-->

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம்

--> சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...

--> எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.


திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, காலை பத்து மணிமுதல், இரவு பதினொரு மணிவரை, எந்த சேனலுக்கு மாறினாலும் அதில் ஒரு நாடகம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாடகத்தை ஒரே ஒரு நாள்; விளம்பரம் வரும் நேரம் கழித்து அந்த பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் பார்த்துவிட்டால் போதும், வாரத்தில் வேறு எந்த நாளில் அந்த நாடகத்தைப் பார்த்தாலும் அதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது உடனே தெரிந்துவிடும்.

நூற்றில் தொண்ணூற்றெட்டு நாடகம் ஒன்றாக இருக்கும் தம்பதியை எப்படி பிரிப்பது என்று மாமியார் கணக்கு போடுவதும், புதிதாக திருமணமான ஒருவனை எப்படி பிரித்து தான் திருமணம் செய்துக்கொள்வது என்று ஒருத்தியும், ஒன்றாக இருக்கும் குடும்பத்தை எப்படி பிரிப்பது என்று ஒருத்தியும் என்று அனைத்து நாடகத்தின் கதையுமே இதுதான்.

மேலும் அமைதியான ஒரு இசை வந்தாலும், மகிழ்ச்சியான காட்சி வந்தாலும், யாரேனும் ஒரு இடத்தில் சிரித்துவிட்டாலுமே  "ஆஹா... என்னமோ நடக்கபோகுதுடா இப்போ" என்று உடனே நமக்கும் தெரிந்துவிடும். அந்த ஏதோ ஒன்னு மட்டும் சும்மா நடந்துவிடுமா? உட்கார்ந்திருக்கும்  சேரிலிருந்து நாமே கீழே விழுந்துவிடும் வகையில் "தீம் தன னன னன னன னன னன னன தின னன னாஆஆஆ" என்று ஒரு பத்து பேர் கொண்ட பின்னணி chorus, யார் அந்த வில்லியோ (வில்லன் பெண்பால்!) எங்கிருந்தோ நடந்து யாரை அடிக்கவோ திட்டவோ வருகிறாளோ அதுவரையிலும்,  இருக்கும் எல்லா தபலா, மிருதங்கம் என்று அனைத்தையும் ஒரு அடி அடித்து... slowmotionனில் நடந்து வருவதற்குள் ஒரு விளம்பரமே வந்துவிடும்.  சரியாக செவ்வாய், வெள்ளிக்கிழமை அன்று பார்த்து ஒரு இறப்பு காட்சி வந்து "பே எ எ எ ஏஏஏ" என்று சோகமான நாதஸ்வரத்தயும், ஷெனாயையும் வாசித்து நம்மையே முகம் வாட வைத்து வீட்டையே சோகத்தில் ஆழ்த்திவிடுவார்கள், அந்த நேரத்தில் மட்டும் குழம்பு சாதம் சாப்பிட்டு முடித்துவிட்டு ரசம் எடுத்து வர சொன்னால் அந்த "பே எ எ எ ஏஏஏ" உங்களுக்கு தான்!!!

கேமராவில் இந்த slowmotionனை கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள், கருணாநிதியை பிடித்துக்கொண்ட கருப்புக்கண்ணாடி போல, இந்திய மொழிகளில் நாடகங்கள் எடுப்பவர்கள் இந்த slowmotionனை பிடித்துக்கொண்டுவிட்டனர். திரும்பினா slowmotion, நடந்தா slowmotion சப்பா!!! இந்த லட்சணத்தில் episode-453, episode-890 என்று இரண்டு ஆட்சிகள் மாறினாலும் இவர்கள் எடுக்கும் காட்சிகள் மட்டும் மாறாமல் அப்படியே இருந்துக்கொண்டிருக்கிறது. 

இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்.. அதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். சினிமா பார்ப்பவரை தவறாக சொல்லவில்லை, அதை கிறுக்குத்தனமாக பார்ப்பவரை தான் சாடுகிறேன். அந்த காலத்தில் ஒரு புது சினிமா வெளியாகிறது என்றால், நாளிதழிலும், வார இதழ்களில் அதுபற்றி சில செய்திகள் வந்தாலும், வெளியான அன்று தான் அதைப் பற்றி பேச்சுவரும். நான் சினிமா பார்க்க ஆரமித்த வயதில் விகடனிலும், குமுதத்தில் விமர்சனம் வரும்.
விகடனில் 35, 36 என்றால் தேறாது, 42க்கு மேல் இருந்தால் தான் அது தேறின படம், 45 என்றால் நல்ல படம். 48, 55 அதற்கு மேல் என்றால் அருமையான படம் (கொசுறு: எனக்கு தெரிந்து பாரதி, ஹே ராம், பொற்காலம் மட்டும் தான் விகடனில் ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்ற படம்!).

