-->

செவ்வாய், 3 ஜூலை, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள்


எச்சரிக்கை: வழக்கம் போல எழுத்துப் பிழை சரிபார்க்காமல் வெளியிட்டுள்ளேன், முக்கிய பிழைகள் இருப்பின், கருத்தில் தெரிவிக்கவும், திருத்திக்கொள்கிறேன். நன்றி.

படம் - Dummy's Photography
நம் நாட்டில் அமெரிக்கர்களை பற்றிய ஒரு எண்ணம் உண்டு, அதாவது அமெரிக்கர்கள் பணக்காரர்கள், எல்லா வீடுகளிலும் கார் உண்டு, அதுவும் ஆளுக்கு ஒரு கார் உண்டு, எல்லோரும் iPhone வைத்திருப்பார்கள், அங்கெல்லாம் பைக்கே கிடையாதாம், இருந்தாலே Harley Davidson போன்ற பைக்குத்தானாம், யாரு வேணும்னாலும் யாருக்கு வேணாலும் முத்தம் குடுத்துப்பாங்களாம் அப்படி இப்படி என்று இன்னும் பலப்பல தவறான அனுமானங்கள் உண்டு. 

நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம், நிலப்பரப்பு குறைவு. இங்கோ நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு.

வீட்டை விட்டு ஒரு தடவை வெளியே செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், சரி நீங்கள் ஓசூர்காரர் என்றால் காபிப்பொடி வாங்க பக்கத்தில் இருக்கும் வாசன் காபிப்பொடி கடைக்கோ அல்லது வேற ஊர்க்காரர் என்றால் உங்கள் ஊரில் பல ஆண்டுகளாக நீங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்கும் கடைக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அரை மணிநேரத்தில் குறைந்தது... "குறைந்தபட்சம்" முன்னூறு பேர் நம் கண்ணில் தென்படுவார்கள், இதில் மூன்று அல்லது நான்கு பேர் நமக்கு தெரிந்தவர்கள் எதிர்ப்படுவார்கள் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கீங்க என்ன என்று பேசிவிட்டு நடையை கட்டுவோம், சில சமயம் ஒரு புன்முறுவல் மட்டும் தான்.

இங்கே அதே அரை மணி நேரம் ஒரு பெரிய கடைக்கு சென்றால், "அதிகபட்சம்" ஒரு நூறு பேரை காணலாம், நம் பொருட்கள் வாங்கும் இந்திய கடைகளுக்கு சென்றால் மிஞ்சிப்போனால் ஒரு இருபதுபேர் இருப்பார்கள். அவ்வளவு தான். இந்த குத்துமதிப்பு கணக்கும் பெரிய ஊர்களில் மட்டும் தான்.

இங்கே வந்த முதல் வாரத்திலேயே அமெரிக்கர்களைப் பற்றி புரிந்துக்கொண்ட ஒன்று, இவர்கள் அனைவரையும் மதிப்பவர்கள். வெளியே காலாற நடக்க சென்றால் எதிரில் தென்படுபவர்கள் சற்றே முன்பு பார்த்திராதவர்களாக இருந்தாலும் hello... how are you doing என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டுவிட்டுதான் செல்வார்கள். வந்த புதிதில் இது பழக்கம் இல்லாததால் எதிரில் வருபவர்களை நம் மக்கள் பார்க்கக் கூட மாட்டார்கள், எனக்கும் இது பழகும் வரை அப்படிதான்.

நாம் வேறு நாட்டவர் என்பதால் நம்மை ஏதோ சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் நம் மக்களிடம் இருக்கும், ஆனால் அப்படி அல்லாமல் யார் எதிரே வந்தாலும் புன்முறுவல் செய்து செல்வார்கள். எந்த இடமாக இருந்தாலும் சரி. நாம் தயங்கினாலும் சகஜமாக பேச்சுக்கொடுப்பார்கள். நம் நாட்டில் பேசுவது போலத்தான் இங்கும் பேச்சுக்கள் தொடங்கும், அட இன்னிக்கு என்ன இப்படி வெயில் அடிக்குது, அடுத்த வாரமும் பயங்கர பனிக்குளிர்  அடிக்கப்போகுதாம் என்று நம்மை முதல் முறை பார்ப்பவராக இருந்தாலும் நம்மிடம் பேச தயங்க மாட்டார்கள்.

ஒரு சமயம் பேருந்திலிருந்து பெரியவர் ஒருவர் தம் நிறுத்தத்தில் இறங்க ஆரமிக்க, பேருந்து ஓட்டுனரே அவர் பையை தன் கையில் வாங்கிக்கொண்டு, அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பேருந்திலிருந்து அவருடன் இறங்கி, அவரை இறக்கி விட்டார். பேருந்தில் இருந்த யாரும் உச் கொட்டவில்லை.

