-->

புதன், 30 ஏப்ரல், 2014

என்றென்றும் நினைத்துப் பார்ப்போம்!

காலை கண்விழித்து, பல் துலக்கி காபி குடிக்க ஐந்து மணிக்கு பால் பூத்திற்கு சென்றால், நமக்கு சில மணிநேரம் முன்னரே பால்காரர் குளிரானாலும், மழையானாலும் காத்துக்கொண்டிருபார்.

அவர் வருவதற்கு சிலமணிநேரம் முன்னர், அதாவது நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் டெம்போ காரருடன் இரண்டு பேர் வந்து பால் ட்ரேக்களை அந்தந்த பூத்துகளில் இறக்கிக்கொண்டிருப்பார்.

அதற்கு சிலமணி நேரம் முன்னர் முன் பால் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் உழைப்பாளர்கள் வண்டிகளில் பால் ட்ரேக்களை ஏற்ற வேலை செய்துக்கொண்டிருப்பார்.

இது போல, நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு மணிநேரமும் நமக்கு தேவைப்படும் பொருளை நம்மிடம் சேர்பதற்கு ஒருவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

மக்களுக்காக அரசாங்கம் என்ன தான் சட்டம் இயற்றியிருந்தாலும், அதை நாம் கடைபிடிக்க மாட்டோம் என்று தெரிந்து தான் ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் சில, பல போக்குவரத்துக் கண்காணிப்பாளர் இந்தக் கடும் வெயிலில் எங்காவது நிழல் இருந்தால் அதன் அரவணைப்பில் நின்று கொண்டிருப்பார். நம்மிடம் தவறில்லாத, தேவையான பத்திரங்கள் கையிலிருக்கும் போதுதான் அவர் நல்லவராக தெரிவார். தேவையான பத்திரங்கள் கையில் இல்லாத போது அபராதம் வாங்கக் கூடாது என்று நினைப்பது ஒரு வினோத எண்ணம்!

அண்மையில் பணிக்கு சென்று கொண்டிருக்கும்போது Seat Belt அணியாமல் சென்ற எங்கள் அலுவலக வாகனத்தை ஒரு போக்குவரத்து காவலர் ஓரம் கட்டினார், மணி மதியம் மூன்றரை, ஓட்டுனர் உரிமம் எடுத்துக் காட்ட சொன்னார், சில நிமிடம் தேடிக் கொண்டிருந்த ஊடுனரிடம், வெயிலில் நின்றுக் கொண்டிருந்த அந்த காவலர், இருந்தால் எடுங்கள், இல்லை என்றால் , சொல்லிவிடுங்கள் என்றார். நூறு ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி வண்டியை விட்டு இறங்க சொன்னவர், மதிய உணவு சாப்பிடுவதற்கு தான்  கையில் பணம் இருக்கிறது என்று ஓட்டுனர் சொன்னவுடன், ஒரு பந்தாவும் இல்லாமல், "சரி.. நீங்க போங்க... Employee ya அழச்சிட்டு போறீங்க, Seat Belt ah மாடுங்க மொதல்ல" என்று சொல்லி அதை அணியும் வரை நின்றார், வீட்டுக்கு போனவுடன Documents லாம் ஒரு Xerox copy எடுத்து வெய்யுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த மனைவி கையில் Helmet வைத்துக்கொண்டு, கணவன் ஓடிக்கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டினார், நாங்கள் இடத்தை விட்டு நகர்ந்தோம்.

இப்படியாக நாடு முழுவதும் எண்ணற்ற காவலர், எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி: படம் - ஈகரை, சரவணன் தண்டபாணி(Flickr), பெயர் இடம் பெறாத படங்கள்.
பண்டிகை நாளை வீட்டில் கழிக்க முடியாத பேருந்து, ரயில், ஆட்டோ ஓட்டுனர்கள். அந்தப் பண்டிகையை கொண்டாட முடியாமல், குடித்து கும்மாளம் அடித்து மற்ற மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க இரவு முழுதும் ரோந்துப் பணியில் ஈடு படும் காவலர்கள், நாள், கிழமை பாராது விடியற்காலை முதல் நள்ளிரவு வரை கடை திறந்து வைத்திருப்பவர், ஓட்டலில் சாப்பிட்டு வைக்கும் தட்டை கழுவுபவர், மேஜையை துடைப்பவர் என்று பெரிதாக கண்ணில் தென்படாத உழைப்பாளர்கள் நிறைய பேர்!

எந்த நாள் கோவிலுக்கு, எந்த நேரத்தில் சென்றாலும் அந்த நேரத்தில் கருவறையில் இருக்கும் அர்ச்சகராகட்டும், வாயிலில் இருக்கும் காவலாளியாகட்டும், எந்நேரமும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு பூ சுற்றும் பூக் கடைகாரர் ஆகட்டும், பேருந்து நிலையத்தில் நுழையும் ஒவ்வொரு பேருந்துகளிலும் ஏறி பூவிற்கும், ஊக்கு விற்கும், பழம் விற்கும் தொழிலாளி என்று யாராயினும், நம் ஒவ்வொருவருக்காகவும் உழைக்கும் உழைப்பாளி.

இன்னும் எண்ணற்றவர் நமக்காக வெளியில் உழைத்துக்கொண்டிருக்க, தன் வாழ்நாள் முழுவதும், முன்னுற்று அறுபத்தி ஐந்து நாட்களும், இருபத்தி நான்கு மணி நேரமும், தனக்கு ஜுரம் இருந்தாலும், ஒரு நாளும் விடுமுறை இன்றி, வலி இருந்தாலும், தூக்கம் இருந்தாலும் நமக்கு வேண்டும் என்றால் விழித்துக் கொண்டும், உட்காராமல் எப்போதும் நின்றுகொண்டே நமக்கு வேண்டியதை எல்லாம் செய்துக் கொடுக்கும் அம்மா, அப்பா... என்று  ஒவ்வொருவரையும் இன்றொருநாள் மட்டும் அல்ல, நன்றியுடன் என்றென்றும் நினைத்து பார்ப்போம்!

Blogger Widget

2 கருத்துகள்:

  1. ஒவ்வொரு க்ஷணமும் சிந்திக்கவேண்டிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. ஆம், நிச்சயமாக!

    தங்கள் கருத்துக்கு நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே.

    பதிலளிநீக்கு