என்ன அம்மா இது என்று புத்தகத்தில் வரும் படத்தைப் பார்த்து, என்னென்ன படம் என்று  அம்மாவை கேட்பேன், ஒரு விமர்சனம் படித்து விட்டு உருப்படியான படம் என்றால் அதற்கு அப்பா அம்மா தங்கை நான் என்று ஒன்றாக செல்வோம். நான் கல்லூரி படிக்கும்போதுதான் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி வாங்கினோம் என்பதால், அப்போது ஞாயிற்று கிழமைகளில் சினிமா பார்ப்பது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு. இதுதவிர மாதத்தில் ஒரு முறை முடிவெட்ட நானே தனியாக செல்ல ஆரமித்த வயதில், சலூனில் எனது திருப்பதுக்கு காத்திருக்கும் நேரத்தில் அந்த தினத்தந்தியின் கடைசி பக்கங்கள் தான் அப்போதைய சினிமா ட்ரைலர் பக்கங்கள். சதுரம், சதுரமாக ஒரு பத்து பதினைந்து திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கும். ஏதேனும் பெரிய ஹீரோ படம் என்றால் முதல் பக்கத்தின் கீழ் வலது பக்கத்தில் அந்த போட்டோ வந்திருக்கும். (அப்போது டிவியில் ட்ரைலர் வந்ததா என்று எனக்கு தெரியாது! கேள்விப்பட்டதில்லை. ) 

ஆனால் இப்போதோ...!!! அப்படியே தலைகீழ். Technology வளர்ந்தது யாருக்கு எப்படி உதவுகிறதோ இல்லையோ, இந்த சினிமாகாரர்களுக்கு 'அப்படி' உதவுகிறது. ஒரு படம் எப்போது ஆரமிக்க போகிறது என்று தெரியாத சமயத்திலேயே அது பற்றி பேச்சை கிளப்பி விடுவிவார்கள் - ட்விட்டர், முகநூல் போன்ற வலைதளத்தில் - எப்போதோ ஒரு இரண்டரை மணிநேரம் பார்க்கப்போகும் படத்துக்கு மாதக்கணக்கில் Firstlook, Teaser, Trailer, Second Trailer, பொறி கடையில் சம்பிளிக்கு ரெண்டு பட்டாணி சாப்பிடறா மாதிரி படத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிட காட்சிகளை  YouTubeஇல் Sneak Peek என்ற பெயரில் வெளியிடுவது என்று, மாதக்கணக்கில் ஒரு படத்தை பற்றி பேசுவது, அதற்காக அடிடுத்க்கொள்வது, பேசிக்கொண்டே இருப்பது, பார்த்த பின்னரும் பிடித்தவன் ஆஹா ஓஹோ என்று நாள் கணக்கில் பேசிக்கொண்டே போவது, பிடிக்காதவன் அதுபற்றி பேசுவது என்று இப்படியே ஒரு சுழற்சியில் போய்க்கொண்டே இருக்கும்.

ஆனால் இங்கோ, இவர்கள் தயாரிக்கும் தொலைக்காட்சி நாடகமே நம் இந்திய சினிமாவில் ஆஹா ஓஹோ என்று சொல்லக்கூடிய திரைப்படத்தை விட அனைத்து விதத்திலும் பிரமாதமாக இருக்கும். இந்த தொலைக்காட்சி தொடர்கள் நம் நாட்டு தொடர்களைப்போல வாரத்தில் "அனைத்து நாட்களும்" என்று ஆண்டு முழுக்க தொடர்ந்து ஐந்து, பத்து ஆண்டுகள் என  செல்லாது. நம் நாட்டில் வெளிவரும் தொடர்களை Serial என்போம், இங்கே Series என்பார்கள், காரணம் ஒரு தொடர் பெரும்பாலும் 12-22 episode வரை கொண்டிருக்கும், ஒரு ஆண்டுக்கு ஒரு Season வெளிவரும், ஒரு சீசனுக்கு 12-22 episode வெளிவரும், அவ்வளவு தான். மீண்டும் அந்த தொடர் அடுத்த ஆண்டு தான் வெளிவரும். இது HBO, CBS, AMC, ABC  என்று பல டிவி சேனல்கள் உள்ளன. ஒவ்வொரு சேனலிலும் மிக அருமை என்று பாராட்டும் விதமான தொடர்கள் எண்ணில் அடங்காது. குறிப்பாக சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால் Dr. House MD, Game of Thrones, Ballers, Breaking Bad, Better Call Saul, Big Bang Theory, Prison Break, F.R.I.E.N.D.S என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகளுக்கு நிகராக ஒரே ஒரு தொலைக்காட்சி தொடர் கூட இந்தியாவில் உண்டு என்று சொல்லமுடியாது. (நிச்சயமாக!)

