-->

வியாழன், 22 நவம்பர், 2012

பழகலாம் வாங்க - பாகம் இரண்டு

அன்றாடம் நம்மிடம் இருக்கும் பழகுமுறை பற்றிய சில கருத்துக்களை பழகலாம் வாங்க பதிவில் படித்திருப்பீர்கள், இந்த பதிவு அதன் தொடர்ச்சியாக கருதவும்!


நம்முடைய எண்ணங்கள் எப்போது புதிய விடயங்களை சிந்திக்கும்? நாம் பிறருடன் கலந்துரையாடும்போது தான். 

இன்று பலர் நேரம் செலவழித்து பிறரிடம் பேசுவதில்லை. வீட்டில் இருக்கும்போது கணினி, கைப்பேசியுடன் மட்டுமே பேசுகிறோம். நம்மில் எத்தனை பேர் நம் வீட்டினருடன் மனம் விட்டு பேசுகிறோம் இன்று? கணினி, கைபேசி இல்லா காலத்தில் மகிழ்ச்சி பொங்க மாலை ஆனால் நண்பர்களுடன் விளையாட்டு, நம் வீட்டினர் அக்கம் பக்கத்து வீட்டாருடன் உரையாடுவதுமாக ஒரு அற்புதமான காலம் அது. மாலை ஆனால் வீதியெங்கும் மக்கள் நடமாட்டம், பேச்சு சத்தம், சிரிப்பு சத்தம், குழந்தைகளின் விளையாட்டு சத்தம் என்று அமர்க்களப்படும்.

காலை வீட்டை விட்டு வெளியே சென்றால், சோர்ந்து வியர்வை வடிய உணவு உண்ணும்போதும், உறங்கும்போதும் மட்டுமே வீடிற்கு வந்து,
விளையாடப் போனால் வீட்டிற்கே வருவதில்லை என்று அம்மாவிடம் வசவு வாங்கிய காலம் சென்று, இன்று பலர் வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை (சினிமாவிற்கு செல்வதை தவிர்த்து)..! சுதந்திரமாக வெளியே சுற்றியகாலம் சென்று, இன்று இணையம், தொலைக்காட்சி  முன்னர் அடிமையாகயுள்ளது உலகம்.

படிக்கும் காலத்தில் அதிகமாக பழகாதவர்களுக்கு இன்று சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கில் நண்பர்கள் என்று பார்க்கும் உடன் படித்தோருக்கு ஆச்சர்யமாக தெரியும்!  நிஜ நண்பர்களுடன் பழகாமல் நிழல் நண்பர்களுடன் பழகும் மட்டத்திலேயே இன்று உலகம் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவ்வபோது அடிபடும் செய்தி, சமூக வலைதளத்தில் முன்பின் தெரியாதவரிடம் பழகி எமர்ந்ததால் பெண் தற்கொலை! மேலும் இது போன்ற செய்திகள்... முன்பின் தெரியாதவரிடம் ஏமார்ந்து இறப்பதற்காகவா இந்த உயிர் கொடுக்கப்பட்டுள்ளது?

பல நாள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் சமயம், கேளிக்கைக்காக சினிமா செல்வதை தவிர்த்து விளையாடிப்பாருங்கள், இரண்டு மணிநேரம் பேசிப்பாருங்கள், சினிமா சென்று யாரோ ஒருவர் நடிப்பதை பார்த்து ரசித்து பொழுதை போக்குவதைவிட நம் நண்பர்களுடன் பேசி கழிக்கும் சமயத்தில் தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்! புதிய எண்ணங்கள் பிறக்கும். அந்த புதிய எண்ணம் ஒரு புதிய படைப்பை கூட உருவாக்கலாம், புது திறமையை வெளிக்கொண்டுவரலாம், புது உத்வேகத்தை கொடுக்கலாம்!

நிழலிலிருந்து வெளிவந்து நிஜத்துடன் பழகுவோம்!
Blogger Widget

வியாழன், 8 நவம்பர், 2012

தொ மு. தொ பி.




