மாநிலங்களில் மேம்போக்காக ஊரடங்கு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. (முழு ஊரடங்கு பிறப்பிக்காததற்கு இவர்கள் சொல்லும் காரணம், இவர்கள் சர்வாதிகாரிகள் இல்லையாம் மக்களை முடக்கி வைக்க..! ஆம், சர்வாதிகாரிகள் இல்லை, வெறும் முட்டாள்கள் தான் போலும்!)

இப்படி ஐரோப்பியா, எழுபத்தியாறு நாட்களுக்கு சீனாவின் சில பகுதிகள், இந்தியா என்று உலகமே முடங்கிக்கிடக்கும் இந்த வேளையில் தான், இந்த உலகத்தின் முதல் உரிமையாளர்களும் இயற்கை வாசிகளுமான விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்தும் பயமில்லாமல் உரிமையாக வெளியே வந்து உலகைப் பார்க்கின்றன! ஆயிரம், நூறு ஆண்டுகளாக தாம் வசித்து பராமரித்து வந்த தங்கள் உலகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க, மனிதனிடம் இருந்து மீதி இருக்கும் சொற்ப காடுகளிலிருந்து வெளியே வந்துப் பார்க்கின்றன! மூன்றே மாதத்தில், மாசற்ற இத்தாலியின் வெனிசு நதிகளில் டால்பின் மீன்களும், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் கரடியும், ஜப்பானில் மான்களும் பல வருடங்களுக்கு பிறகு சுதந்திரமாக வெளியே வந்துள்ளதை பார்த்து தம் நாட்டில் இவையெல்லாம் இருக்கின்றனவா என்று பிரமிக்கும் நிலைக்கு மக்கள் வியப்படைந்துள்ளனர்!

அந்த விலங்கினங்கள், தாம் வசித்து வந்த எழில்மிகு இந்த பூவுலகை, எங்கு பார்த்தாலும் புகைப் படிந்த இடமாகவும், குப்பைக் கூடமாகவும், நீர் வற்றிய வறண்ட பூமியாகவும், இயற்கைக் கொடுத்த கொடையான பிராணவாயுவையே சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் முகமூடி போட்டுக்கொண்டும், முக்காடு போட்டுக்கொண்டும் சுவாசிக்கும் அளவுக்கு சில நகரங்களையும் (விரைவில் பல நகரங்கள்!), சில நாடுகளையும் மாற்றிவிட்ட பொறுப்பற்ற, கேடுகெட்ட சுயநல குடித்தனக்காரர்களாக இருப்பார்கள் என்று சற்றும் எதிர்பாராதவையாக இந்த உலகை வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன!

உலகின் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலம், தன் வசிப்பிடமான நடுக்கடலில் உண்ண மீன்கள் இன்றி, பெரிய கப்பல்களில் ராட்சத போக்லைன் மூலம் ஒரே வலை விரிப்பில் ஆயிரக்கணக்கான மீன்களை இயற்கை வாசிகளான திமிங்கலம், சுறா மற்றும் ஒவ்வொரு மீனையும் சார்ந்திருக்கும் வேறு மீன்களிடமிருந்து கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு கொடூரர்களாக மக்களையும்; தேவைக்காக, தேவையான போது மட்டும் உணவைத் தேடிச் சென்றும், தன் கூட்டத்துடன் பகிர்ந்து உண்ணும் விலங்கினங்கள், ஊரடங்கு என்றதும் அடித்து பிடித்து தேவையானது, தேவையில்லாதது என்று கண்டதையெல்லாம் வாங்கி அதை தேவையானவர்களுக்கு கிடைக்காதவாறு செய்த மனிதக் கூட்டத்தை வினோதமாக பார்த்துக்கொண்டே சுற்றித்திரிகின்றன!


பல ஆண்டுகளுக்கு பிறகு மாசற்ற காற்றும், கீங் கீங் என்று வாகன சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசுகளும் இல்லாமல் புள்ளினங்கள் பறப்பதையும், மனித மந்தைகளைப்பற்றி கவலையின்றி   விளையாடிக்கொண்டே பரந்துத் திரிவதை வீட்டின் உள்ளேயே நின்றுகொண்டு சாளரம் வழியே வெறித்து பார்க்கும்போது தான்.., இப்படி விலங்கினங்கள், பறவையினங்கள், மீன்கள் என்று அனைத்து ஜீவராசிகளுடனும் சேர்ந்து இந்த உலகில் வாழாமல் இவைகளை அச்சப்படுத்தும் விதத்தில் இயற்கையின் கனிம வளங்களை தோண்டி எடுத்து, அதற்காக வேறு நாடுகளுடன் போர் புரிந்து, அடுத்த உயிர்களைக் கொன்று குவித்து, தேவைக்கு அதிகமாக பூமியைத்தோண்டி அந்த நிலப்பரப்பின் தட்பவெட்பமே அதனால் அதிகரிக்க காரணமாகி, அதனால் காட்டுத்தீயை ஏற்படுத்தி கோடிக்கணக்கான; என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ள முடியாத, தன் குமுறல்களை வாய்விட்டுப் பேசத்தெரியாத வாயில்லா ஜீவன்கள் எரிந்து சாம்பலாவதற்கு காரணமாகவும், இதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஆடை ஆபரணங்களுக்காக காட்டினுள் சென்று மிருகங்களை வேட்டையாடுவதும், தந்தங்களுக்காக இயற்கையின் கொடையான யானையையே கொல்லும்  அளவுக்கு மனசாட்சியில்லாத ஜந்துவாகவும், மருத்துவ குணத்துக்காக என்று பொய்யை சொல்லி பல மிருகங்களையும், வெள்ளை காண்டாமிருகம் என்ற ஒரு இனத்தையே இந்த உலகத்திலிருந்து அழித்து என்று என்னென்ன கொடுமைகளை இந்த இயற்கை பூமிக்கு செய்துக்  கொண்டிருக்கிறோம்?

திங்காதடா என்று சொன்ன ஒரு ஆப்பிள் பழத்தை தின்று தொலைத்த ஆதாமாலோ என்னமோ, இந்த உலகில் மனித வகை வந்த பிறகு, தம்முடன் இனைந்து வாழ இந்த பூமியாகிய தமது கூடாரத்தில் மனிதராகிய நமக்கு இடம் கொடுத்த விலங்கினங்களையும் காடுகளையும் மெல்ல மெல்ல அபகரித்து, ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி பின்னர் அவைகளையே இல்லாமல் செய்துக்கொண்டிருக்கும் நாம், எப்படியும் சில மாதங்களில் முன்புபோல வெளியே நடமாட ஆரமித்தபின்னர் இயற்கை அளித்த கொடைக்கு நன்றியுடன் நடந்துக்கொள்ள முயற்சிப்போம்!
Blogger Widget