இது தவிர Netflix, HULU, Amazon Prime என்று தொலைக்காட்சி நிறுவனத்துக்கு போட்டியாக பல இணைய நிறுவனங்கள் உள்ளன. இவைகள் தாமே நாடகங்கள், சினிமா, documentary என்று அனைத்தையும் தயாரிப்பவர்கள். ஒவ்வொரு தொடர்களும் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுடைய படைப்புகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாதமாக தயாரிக்கப்பட்டிருக்கும், எடுத்துக்காட்டாக House of Cards, Stranger Things, Ozark என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு தரமாக, இசையிலும் ஒளிப்பதிவில் சினிமாவை ஒதுக்கும் அளவுக்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தொடர், சிறந்த நடிகர் நடிகை என்று அனைத்துக்கும் Emmy Awards வழங்கப்படும். சினிமாவுக்கு Oscar விருது போல தொலைக்காட்சி தொடர்களுக்கு Emmy Awards மிகப்பெரிய பெருமைக்குரிய விருது. 


இது இப்படி இருக்க, சினிமா. ஹ்ம்ம்... நம் ஊரில் தான் ஒரு படம் வெளியாகிறது என்றால் முட்டாள் தனமாக விடியற்காலையே திரையரங்குக்கு (முட்டாள்கள் வருவார்கள் என்று தெரிந்து ஐந்து மணி காட்சியெல்லாம் இருக்கும்!) சென்று நூறு ரூபாய் சீட்டை ஐநூறு, ஆயிரம் என்று வாங்கி, பால் பாக்கெட்டு, ஊதுபத்தி என்று அனைத்து கிறுக்கு தனத்தையும் செய்துவிட்டு அதை பெருமையாக வேறு நினைப்பார்கள். ஒன்னும் இல்லாத ஒண்ணரை அனா படத்துக்கே இந்த ஆட்டம்.

ஆனால் இங்கோ, மிக பிரமாண்டமாக உலகமே வியந்து பார்த்த Jurrasic Park போன்ற படமாக இருந்தாலும் சரி, அதிவேக காட்சிகள் நிறைந்த action திரைப்படங்களாக இருந்தாலும் சரி, உச்ச நடிகர்கள் நடித்த படமாக இருந்தாலும் சேரி, படம் திரைக்கு வந்த முதல் நாள் சென்றாலே பாதி திரையரங்கு தான் நிறைந்திருக்கும். சீட்டு வாங்க மிஞ்சிப்போனால் ஒரு பத்து பேர் தான் வரிசையில் இருப்பார்கள். Internet booking எல்லாம் எங்கே பெருசாக கிடையாது, ஏனென்றால் எங்கள் ஓசூர் போல தான் அமெரிக்கா, பெரும்பாலான தியேட்டரில் சீட் நம்பர் எல்லாம் கிடையாது. அப்படியே வந்து சீட்டு வாங்கிக்கொண்டு எங்கே வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். திரையரங்கிலேயே தனி ஒருவனாக இரண்டு மூன்று படம் பார்த்திருக்கிறேன். (நானா ஒன்னும் தனியா போகல, யாரும் வரலீங்க!!! இத்தனைக்கும் ஒரு பிரபலமான படம், வெளிவந்து ஒரு வாரத்தில் சென்றேன்!) அப்படியாக உலகையே பிரமித்து பார்க்க வைக்கும் படங்களை தயாரிக்கும் இந்நாட்டில் சினிமாவை எல்லாம் மக்கள் பெரும் பொருட்டாக மதிப்பதே கிடையாது!