தொலைகாட்சி பிறப்பிற்கு முன்:

அது 1990 ஆம் ஆண்டு, புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை தான் பிறந்து வளர்ந்த ஊரான ஓசூர் அருகில் உள்ள 'சின்ன திருப்பதிக்கு' சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்துவிட்டு, பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ராசு, பட்டாசு கடைகள் வழி நிரம்பி இருப்பதை பார்த்து பூரிப்படைகிறான்! உடனே வலப்பக்கம் திரும்பி 'அப்பா, நம்ம ஊருக்கு போனதும் எனக்கு ஒரு துப்பாக்கியும், ரோல் கேப்பும் வாங்கிக்குடுப்பா' என முகத்தை பவ்யமாக வைத்துக்கொண்டு கேட்கிறான், சரி என சம்மதம் சொன்னதும், முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த அம்மாவிடம் 'அப்பா எனக்கு துப்பாக்கி வாங்கி தரேன்னு சொனாரே' என மகிழ்ச்சி பொங்க சொல்லி, அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தன் தங்கையிடம் 'உனக்கும் மத்தாப்பு வாங்கி தருவாரு, ரெண்டு பேரும் சேர்ந்து பட்டாசு வெடிக்கலாம்' என சொல்லி முடிக்கவும், ஓசூர் பேருந்து நிலையம் வரவும் சரியாக இருந்தது.

வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் இருந்த பட்டாசு கடையில் ஒரு துப்பாக்கியும், தங்கைக்கு மத்தாப்பும் வாங்கிக்கொண்டு வீடு சென்று, மாலை ஏழு மணி ஆனவுடன் வீட்டில் இருந்த சில எறும்புகளுக்கு பக்கத்தில் துப்பாக்கியை வைத்து சுட ஆரமிக்கிறான், 'ராசு, அது வாயில்லா ஜீவன், அதை ஒன்னும் பண்ணாம வாசலுக்கு போயி விளையாடு என்று அம்மா சொன்னவுடன், வெளியே வந்து டப் டப் என சுட்டு விளையாட ஆரமிக்கிறான், சில நொடிகளில் தன் நண்பர்கள் அப்பு, அருண், ராம், சிரஞ்சீவி, விக்னேஷ், ராகவேந்திரா, சுதர்சன் என ஒரு பட்டாளமே ஒன்று கூட, வாங்கிவந்த பத்து சுருள்களில் இரண்டு அப்போதே தீர்ந்திருந்தது! சிலநேரங்களில் மற்ற நண்பர்கள் ஊசி வெடி வெடிக்க ஆரமித்தவுடன் மேலும் சில நண்பர்கள் ஒன்று கூடி வெடித்து மகிழ்ந்தனர். எட்டரை மணி ஆனதும் சிட்டென அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.




