-->

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger போடும்!

முதல் பாகத்தின் இறுதியில்...


--> Swachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு "ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்!


இரண்டாம் அத்தியாயம்:

ஒரு பொருள் வாங்கினால் அந்த ரசீதில், வாங்கிய பொருளை விட Swachh Barat வரி,  க்ரிஷி கல்யாண் வரி என்று கண்டகண்ட ஹிந்தி பெயரில் வரியின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். நாட்டை தூய்மையாய் வைத்துக்கொள்வது என்பது ஒருசாதாரண ஆரம்ப கட்ட கடமை. இது காலம் காலமாய் இருந்து வரவேண்டியது, அதற்குத்தான் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களை பணியமர்த்துகிறது. ஆனால்,  நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டை கடந்து  சென்று கொண்டிருக்கும்போது இது ஏதோ ஒரு சாதனை என்பதுபோல ஒரு அரசாங்கம் பலகோடி செலவழித்து விளம்பரம் செய்வது, கல்லூரி படிக்கும் ஒருவன் அ, ஆ, இ, ஈ படிக்க ஆரமித்துவிட்டதாக தம்பட்டம் அடிப்பதுபோல உள்ளது.

இந்நாட்டில் வெளியே சென்றால், இலையுதிர் காலத்தில் இலைகள் தவிர்த்து வேறு குப்பைகள் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன், தெருவில் குப்பை தொட்டிகள் கிடையாது. கடைகளுக்கு செல்கிறோம் என்றால் ஒவ்வொரு கடை வாசலிலும் குப்பை தொட்டி இருக்கும், குப்பைத்தொட்டியில் நேரடியாக குப்பை கொட்டாமல், பெரிய கருப்பு நிறத்தில் Plastic Coverரில் குப்பையை போடுவதுபோல இருக்கும், அது நிறையும் தருவாயில் அந்தந்தக் கடைக்காரர்கள் அதை சுருக்கி முடிந்து கடை பின்புறம் இருக்கும் பெரிய குப்பை தொட்டியில் போட்டுவைப்பார்.  இதே போல தான் வீடுகளிலும். தனி வீடு என்றால் குப்பையை மறுசுழற்சிக்கு (recycle) ஏற்ற குப்பையை தனியாகவும், மக்கும் குப்பையை தனியாக பிரித்து பெரிய plastic பையில் சுருக்கி முடிந்து வாசலில் வைப்பார், apartment வீடுகளென்றால் பத்து/இருபது வீடுகளுக்கு என்று பொதுவாக பெரிய குப்பை தொட்டி இருக்கும், அதில் பிரித்து குப்பையை போடவேண்டும். வீட்டு பால்கனியிலிருந்து குப்பையை விட்டெறிவது, தெருவில் காலியாக இருக்கும் நிலத்தில் வேலியை  தாண்டி வீசுவதெல்லாம் இங்கு கிடையாது.

நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் இருக்கும் சில வீடுகளுக்கான பொதுவான குப்பைத்தொட்டி.
இப்படி கடைகளிலும், தனி வீடுகளிலும், apartment வீடுகளிலும் வைக்கும் குப்பைகளை, குப்பை தொட்டியிலிருந்து நாள் தவறாமல் தினமும் குப்பை லாரி வந்து அள்ளிக்கொண்டு போகும். தெருக்களிலும், குப்பை தொட்டியருகில் இருக்கும் வண்டிகளிலும் குப்பைக்கே உரிய துர்நாற்றம் அடித்து நான் கண்டதில்லை. 
ஹக்கம்...  குப்பைனா குப்பைதானே... அதென்ன அமெரிக்கா குப்பைனா மட்டும் நாத்தம் அடிக்காதா என்ன? என்று தானே நினைக்கிறீர்கள்? 
அப்படியெல்லாம் இல்லை, இங்கு என்ன வித்தியாசம் என்றால் வீட்டிலும், ரோட்டிலும், கடைகளிலும் எங்குமே குப்பை வெளிப்படையாக கொட்டப்படுவது இல்லை. முன்பே சொன்னது போல பெரிய plastic பையில் நன்றாக சுருக்கி தான் கொட்டப்படுகிறது. மேலும், குப்பை லாரி மூடிய நிலையில் தான் இருக்கும். லாரியில் பின்புறத்தில் துப்புரவு பணியாளர் பெரிய குப்பை தொட்டியில் கொக்கியை மாறிவிடுவர், சின்ன குப்பை தொட்டி என்றால் பணியாளர் எடுத்துவைக்க தானியங்கி இயந்திரம் தானாகவே கொட்டிக்கொள்ளும். அதனால் வெளியில் குப்பை சிதறுவது, கொட்டுவது என்ற நிலைமை நான் கண்டவரை நூறு சதவீதம் கிடையாது.