நம் நாட்டில் "ச்சூ போ" என்று துரத்தினாலும்.. அட இதோ நினைவுக்கு வருகிறதே!!! நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த "வேட்டையாடு விளையாடு" படத்தை பார்க்க கல்லூரி விடுதியிலிருந்து சென்ற என் நண்பர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் தியேட்டரில் காலை ஐந்து மணிக்கெல்லாம் சென்று சீட்டு வாங்க வரிசையில் நின்றிருக்க, தியேட்டர் கேட்டை திறந்தவுடன் உள்ளே தப தபவென ஓடியபோது, ஒழுங்காக செல்ல சொல்லி காவலர்கள் (திரையரங்குக்கு பாதுகாப்பு குடுக்கறதுதான் போலீசுக்கு முக்கிய வேலையாச்சே!) என் நண்பர்கள் உட்பட பலருக்கு தடியடி கொடுத்துள்ளனர். அப்படி அடி வாங்கிவிட்டு படம் பார்த்துவிட்டு வந்தான் என் விடுதி நண்பன். அப்படியாக "ச்சூ போ" என்று துரத்தினாலும் நம் நாட்டில் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்ப்பார்கள்.

ஆனால் இங்கே எப்படி எல்லாம் மக்களை திரையரங்குக்கு வர வைக்கலாம் என்று முழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்! எனக்கு இருக்கும் கோபமெல்லாம் இப்படி விரும்பி படம் பார்க்க வரும் மக்களுக்கு குறைந்தபட்ச நல்ல படமாவது இவர்கள் தயாரிக்க வேண்டும் என்பது தான். முக்கியமாக தொலைக்காட்சி, எது, என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று மக்களை குறைவாக நினைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு கேவலமாக நாடகம் எடுக்கும் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் இந்திய தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பவர்கள். ஆனால் இது கூடிய விரைவில் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்) மாறும் என்று நம்புகிறேன், ஏனென்றால் இங்கே உள்ள Netflix, Amazon Prime போன்றவை நம் நாட்டில் காலூன்ற ஆரமித்துவிட்டனர். ஏற்கனவே ஹிந்தியில் சில Netflix seriesசும், Amazon Primeஇல் தமிழ், ஹிந்தி என்று வர ஆரமித்துவிட்டது. இது தொடர்ந்து வளரும் பட்சத்தில், வழக்கமான தொலைக்காட்சி தொடர்கள் அழிந்து போகும். (போக வேண்டும்!) 

நம் நாட்டில் சினிமா டிக்கெட் போக இடைவேளையில் பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று அதுக்கு ஒரு இருநூறு ரூபாயாவது குறைந்த பட்சம் கறந்து விடுவார்கள், அதே தியேட்டருக்கு எதிர் கடையில் விற்கும் 20 ரூபாய் cool drinksஸை எழுபது ரூபாய் என்று விற்பார்கள், "திருடர்கள்"! ஆனால் இந்நாட்டில் படத்துக்கு நடுவில் இடைவேளையெல்லாம் கிடையாது. படம் ஆரமிப்பதற்கு முன்பே பாப்கார்ன், கூல் ட்ரிங்க்ஸ் என்று வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வாகன நிறுத்தத்துக்கு காசெல்லாம் குடுக்க தேவை இல்லை. ஆமாம், மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால் தான் படமே ஓடும், இதில் அந்த தியேட்டருக்கு மக்கள் வரவேண்டியதற்கு தேவையானதை தியேட்டர்காரன் தான் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இருக்க பணம் கொடுத்து படம் பார்க்க வருவர் எதற்கு வண்டியை நிறுத்துவதற்கு பணம் கொடுக்க வேண்டும்? ஹ்ம்ம்.. இது பற்றி அரசு அலுவலர்கள் பற்றிய தலைப்பில் விரிவாக எழுதுகிறேன்.

புலியைப் பார்த்து பூனை கோடுபோட்டுக் கொள்வதைப்போல Hollywoodஐ (இதில் நகைச்சுவை என்ன வென்றால், ஹாலிவுட் என்பது ஒரு ஊரின் பெயர்!) பார்த்து கோலிவுட் (தமிழ்), பாலிவுட் (ஹிந்தி), டோலிவுட் (தெலுகு), mollywood (malayalam), sandalwood (கன்னடம்) என்று பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கேட்டாற்போல தரத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும்!
என்ன "God Father" இப்படி பண்றானுங்க இவனுங்க!
அடுத்த அத்தியாயம் விரைவில்...
---
சில அத்தியாயங்களில் பகிர்ந்துக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் படிப்பவர்கள் சலித்துவிடக் விடக்கூடாது என்று எழுத ஆர்வமிருந்தால் குறைத்துக்கொள்வேன், அப்படி விடப்பட்ட விஷயங்களை ஒளியும் ஒலியுமாக நானே பேசலாம் என்று முடிவு செய்து அதற்கான வெள்ளோட்டமாக இரண்டு காணொளிகளை நமது கருத்துக்களம் YouTube சேனலில் வெளியிட்டுள்ளேன். எனது எழுத்துக்களை காணொளியாக பார்க்க விரும்பினால், எனது சேனலுக்கு Subscribe செய்யவும். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், தங்கள் கருத்தை இங்கே தெரிவிக்கவும். நன்றி. 