ஒருமுறை பேருந்தில் கண்ணாடியை தவற விட்டுவிட்டேன், இறங்கியவுடன் நினைவுக்கு வந்தது, உடனே பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம்; ஒரு நிமிடம் கண்ணாடியை விட்டுவிட்டேன் தேடிக்கொள்கிறேன் என்று நான் உட்கார்ந்த இருக்கையில் தேடிவிட்டு, கிடைக்கவில்லை என்று சொன்னேன், அதற்கு அவர் நிச்சயம் அங்கயே தான் இருக்கும், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அவ்வளவு நம்பிக்கையாக சொன்னார். பின்னர் தான் என் பையிலேயே waterbottle வைக்கும் இடத்திலேயே இருந்ததை உணர்ந்தேன். சட்டென்று யாரோ எடுத்திருப்பார்கள் என்று சொல்லாமல், யாரும் எடுத்திருக்க மாட்டார்கள் என்று அடுத்தவர்கள்மேல் நம்பிக்கை வைத்து கூறிய விதம் என்னை ஆச்சர்யப்பட வைத்து.

நம்மை போலவே அவர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான், நம்பிக்கை இல்லா சிலர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்வர். சில விஷயங்களில் நாம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்கள், அட இதை எல்லாம் போயி நம்பிகிட்டு... அ..வ..வ..ன் விஞ்ஞானத்துல வளந்து எங்கேயோ போயிட்டிருக்கான், இன்னும் என்னடான்னா என்ற கேலிக்களை நாம் நிச்சயம் கேட்டிருப்போம், நாமே அடுத்தவரை கிண்டல் செய்திருப்போம்... இங்கே வந்த முதல் நாளில் தெரிந்துக்கொண்ட முதல் விஷயமே - அமெரிக்கர்கள் நம்மைவிட இதுபோன்ற நம்பிக்கைகள் கொண்டவர்கள். இங்கே 13 என்ற எண் ராசியற்ற எண் என்று நம்புகிறார்கள், பல அடுக்குமாடி கட்டிடங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் 13 என்ற எண் கிடையாது. பன்னிரண்டாவது தளத்துக்கு பின் பதினான்காவது தளம் தான். அதே போல சில ஹோட்டல்களிலும், மருத்துவமனையிலும் 13 என்ற அறையோ, எண்ணோ உபயோகிப்பதில்லை.


ஆனால் நாம் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நம்பிக்கைகளை, பகுத்தறிவு போர்வையில் இருந்த, இருக்கும் நச்சுக்கிருமிகளின் கேலியாலும், கிண்டலாலும் தன் அடையாளத்தை வெளியே சொல்லவே தாங்கிக்கொண்டிருக்கின்றனர் பலர். கோவிலுக்கு போ என்றோ, நெற்றியில் விபூதி வெச்சுக்கோ என்றோ பள்ளி, கல்லூரி செல்லும் சிறுவர்களிடம் சொன்னால் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் வெச்சுக்கவே கூடாது, பெண்குழந்தைகள் பூ வைத்துக்கொள்ளக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது!

அமெரிக்காவின் தேசிய பறவை, கழுகு. கோழி வந்ததா, இல்லை முட்டை வந்ததா என்பதை போல, இந்நாட்டின் வழக்கத்தினாலோ, அல்லது தேசிய பறவை கழுகு என்பதாலோ தெரியவில்லை அடுத்த நாட்டு விஷயத்தில் கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல அடுத்த நாட்டு விஷயங்களில் தலையிட்டு தன்னை பல காலங்களாக உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக காட்டிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டை போலத்தான் இங்கேயும், அரசின் சில முடிவுகளில் இருவித கருத்து கொண்டிருப்பர். இது பற்றி விரிவாக அரசியல் பற்றிய அத்தியாயத்தில் பார்க்கலாம்.  

நியூயார்க் தெருக்களிலும், மற்ற மாநில முக்கிய தெருக்களிலும் பல பிச்சைக்காரர்களை காண முடியும். இல்லமற்றவர், கர்ப்பிணியாக கைவிடப்பட்டவர், குடிக்கும், போதைக்கும் அடிமையாகி தெருவில் அலைபவர்கள் என்று நம் நாட்டை விட இங்கே இளம்வயது பிச்சைக்காரர்கள் அதிகம். நம் நாட்டில் 20-30 வயது பிச்சைக்காரர்களை கடைசியாக எப்போது பார்த்த நியாபகம்  உங்களுக்கு? எனக்கில்லை. ஆனால் இங்கே அப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் தான் அதிகம்.