கிட்டத்தட்ட சென்னையில் மற்றும் சில பெருநகரங்களில் இருக்கும் குப்பை லாரிபோல தான் இருக்கும், ஆனால் என்ன வித்தியாசம் என்றால் நம்மூரில் இருப்பது போல வெளியே குப்பை வழியாது, வண்டி அவ்வளவு சுத்தமாக பளிச்சென்று இருக்கும். துப்புரவு பணியாளர் தரமான gloves, shoes, helmet, முகக்கவசம் என்று பாதுகாப்பாக இருப்பார். 

நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு லட்சங்களில், கோடிகளில் commission கொடுத்து குப்பை அள்ளும் company அந்த தொழிலாளர்களுக்கு தரமான கவசங்களை கொடுப்பாரா என்ன நம் நாட்டில்? போட்ட பணத்தை எப்படி அள்ளலாம் என்று நினைப்பானே ஒழிய குப்பையை எப்படி தரமாக அள்ளலாம் என்று நிச்சயம் நினைக்கமாட்டான்.

சில ஆண்டுகளாக இந்தியாவின் silicon valley என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம் குப்பை நாற்றத்தால் நாறியது. என்னடா பிரச்சனை என்று நான் விசாரித்தபோது பெங்களூரு நகராட்சிக்கு உட்பட்ட எல்லையை (பெரிய இந்திய பாகிஸ்தான் எல்லை போல தான் நினைப்பு!) தண்டி குப்பையை கொட்ட முடியாது என்று contract எடுத்தவனுக்கும் அரசாங்கத்திற்கும் சண்டை. 70கி.மீ வரை தான் குப்பை வண்டி சென்று குப்பை கிடங்கில் கொட்டும், புதிதாக திறந்த குப்பை கிடங்கிற்கு 100 கி.மீ ஆகிறது இதற்கு புதிய contract போட வேண்டும் என்று contract காரனும், முடியாது என்று அரசாங்கமும் போட்ட சண்டையில் மொத்த நகரமே அப்படி நாறியது. இந்த துர்நாற்றத்தை தாண்டி தான் நான் தினமும் அலுவலகம் சென்றேன் இரண்டாண்டிற்கு மேல்.

இப்படி ஒரு குப்பை அள்ளுவதிலேயே contract, commission, லஞ்சம் என்று அடித்துக் கொள்வதால் தான் நம் நாட்டில் தெருவை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. இங்கு அப்படியெல்லாம் உள்ளுக்குள் ஏதாவது நடக்கிறதா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அபார்ட்மென்ட்டை, தெருவை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள நம்மைவிட முனைவுடன் செயல்படுகின்றனர். நியூயார்க் நகரில் பேருந்து, ரயில் நிலையத்திலிருந்து வெளிவரும் மக்கள் நிமிடத்திற்கு குறைந்தது ஐநூறிலிருந்து, ஆயிரம் பேர். ஒரே ஒரு நிமிடத்திற்கு சொல்கிறேன்!அவ்வளவு மக்கள் புழங்கும் தெருக்களில் சில இடங்களில் குப்பை இருக்கும் அதையும் சுத்தம் செய்துக்க கொண்டுதான் இருப்பர்.

இப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.

சிறுவயதில் நமக்கும் தான் சொல்லிக்கொடுத்தனர் சுத்தம் சோறு போடும் என்று நாம் அதை வீட்டுக்குள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டுவிட்டோம். இவர்களுக்கு இன்னும்
நன்றாகவே சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது வீட்டை மட்டும் அல்ல, ரோட்டையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் சுத்தம் Burger போடும் என்று.

மூன்றாம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்... 


Blogger Widget

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கருத்துக்களம் வலைத்தளம் 2017இன் சிறந்த வலைப்பதிவாளர் பட்டத்திற்கு தாக்கல் செய்யப்பட்டது.

IndiBlogger நடத்தும் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பதிவாளர் பட்டத்திற்கு நமது கருத்துக்களம் வலைத்தளம் கீழ்கண்ட ஐந்து தலைப்புகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.

சிறந்த தமிழ் வலைத்தளம்
தமிழகத்திலிருந்து சிறந்த வலைத்தளம்
குடிமகனின் கடமைகளை பற்றிய பதிவு கொண்ட வலைத்தளம்
வளர்ந்துவரும் சிறந்த வலைத்தளம்
சிறுகதைகள்

கீழ்கண்ட படத்தை கிளிக் செய்தால் அது ஒரு வளைத்ததிற்கு தங்களை அழைத்து செல்லலும், நம் வலைத்தளம் பற்றிய உங்களின் கருத்துக்களை அங்கே பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

The Indian Blogger Awards 2017
Blogger Widget

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா!

*** மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ***


முதன்முதலில் தொலைதூர விமானப் பயணம். அமெரிக்கா செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். அப்பா, அம்மா, என் தங்கை மூவரும்  தேவையான துணிகளை, பொருட்களை, தின்பண்டங்களை புதிதாக வாங்கிய டிராலி பாகில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். முதல் நாள் இரவு வாங்கிவந்த பாஸ்போர்ட் வாலட்டில்; பாஸ்ப்போர்ட்டை வைக்கலாம், இரவு விமான நிலையம் செல்லும்போது எடுக்க சுலபமாக இருக்கும் என்று பாஸ்ப்போர்ட்டை எடுக்க பீரோவை திரிந்தால்..., அங்கு பாஸ்போர்ட் இருந்த கவர் மட்டும்தான் இருந்தது! பாஸ்ப்போர்ட்டை காணோம்!!!


இரவு பத்தரை மணிக்கு விமானம், மதியம் பதினோரு மணிக்கு பாஸ்ப்போர்ட்டை காணோம்! எனக்கு பதற்றம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. பெங்களூருவில் உடன் தங்கியிருந்த என் நண்பன் லிபினுக்கு போன் செய்து அங்கே மறந்து விட்டிருக்கிறேனா என்று தேட சொல்லி, அலுவலகத்தில் பாஸ்ப்போர்ட்டை ஸ்கேன் செய்தபோது அங்கு விட்டிருப்பேனோ என்று அங்கு பிரேமுக்குபோன் செய்து என் ட்ரைவை  தேட சொல்லி என்று என் பாஸ்ப்போர்ட்டை ஒரு எட்டு பேர் தேடிக்கொண்டிருந்தனர்.


பல நேரமாக என் தங்கை தேட சொன்ன ராக்கில் தேடாமல் எனக்கு தோனியை இடங்களிலெல்லாம் தேடிவிட்டு சரி தேடித்தான் பாப்போம் என்று என் தங்கை சொன்ன இடத்தில் தேடினேன், கோட்டை மாரியம்மனுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக அம்மா வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாடா!!! கிடைத்தது பாஸ்போர்ட். ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக கிடைத்தது - என்னடா இது ஓசூர் காரனுக்கு வந்த சோதனை!!!

Pause செய்திருந்த பாட்டு மீண்டும் பாட ஆரமித்தது போல, மீண்டும் packingஐ தொடங்கினோம்.

ஓசூர் to நியூயார்க் பயணம் தொடங்கியது. அபுதாபி வழியாக, பெங்களுருவில் விமானம் ஏறியது முதல் நியூயார்க்கிற்கு பத்தொன்பது மணிநேரம் கழித்து வந்திறங்கினேன். என்னை அழைத்து செல்ல John F Kennedy விமான நிலையத்தில் என் நண்பன் அனந்த நாராயண் காத்திருந்தான். விமான நிலையத்திருந்து அவன் தங்கியிக்கும் வீட்டிற்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகியது போக்குவரத்து நெரிசலையும் சேர்த்து.

இரவு ஏழு மணி இருக்கும் நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது. வந்து படுத்து தூங்கியவன் தான், எப்போது எழுந்தேன், என்ன மணி ஒன்னும் தெரியவில்லை. இதன் பெயர் Jet Lag என்பார்கள், நம் நாட்டில் நேரம் வேறு, இங்கு நேரம் வேறு, இந்த புதிய நேரத்திற்கு ஏற்றவாறு நம் உடல் ஒத்துழைக்கும் வரை இந்த நாடு இரவு நேரத்தில் நமக்கு தூக்கம் வர சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வழக்கம் போல தாமதமாக உறங்குவது வேறு கதை!

பெங்களுருவில் இருந்தவரை காலை நான் எழுந்தவுடன் ஒரு அண்ணன் கடையில் காலை தோசை அல்லது இட்லி அல்லது வாங்கிபாத் (வாங்கி பாத்து சாப்பிடுவது அல்ல!) சாப்பிடுவேன். மதியம் சேட்டா கடையில் சாதம் சாப்பிடுவேன், இரவு அலுவலகத்தில் கேன்டீனில் உணவு உண்பேன். தூங்கி எழுந்த முதல் நாள் காலை. நண்பன் அலுவலகம் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான். நானும் பொறுமையாக கிளம்ப ஆரமித்தேன், எனது அலுவலகத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நன்பன் வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல ஒரு டாக்ஸி, பின் ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரத்தில் பயணசீட்டு வாங்கிக்கொண்டு, மற்றவர்களுடன் ரயிலுக்காக காத்திருந்தேன்.  ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல இருந்தது. நம்மூரில் இருந்தவரை அலுவலக கார் நேரத்திற்கு வந்து அழைத்து செல்லும், இங்கோ ஒரு conceptஏ கிடையாது! இங்கு எல்லாமே "நமக்கு நாமே" தான்!