கருத்துக்களம் Youtube சேனல் - https://bit.ly/karutthukkalam


Blogger Widget

புதன், 8 ஆகஸ்ட், 2018

எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ!


எவ்வளவு வருத்தமாக இருக்கு உன்னை இப்படிப் பார்க்க!

பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்கள் விஜய், அஜித் என்று பிடித்த ஹீரோக்கள் பெயரை சொன்னபோதெல்லாம் நான் மட்டும் டேய் என் தலைவர் விஜயகாந்த் டா என்று சொல்லும்போது அவ்வளவு கெத்தாக இருக்கும்!

சில நடிகர்கள் "பேசக்கூட தெரியாத, துப்பில்லாத" வெறும் காசுக்காகவும், அரசியல் பேராசைக்காகவும் மட்டுமே ரசிகர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றைய நிலையை பார்த்தால், இப்படியொரு ரசிகர் கூட்டம் உனக்கு சேர்வதற்கு முன்னாலேயே எந்த அரசியல் பேராசையும் இல்லாத காலத்தில் உன் சொந்த செலவில் மக்களுக்கு நீ செய்த உதவிகள் பற்றிய நினைவுகள் தான் வந்துபோகிறது.

இன்று சமூக வலைதளத்தில் பிற கட்சிகளால் நடத்தப்பட்டும், ஒரு கேலிக்கு (மீம்) இவ்வளவு ரூபாய் என்று பணம் வாங்கிக்கொண்டு கிண்டல் செய்பவர்களுக்கு மக்களுக்கு நீ வாரி கொடுத்த நன்கொடைகளும், உதவிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! பாய்ஸ் படத்தில் சுஜாதா வரிகளில் உன் அன்னதானத்தை பற்றி சொல்லும்போது ஒரு புன்னகை வந்ததே, அதுதான் என் தலைவன்!

எத்தனையோ நடிகர்கள் அரசியல் ஆசையோடு தனிக் கட்சி தொடங்கி, சிலர் பிற கட்சிகளில் சேர்ந்தும், இன்னும் சிலர் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று இருபது வருடங்களுக்கு மேல் பூப்போட்டு பார்த்துக்கொண்டும், கேவலமான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு தானும் ஒரு கட்சித் தலைவர் என்று சொல்லிக்கொண்டும், இன்னும் சிலர் சின்னப்பிள்ளைகளை கூட்டி வைத்துக்கொண்டு முதல்வர் கனவில் சுற்றித்திரியும் நேரத்தில், எந்த ஒரு பயமுமில்லாமல் தனியாக, தைரியமாக, துணிவாக அரசியல்களம் கண்ட நீ தான் உண்மையில் ஆளப்பிறந்தவன்!




உனது திருமணத்தை தலைமை தாங்கி நடத்திவைத்த உன் தலைவன் கருணாநிதியே உனது திருமண மண்டபத்தை இடித்துத்தள்ளியும், உனது கட்சியை பிளவுபடுத்திய ஜெயலலிதாவும் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இருந்த காலத்திலேயே அவர்களை நேரடியாக எதிர்த்து துணிவுடன் அரசியல் செய்தாயே, அதுதான் என் தலைவன்!



என்னைப்போன்ற உனது பல லட்ச ரசிகர்கள், நீ மரியாதை கொண்ட நபர் இன்று இறந்துவிட்டார் என்று நீ அழுத உன் அழுகையைக் கண்டு உனக்காக கண்ணீர் விட்டனரே, அந்த அன்பை வென்ற உண்மையான தலைவன் தான் நீ!

அந்த தெளிவான பேச்சு, புன்முறுவல் முன்போல இனி இல்லை எனும்போது மிகுந்த வருத்தம் தான் மிஞ்சிகிறது! மயிலை மாங்கொல்லையில் தூரத்திலிருந்து உன்னைக் கண்டிருந்தாலும், ஒருமுறை உன்னை நேரில் பார்த்துப் பேச ஆசையாக உள்ளது!

உன் உடல்நலக்குறைவு எதுவாகினும் அதை தாங்கும் தைரியம் கடவுள் உனக்கு கொடுக்க வேண்டுகிறேன்!

என்றும் எனக்குப் பிடித்த சினிமா நடிகராகவே இருந்திருக்கலாம் தலைவா நீ  
Blogger Widget

வியாழன், 19 ஜூலை, 2018

கிளிங் கிளிங்.., சார் Post...

