-->

செவ்வாய், 29 அக்டோபர், 2013

பழகலாம் வாங்க - பாகம் மூன்று

அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டான் அப்பு. பொதுவாக பள்ளி முடிந்து வழியிலிருக்கும் சிறிய காலி இடத்தில் தன் பள்ளிப் பையை வைத்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு தான் வீட்டுக்கு வருவான்.

வீட்டைப் பூட்டிக்கொண்டு எதிர் வீட்டில் வசித்த ராசு வீட்டில் சாவியை கொடுத்து விட்டு, ரேஷன் கடைக்கு சென்றிருந்தார் அப்புவின் அம்மா. விளையாடிவிட்டு பசியோடு வீட்டுக்கு வந்து, கதவு சாதி இருப்பதை பார்த்து மீண்டும் பையை கழட்டி கதவருகே வைத்துவிட்டு எதிர் வீட்டுக்கு சென்றான்.

தன் குழந்தையோடு அவனுக்கும் நொறுக்கு தீனி கொடுத்து, 'மைலோ'வும் குடுத்தார் ராசுவின் அம்மா. தன் அம்மா வந்தவுடன் வீட்டுக்கு துள்ளி குதித்து சென்றான் அப்பு.

மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் தெருவே கலகலத்திருந்தது. முதலத்தையிடம் ( முதல் + அத்தை. முதல் வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்மணி, எல்லா குழந்தைகளும் அவரை அத்தை என்று தான் அழைப்பர்.) கதை சொல்லும்படி அவரை சூழ்ந்து கொண்டு அமர்ந்தனர். தம் ஊர் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கும்பலில் ஒருவன் 'பேய்' கதை சொல்லுங்க அத்தை என்று கேட்டதும், இப்போது 'வடிவேலு சொல்லும் வசனமான' ஏண்டா... நல்ல தான போயிட்டிருந்துச்சு... என்ற தோணியில்.. பேய் கதை எல்லாம் வேணாம் நீங்க இதையே சொல்லுங்க என்று மெதுவாக அவர் காதில் சொன்னான்.

மணி எட்டு ஆனதும் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பவும், சரி நாளைக்கு மிச்ச கதைய சொல்லறேன் என்று அத்தையும் வீட்டுக்கு கிளம்பினார். இரவு உணவு உண்ட பின்னர் வீட்டிலேயே தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ராசு. சிறிது நேரம் செஸ், அப்பாவுடன் சிறிது நேரம் முந்தைய ஞாயிற்றுக் கிழமை புதிதாக வாங்கியிருந்த சதுரங்கம் விளையாடிவிட்டு தூங்கினான்.

ஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு உதயமானது தான் தாமதம், மடமடவென குளியலை முடித்துக் கொண்டு, நண்பர்களை அழைத்துக்கொண்டு வாடகை சைக்கிள் கடை நோக்கி படை எடுத்தனர். கடையை நெருங்கியவுடன் ஒவ்வொருவரும் நல்ல, பளபளப்பான சைக்கிளை 'இது எனக்கு, அது எனக்கு' என்று போட்டி போட்டு எடுத்துக் கொண்டு, ரிஜிஸ்டர் நோட்டில் அவரவர் பெயரை சொல்லிவிட்டு 'எவ்ளோ மணிக்கு பாய் வரணும்?' என்று கேட்டுக்கொண்டு சிட்டென பறந்தனர்!

நேரமானதும் சைக்கிளை விட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு நல்ல தூக்கம் தூங்கி எழுந்து, நான்கு மணிக்கு 'இலங்கை' வானொலியில்  பாடல்கள் கேட்க தயாராக உட்கார்ந்தான். ஒரு மணிநேரம் பாடல்கள் கேட்டுவிட்டு மீண்டும் விளையாட கிளம்ப தயாரானதும், நாளைக்கு ஸ்கூல்க்கு போகணும், கொஞ்ச நேரம் படிச்சுட்டு விளையாடப் போ என்று அம்மா சொல்லவும், இதோ வந்துடறேன் அம்மா என்று கத்திக் கொண்டே வாசலுக்கு ஓடிவிட்டான்.

வியர்த்து விருவிருக்க ஓடி பிடித்து விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு தான் காலில் குத்தியிருந்த முள் வலிக்க ஆரமித்து ரத்தம் கட்டி இருந்தது கண்டு  மெய் சிலிர்த்து, 'ஆஅஆ' என்று கத்திக் கொண்டு உட்கார்ந்தான். கல்லுப்பை (கல்+உப்பு) சிறிய துணியில் வைத்து நெருப்பில் காட்டி இரத்தம்  கட்டிய இடத்தில் அப்பா ஒத்தடம் கொடுத்தார்.

இரண்டு நாட்கள் விளையாடியதை நினைத்துக் கொண்டே ஒவ்வொரு வீட்டிலும் தம் நண்பர்கள் உறங்க கண் அயர்ந்தனர்.

இன்று... உறங்க நேரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மடிக்கணினி முன் சமூக வலை தளத்தில் இருந்து வெளி வராமலும், பத்து தெரு தள்ளி இருந்த நண்பனின் வீட்டுக்கு துள்ளி குதித்து ஓடிய கால்கள், வண்டி இருந்தாலும் பக்கத்து தெருவுக்கு செல்ல சோம்பல் வயப் பட்டிருக்கிறது. தத்தம் வேலைகளை வழக்கமான அட்டவணையிலேயே தினமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் அவ்வபோது நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து சில நேரம் இப்போதிருக்கும் மழலைகள் என்ன விளையாடுகிறார்கள் என்றும் கவனிப்போம்!

Blogger Widget