சாப்பிடும்போது அம்மாவிடம் 'அம்மா, தீபாவளி என்னிக்குமா வரும்?' என கேட்க, இன்னும் பதினைந்து நாள் தான், என்று சொல்லக்கேட்டதும், குஷியாகிவிட்டான். மறுநாள் முதல் பள்ளிக்கு போகும் வழியெல்லாம் இன்னும் பதினைந்து நாள் என்று சொல்லிக்கொண்டே போவான்,  இப்படியாக தினமும் வீடு திரும்பியதும் பட்டாசு வெடிப்பதும் பட்டாசு தீர்ந்தவுடன் சுப்பண்ணா கடைக்கு நண்பர்களை அழைத்து சென்று 'ஐந்து ரூபாய்க்கு' மீண்டும் சில வெடிகள் வாங்குவதுமாக தீபாவளி தினம் வரை சென்றது. தீபாவளிக்கு இரு தினம் முன், பள்ளி விடுமுறை விட்டதும் தீபாவளிக்கு  சென்னையில் உள்ள தன் தாத்தா வீட்டிற்கு சென்று, அங்கு தன் அத்தை மகன்களுடனும், அவர்களுடைய நண்பர்களுடனும் சேர்ந்து அட்டகாசமாக வெடி வெடித்து கொண்டாடி, தீபாவளி அன்று பொழுது விடிவதற்கு முன்னரே (என்றைக்குமே வராத விடியற்காலை மிழிப்பு அன்றுதான் வரும்!) எண்ணை தேய்த்து குளித்து பெற்றோரை சேவித்து புதுத்துணி பெற்றுக்கொண்டு, சில வெடிகள் வெடித்து, பின்னர் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி, வீடு திரும்பியதும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால், காலை உணவுக்கு வீடு காலை பதினோரு மணிக்கு தான் திரும்புவான் ராசு. பலகாரங்களுடன் உண்டு, பின்னர் வெளியில் நண்பர்களுடன் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து, ஒரு குட்டி தூக்கம் போட்டெழுந்து, மாலை மத்தாப்பு, பொதவானம், தரை சக்கரம் , மத்தாப்பு என்று தங்கையுடன் விளையாடி, அம்மாவுடன் பொறி மத்தாப்பு கொளுத்தி, அப்பா உதவியுடன் பத்து வயது ராசுவுக்கு பெரிய வெடிகளான ராக்கெட், அணுகுண்டு, சரவெடிகளை வெடித்து இரவு உணவுக்கு திரும்பி, அன்று கழிந்த பொழுதை நினைத்துக் கொண்டே படுக்கைக்கு சென்றால் வெளியில் எங்கோ வெடிக்கும் சரங்களும், ராக்கெட்டுகளும் புன்முறுவலுடன் தூங்க வைக்கும்! 

தொலைகாட்சி பிறந்த பின்:

தீபாவளி வருகிறது, இன்னும் ஐந்து நாட்கள் இருக்கின்றன. இன்னும் எந்த வெடிகளும் வாங்கவில்லை, தெருவில் இருபது வருடங்கள் முன்பிருந்த கூட்டங்களையும், சத்தங்களையும் காண, கேட்க முடியவில்லை... தொலைக்காட்சியில் மட்டுமே வெடி சத்தம் கேட்கிறது, அரட்டை அடிக்கும் நண்பர்கள், தீபாவளி பண்டிகையை பற்றி பேசுவதை விடுத்து, தீபாவளிக்கு வெளியாகும் படங்களைப் பற்றியும், முதல் நாளே திரைப்படத்தை பார்க்க தயாராகவும், எந்த திரைப்படம் வெற்றி பெரும் என்றும், எந்த தொலைக்காட்சியில் என்ன படம் என்றும், அதில் தான் எந்த படத்தை பார்க்கப்போகிறார் என்றும் விவாதம் நடந்துக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், கோடானு கோடி ஆண்டுகளாக இருந்து வரும் இந்த பூமியை மக்கள் ஒரு நாள் வெடித்து கொண்டாடி மகிழும் இந்த பட்டாசுகள் சீர் குலைத்து விடுவது போல 'பசுமை பூமி' ஆக்குங்கள் என்று பரப்பி கொண்டு திரிகிறார்கள்.... அப்படி சொல்பவர்கள், சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டுபவர்களையும், புகைவிட்டு செல்லும் வண்டிகளையும், புகை பிடிப்பவர்களையும், மற்ற ஏனைய புகை விடும் விஷயங்களை பற்றி பேசுவதே இல்லை!



நாம் பட்டாசு வெடித்தாலும் , வெடிக்காவிட்டாலும் பூமிக்கு ஒன்றும் ஆகிவிடாது! நான் நாளை இல்லாவிட்டாலும், இந்த பூமி தொடர்ந்து இருக்கத்தான் செய்யும்... வெளியில் சென்று பட்டாசு வெடியுங்கள், நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள், தொலைக்காட்சியுடனோ, திரை அரங்குகளுடனோ அல்ல.. தொலைக்காட்சியும், திரை அரங்கமும் எப்போதும் இருக்கும், பண்டிகை தினங்கள் அந்தந்த ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்!

நிகழ்வுகளைக் கொண்டாடுங்கள்; நிகழ்சிகளை அல்ல!
Blogger Widget