காலைக் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, சிலசமயம் நடுராத்திரியிலும் கூட "டிங்ங்..." "டொய்ங்ங்..." "பீப்...பீப்.." என்று விதவிதமாக கைபேசியில் குறுஞ்செய்திக்கான சத்தம் வந்தவண்ணம் இருக்கும் இந்த காலத்தில், கேட்காமலேயே போனது ஒரு சத்தம்; அது மதியம் பதினோரு மணிமுதல் இரண்டு மணிவரை வாசலில் கேட்ட "கிளிங்... கிளிங்..." என்ற தபால்காரரின் சைக்கிள் சத்தம்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சமையல் வேலைகளை முடித்துவிட்டு, துணி துவைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வாசலில் "க்ளிங்... கிளிங்..." என்று சத்தம் கேட்டாலே அது தபால்காரர் தான் என்று அனைவருக்கும் தெரியும்.

மாடி வீட்டில் நாங்கள் இருந்த சமயத்தில், அம்மா துணி துவைத்துக் கொண்டிருக்கும்  நேரத்தில் சைக்கிள் சத்தம் கேட்ட உடனே, ராஜு... போய் நமக்கு லெட்டர் வந்துருக்கா பாரு என்று அம்மா சொல்வார், குடுகுடு என்று வாசலுக்கு ஓடி நின்றால், சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்துக்கு காம்பௌண்டுக்குள் சென்றிருப்பார் தபால்காரர். அவர் வரும்வரை காத்திருந்து, அங்கிள் எங்களுக்கு லெட்டர் வந்துருக்கா என்று கேட்டு, அவர் கொடுக்கும் லெட்டரை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அம்மாவிடம் கொடுப்பேன். யார் கிட்டேர்ந்து வந்துருக்கு அம்மா என்று கேட்டு, மாமாவிடமிருந்து வந்திருக்கு என்று சொல்லி லெட்டரை முழுதும் படித்துவிட்டு எனக்கு படித்து காண்பிப்பார் அம்மா.

அன்று மதியமே வந்த கடிதத்துக்கு பதில் கடிதம் எழுதுவார் அம்மா. பல சமயம் கண்கலங்கியபடியே எழுதுவார். எங்கள் வசிப்பிடம் ஓசூர், மாமாக்கள், பெரியம்மா, பாட்டி இருந்ததோ ராஜ மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், குடந்தை என்று தஞ்சை ஜில்லா முழுக்க எங்கள் ஊர் தான். (ஆஹா... சொல்லும்போதே அந்த இயற்கை எழில் கண்முன் நிற்கிறது!) பாட்டி, அத்தை என்று சென்னைக்கு அப்பா லெட்டர் எழுதுவார்.

அப்படி அன்று மதியமே எழுதிய கடிதத்தை, தபால் நிலையம் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு என்பதால்; நான் நான்கு, ஐந்தாம் வகுப்பு படிக்க ஆரமிக்கும் முன்னர் வரை (அதற்கு பிறகும்கூட) 2nd shift செல்ல பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருக்கும் தலைமை தபால் நிலையத்தில்  அப்பா தான் போஸ்ட் செய்துவிட்டு செல்வார். அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நானும் உடன் சென்று எப்படி போஸ்ட் செய்வது என்று முதல் முதலில் கற்றுக்கொண்ட நினைவு என் கண்முன்னே அழகாக மலர்கிறது. கம்பெனிக்கு கிளம்பும் முன் அம்மாவிடம், போஸ்ட் செய்ய லெட்டர் இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தான் செல்வார். அப்பாவுக்கு நேரம் ஆகிவிட்டது அல்லது அம்மா சில சமயம் லெட்டர் கொடுக்க மறந்துவிட்டால் நான் சென்று போஸ்ட் செய்துவிட்டு வருவேன்.
படம்: corbisimages 
எனது சிறுவயதிலேயே அப்போது பல இடங்களில் வைக்கப்பட்ட தபால் பெட்டிகளை சில இடங்களிலிருந்து நீக்கிவிட்டனர், அப்போதுதான் தொலைபேசி வர ஆரமித்த காலக்கட்டம். தலைமை தபால் நிலையத்திலேயே தான் எப்பொழுதும் சென்று போஸ்ட் செய்துவருவேன். மூன்று நிறத்தில் தபால் பெட்டிகள் இருக்கும். சிகப்பு, நீலம் மற்றும் பச்சை. ஒன்று எங்கள் மாவட்டத்துக்குளேயே அனுப்ப, மற்றொன்று வெளி ஊர்களுக்கு அனுப்ப, மற்றொன்று வேறு மாநிலத்துக்கு அனுப்ப என்று நினைக்கிறன்.