அடப்பாவிங்களா!! நம்ம ஆளுங்க இவனுங்க கிட்டேர்ந்துதான் காசவாங்கி, நம்ம ஆளுங்கள ஆபீசுக்கு கார்ல கூட்டிட்டு போறான், அனா இங்க அப்படி ஒரு விஷயமே கிடையாது!

ஒரு வழியாக நியூயார்க்கு வந்து இறங்கினேன். இறங்கும் முன்னரே, முதல் நாள் இது, பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் ஆபீஸ் போகணும் என்று நினைத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினேன். இறங்கி, எப்படி வெளியே செல்லவேண்டும் என்றெல்லாம் யாரையும் கேட்கவில்லை, அதுதான் கடைசி நிறுத்தம், அபப்டியே கூட்டத்துடன் வெளியே சென்றேன்.அந்த நிறுத்தத்திற்கு NY Penn Station என்று பெயர். வெளியே இறங்கியதும் இடது பக்கம் திரும்பினேன், Madison Squre Garden என்றிருந்தது!

அடட!! இது நம்ம மோடி (மூணு வருஷத்துக்கு முன்னாடி, இப்பல்லாம் "நம்ம மோடி" கிடையாது.) வந்து பேசின இடமாச்சே (ஆட்சி ஆரமித்து நான்கு மாதங்களில் அதற்கு ஒரு வாரம் முன்னர் தான் நியூயார்க்கில் மோடி பேசி சென்றிருந்தார்!) என்று எடுத்தேன் உடனே ஒரு selfie. முதல் போட்டோ, அமெரிக்கா வந்திறங்கிய பின்னர். பின்னர் மூன்றாண்டுகளில் எடுத்த முப்பதாயிரம் போட்டோவுக்கு இதுதான் பிள்ளையார் சுழி!  


என்னது? மூணு வருஷத்துல முப்பதாயிரம் போட்டோவா? ஆமாம் பின்ன, திரும்பின பக்கமெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்கள், விதவிதமான வடிவங்களில், சென்றடைய வேண்டிய இடம் வரை எங்கு சென்றாலும் சுத்தமாக இருக்கும் ரோடுகள், ரோட்டோர குப்பை கூடைகள் முடிகளில் சோலார் பேனல்கள், ஆங்காங்கே உட்கார பெஞ்சு, உணவு வைத்து சாப்பிட டேபிள் & சேர் என்றிருந்தால் ஏன் தான் போட்டோ எடுக்க தோணாது?

தெருவை கூட்டி பெருக்குபவர்கள் அவர்கள் வேலையை செய்ய வேண்டிய தரமான பொருட்களுடன், ஷூ, கைகளுக்கு gloves, ஸ்வாச கவசம், என்று அவர்களையும் மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தால் சலிப்பில்லாமல் எப்பொழுதும் அவர்கள் வேலையை செய்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். நேற்று காலை, அலுவலகம் செல்லும் வழியில், Timessquare அருகில் சாலையில் யாரோ போட்டிருந்த பபுள்கம்மை ஒரு பணியாளர் குச்சியில் குத்தி சொரண்டி சுத்தம் செய்ட்துக்கொண்டிருந்தார். தங்கள் வேளையில் அவ்வளவு மெனக்கெட்டு லட்சக்கணக்கில் மக்கள் நடமாடும் சாலையை ஒருவர் சுத்தம் செய்துக்க கொண்டிருந்தார் என்றால் பாருங்கள்.