ஒவ்வொரு தடவையும் போஸ்ட் செய்ய செல்லும் முன்னர் அம்மா சொல்லி அனுப்புவார், சரியான பெட்டியில் போஸ்ட் செய்துவிட்டுவா என்று. பொதுவாகவே அனுப்பிய தபால் சென்று சேர நான்கு நாட்கள் வரை ஆகும், மழைக்காலம், புயல் என்றால் மேலும் தாமதம் ஆகும். ஒரு தடவை கடிதம் அனுப்பிவிட்டு, அடுத்தவாரம் பதில் வரவில்லை என்றால் அடடா, ஏன் எட்டு நாட்கள் ஆகியும் இன்னும் பதில் வரவில்லை என்றிருக்கும், அந்த காத்திருப்பு மற்றும் எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நபரின் அன்பும் ஏக்கமும் வெளிப்படும்.

ஹ்ம்ம்... இன்று பள்ளி, கல்லூரி படிக்கும் பொடிசுகள் whatsappஇல் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு ஒரு டிக் தான் வந்திருக்கிறது, ரெண்டாவது டிக் வரவில்லையே... என்ன ரெண்டு டிக் தான் வந்திருக்கு படிச்சதுக்கு blue டிக் வரவில்லையே என்றெல்லாம் ஒரு நிமிடத்துக்கே அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் காலத்தில், ஒரு கடிதத்துக்கு எட்டு நாட்கள் வரை ஒரு காலத்தில் காத்திருந்த அருமையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உடுத்திய அரைக்கால் டிராயரில் பொத்தான் இல்லை என்றால், ஏ.. postbox, postbox என்று சொல்லி பள்ளியில் கிண்டல் செய்ததும், postbox போன்ற வடிவில் திருவிழாக்களில் உண்டியல்கள் விற்றதும், postman பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த எத்தனையோ திரைப்படங்களும், நகைச்சுவைகளும்  இன்று அனைவரும் மறைந்த ஒன்றாகிவிட்டது.

இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே உடன் உட்கார வைத்துக்கொண்டு மாமாவுக்கும், பெரியம்மாவுக்கு, பாட்டிக்கும் கடிதத்தில் சில இடம் எனக்கு ஒதுக்கி என்னையும் கடிதம் எழுதவைப்பார் அம்மா. இன்று ஒரு வயது நிரம்பிய என் தங்கையின் குழந்தை என்னை Whatsappஇல் வீடியோ வழியே  பேசும்போது மாமா என்று கூப்பிடும் பொது ஏற்படும் மகிழ்ச்சி, பள்ளி முடிந்து, புழுதி பறக்க தெருவில் விளையாடி முடித்துவிட்டு அம்மாவுடன் உட்கார்ந்து "அன்புள்ள மாமாவுக்கு" என்று இருபது மூன்று மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதத்தின் கையெழுத்தில் எனது மாமாக்களும், பெரியம்மாவும் மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பொங்கல், தீபாவளி, புது வருடம் என்றால் அம்மா, அப்பாவுடன் Greeting Card வாங்க கடைக்கு சென்று அண்ணாவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அக்காவுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், அத்தைக்கு எந்த கார்டு அனுப்புவது, அத்தைப் பையனுக்கு எந்த ஹீரோ பிடிக்கும், மாமாவுக்கு, பெரியம்மாவுக்கு தெய்வங்கள் படம் போட்ட வாழ்த்து அட்டை என்று எனக்கு தெரிந்த, நினைவில் பசுமையாக நிற்கும் "shopping" என்றால் அது இந்த shopping தான்.

என் தம்பியும், நானும். உப்பிலியப்பன் கோவில் தபால் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த படம்.
என்னதான் இன்று whatsappஇல் விதவிதமாக குட் மார்னிங், குட் நைட் என்று அனைத்துக்கும் ஒரு படம் வந்தாலும்,  அன்று ஊரில் நமக்காக, நமக்கு பிடித்த நடிகர்கள், வாசகங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை நமக்கு அனுப்பிவைத்து அது வந்த பின்னர் அதை பிரித்து படித்து மகிழ்ந்த அந்த காலம் இன்று மறைந்த ஒன்றாகிவிட்டது. எனக்காக என் அக்காக்கள் அனுப்பிய விஜயகாந்த் படம் போட்ட வாழ்த்துப் படங்களும், ஜெயலலிதா படம் போட்ட வாழ்த்துப்படங்களும் ஏராளம், எங்கள் வீடு முழுக்க விஜயகாந்தும், ஜெயலலிதா படமும் அத்தனை ஒட்டிவைத்து அந்த வாழ்த்து அட்டைகளை பாதுகாத்தது ஒரு காலம்.

இருபது, சிலநேரங்களில் அதற்கும் மேற்பட்ட கூட்டமாக மக்கள் நின்ற நீண்ட வரிசையில் நானும் நின்று, ஏங்க... பத்து ரூபாய்க்கு போஸ்ட் கார்டு, அஞ்சு ரூபாய்க்கு inland லெட்டர், அஞ்சு  ரூபாய்க்கு stamp குடுங்க என்று அதை வாங்க வரிசையில் நின்ற நாட்கள் எத்தனை, எத்தனை!!! போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர், நாலணா ஸ்டாம்பு, ஐம்பதுக்காசு ஸ்டாம்பு, ஒரு ரூபாய் ஸ்டாம்பு, Money Order, Telegram, Postoffice Savings என்று எத்தனையோ விஷயங்களுக்காக எத்தனையோ நாட்கள் தபால் நிலையத்துக்கு சென்ற நமக்கு அங்கே வேலை செய்பவர்களில் பாதிபேர் நண்பர்களாகவே இருந்தனர்.

வாசலில் தபால் கொடுக்க வருபவரோ, வருவது சில நொடிகளானாலும் அவர் கொண்டு வரும் தபால் எத்தனையோ பேரின் மன பாரத்தையும், அன்பையும், எதிர்பார்ப்பையும் கொண்டதாக அமைந்தது. மே மாதம் என்றால் பள்ளி மாணவர்களுக்கு கிளிங் கிளிங் சத்தம் என்றாலே கிளி பறக்கும்!!! முழு ஆண்டு பரீட்சையின் முடிவு வரும் சமயம் ஆச்சே!!! அந்த இன்லேண்ட் லெட்டர் வந்து அதை திறந்து "promoted" என்ற செய்தியை கண்ட உடன் கையில் பிடிக்கமுடியாமல் சுற்றிய காலம் அது! இப்போதெல்லாம் பத்து, பன்னிரண்டு வகுப்பு தவிர மற்ற வகுப்புக்கு எப்படி முடிவு வருகிறது என்று எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு தெரிந்தால் கீழே கருத்துப் பகுதியில் தெரிவியுங்கள். அந்த பத்து, பன்னிரண்டாம் வகுப்புக்கும் நாளிதழ்களில் தான் அப்போது தேர்வு முடிவு வரும்.

இன்றோ, நாளிதழ், டிவி போட்டியில் பங்குகொள்ள தபால் நிலையம் சென்று அஞ்சல் அட்டை கேட்டால், தலைமை தபால் நிலையத்திலேயே அஞ்சல் அட்டை இல்லை என்கின்றனர். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள், அரசாங்கம் தான் அஞ்சல் துறையை மறந்து விட்டதே. ஹ்ம்ம்.. BSNLஐ முடுக்கி விட்டால் தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு திருட்டு தனமாக connection கொடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கலாம், அஞ்சல் அட்டையை வைத்து என்ன லாபம் பார்க்க முடியும் இவர்களால்? ஹ்ம்ம்..
நன்றி: இந்தியா போஸ்ட் 
வெறும் சிவப்பு நிறபெட்டியாக மட்டும் அன்றி எத்தனையோ மக்களின் இன்ப, துன்ப, மனபாரத்தையும், அன்பையும், பிரிவையும் வார்த்தைகளால் சுமந்த பெட்டியாகவே இருந்தது. இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து ஆங்காங்கே கடைத்தெருவில், ஊரின் மற்ற பகுதியிலும் அழகாக சிவப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருந்த தபால் பெட்டியும், தபால் பெட்டியும், தபால் நிலையமும், கிளிங் கிளிங் சைக்கிள் ஓசையும், சார் போஸ்ட் என்ற குரலும், ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கமும், பொடி நடையாக சென்று கடிதத்தை போஸ்ட்டு செய்துவிட்டு வந்த சமயமும், எட்டு, பத்து நாட்கள் கடிதத்துக்காக காத்திருந்த அனுபவமும் இன்று காணாமலேயே போனது.

இந்த பதிவை ஒரு தபால்காரர் போல உங்களுக்கு கொடுக்கிறேன்

கிளிங்... கிளிங்... சார் போஸ்ட்...
Blogger Widget