இவ்வளவு ஏன், ரோட்டில் நடக்க சிக்னலுக்காக காத்திருந்தேன், யாரோ ரோட்டில் போட்டிருந்த ஒரு குப்பை பேப்பரை, வேலை முடித்து வீடு செல்ல போய்க்கொண்டிருந்த என்னைப் போல ஒருவர் அதை எடுத்து அங்கிருந்த குப்பை கூடையில் போட்டார். அடேங்கப்பா என பூரித்துப்போனேன் முதல் தடவையாக அதை பார்த்தபோது! ஆம், நாம் தான் சுத்தத்திற்கு முதல் படி. நம்ம ஒருத்தர் ரோட்டுல குப்பை போடாம இருந்தா நாடு சுத்தம் ஆகிடப்போகுதா என்ன? என்று கேட்பவர்கள் படத்தில் எட்டு பேர். என் நண்பன் பிரவீன் எப்பொழுதுமே தெருவில் குப்பை போட்டு நான் பார்த்ததில்லை. தன் சட்டைப் பையில் வைத்துக்கொள்வான், பாகில் வைத்துக்கொள்வான். குப்பை தொட்டியை பார்க்கும் போது அதில் அந்தக் குப்பையை போடுவான். இந்த பழக்கமெல்லாம் நம்மிடமிருந்து வரவேண்டியவை, சினிமாவில் வெளிநாட்டை பார்த்து பூரித்தால் மட்டும் போதுமா? இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து, ஒரு திட்டம் தீட்டி, புதிய பெயரில் வரி விதித்து என்று எத்தனை ஆர்ப்பாட்டம். சுதந்திரம் கிடைத்து ஐம்பது, அறுபது, என்று நூராண்டே ஆகிவிடும் போல இருக்கிறது ஆனால் இன்னும் ரோட்டை சுத்தமாக வைக்க ஒரு வழி பிறக்கவில்லை.

Swachh Barathதிற்கு முதலில் செய்ய வேண்டியது துப்புரவு தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துக்கொடுப்பதே. தானே கிழித்து பேப்பர்களை தெருவில் கொட்டி, அதை ஒரு புதிய தொடப்பட்டதில் செய்தியாளர்போட்டோ எடுக்கும் வரை பெருக்கிவிட்டு "ஆஆஆஆ..... சோச்ச்ச்ச்ச்ச் பாரத்" என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இல்லை இங்கு. தான், தன் வேலை என்று அதை பொறுப்பாக செய்பவர்களைத்தான் பார்க்க முடியும் இந்த மக்களிடம் சுத்தமாக நாட்டை வைக்க தனி வாரிபோடாத இந்த Swachh அமெரிக்காவில்!



பாகம் - 2 அடுத்த வெள்ளிக்கிழமை வெளிவரும்...
Blogger Widget

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

இதுதாங்க அமெரிக்கா - தொடர் கட்டுரை முகப்பு

கவுண்டமணி வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது... "டேய்... நானெல்லாம் அமெரிக்காவுல பொறக்கவேண்டியவன் ஏதோ தெரியாம இந்த வரப்பட்டிக்காட்டுல பொறந்துட்டேன்"என்று!

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிட்டு பலர் பேசி கேட்டிருக்கிறோம், அங்கல்லாம்அப்படி தெரியுமா, இப்படி தெரியுமா என்றெல்லாம்!

அப்படி என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறது? 

நான்கு ஆண்டுகள்அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப் பட்ட பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏன் இந்த நாட்டுக்கு வர அனைவரும் விரும்புகின்றனர்?

இங்கு இருக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அமெரிக்காவை பற்றி சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அப்படியாக இந்த தொடர் கட்டுரை தொகுப்பில் அமெரிக்காவில் 
மக்கள்,
கல்வி,
மருத்துவம்,
சுகாதாரம், 
உணவகம்,
வேலைவாய்ப்பு,
பொருளாதாரம்,
விவசாயம்,
அரசியல்,
பொதுப்பணித்துறை,
போக்குவரத்து,
கழிப்பறை வசதி,
பொது இடம்,
இயற்கை வளம்,
பருவ மாற்றங்கள்,
நதிநீர்,
பணியிடம்,
பொழுதுபோக்கு என்று ஒவ்வொரு துறைப் பற்றிய எனது நேரடி மறைமுக அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணியுங்கள், அமெரிக்காவை சுற்றிப்  பார்ப்போம். ஏதேனும் ஒரு விதத்தில் நிச்சயமாக ஒன்று கற்றுக்கொள்ள இருக்கும் என்று நம்புகிறேன்!

ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று மூன்று தலைப்புகள் பற்றிய கட்டுரை தொடரும். உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை, விருப்பங்களை நிச்சயம் பகிருங்கள்.

கருத்துக்களத்தின் புதிய முயற்சி தான் இந்த தொடர் கட்டுரை, மற்ற கட்டுரைகளிலிருந்து இந்த புதிய தொகுப்பு தனித்துவம் பெரும் என்று நம்புகிறேன். 

இணைந்திருங்கள், படிக்க - சிந்திக்க - பகிர்ந்துக்கொள்ள.

Blogger Widget