என்ன ஒரே ஒரு வித்தியாசம் - அடுத்தவர் பின்னால் சென்று கையேந்த மாட்டார்கள். கையில் ஒரு அட்டையில் தனக்கு என்ன வேண்டுமோ அதை எழுதி வைத்து முன்னே ஒரு டப்பா வைத்திருப்பார்கள். பெரும்பாலான பிச்சைக்காரர்கள் நியூயோர்க்கில் நான் பார்த்தவரையில் ஒரு அட்டையில் homeless, need money for food, anything will help, pregnant please help என்று ஏதாவது ஒன்று எழுதி முன் ஒரு டப்பா வைத்துவிட்டு தான்பாட்டுக்கு ஏதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பர். அல்லது ஏதாவது violin, guitar என்று வாசித்து அதை வீடியோ எடுத்துக்கொள் ஆனால் $1 கொடுத்தால் நன்றாயிருக்கும் என்று மிக வெளிப்படையாகவும், மரியாதையாகவும் எழுதி வைத்திருப்பார்கள். இல்லமற்றவர்கள் படுக்க ஆங்காங்கே சில shelterகள் இருப்பதை பார்த்திருக்கிறேன், பல தொண்டு நிறுவனங்கள் இயன்றவரை இவர்களுக்கான உதவியை செய்துவருகிறார்கள்.


நம் நாட்டில் நடப்பதுபோன்ற திருட்டு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை இங்கேயும் நிறைய அரங்கேறும் செய்திகள் அவ்வப்போது வரும், மேலும் அடிக்கடி பள்ளிகளில், பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடந்து மக்களை உறைய வைக்கும். இங்கே யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கலாம், வைத்துக்கொள்ளலாம் என்ற சட்டம் தான் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு முக்கிய காரணம். நூறு டாலர் முதல் துப்பாக்கி கிடைக்கும், ஒருபது டாலருக்கு ஐம்பது தோட்டாக்கள் கிடைக்கும். விறுவிறுப்பான action திரைப்படமும், கண்டதையெல்லாம் சுட்டு விளையாடும் computer விளையாட்டுக்களையும் தொடர்ந்து பார்க்கும் நபரிடம் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன செய்யத்தோணும் என்று நீங்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

முக்கிய மாநிலங்கள் எதுவானாலும் அதில் இந்தியர்கள், சீன மக்கள், ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், ஜெர்மனி என்று பல நாடுகளை சேர்ந்த மக்கள் தான் இங்கே குடிபெயர்ந்த மக்களாக இருப்பர். தத்தம் நாட்டுக்கு கலாச்சாரத்தை பின்பற்றியும், இந்நாட்டு கலாச்சாரத்தை ஒன்றிணைத்துக்கொண்டும் அவரவர்களின் துறையில் ஒவ்வொருவரும் சிறந்து விளங்க இடம் கொடுப்பதாலேயே அமெரிக்காவை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

நம் நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களின் திறமைக்கு மதிப்பளிக்காமல், ஜாதி, மதம் என்று பார்த்து... ஒரு குழந்தையை Pre KG அல்லது இப்போது புதிதாக முளைத்த பெயர் Junior KG (Kindergarden) சேர்க்கவே பெரிய இடத்து சிபாரிசு எதிர்பார்க்கும் பள்ளிக்கூடங்களும், எவ்வளவு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் இடஒதுக்கீட்டின் தலையீட்டால் தான் படிக்க விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படும் மாணவர்களும்,  சொல்வதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடவேண்டும் என்று பணியிடத்தில் எதிர்பார்க்கும் துறை அதிகாரிகளும், பதவி உயர்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் லஞ்சம் எதிர்பார்க்கும் மேலாளர்களும், தன் கடமையை செய்ய தலையை சொரிந்து மக்களிடம் பிச்சை கேட்கும் எச்சை அதிகாரிகளும் இருப்பதாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் போன்ற தலை சிறந்த நூல்களையெல்லாம் உலகுக்கு தந்த புகழ் பெற்ற நாம் இன்று மூணாவது கூட படிக்காத படிப்பறிவில்லாத நபர்களை எல்லாம் நம்மை வழி நடத்தும் தலைவர்களாக, மாநிலத்தின் முதல்வராக, தேசத்தின் பிரதமராக என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். 

சுருக்கமாக சொல்லப்போனால் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதுதான் இந்த நாட்டின் முக்கிய தாரக மந்திரம். பல நாட்டவர் சேர்ந்து சிறந்த வழித்தடத்தில் சென்றதாலேயே இன்று இந்நாடு உலக நாடுகளுக்கு பெரியண்ணனாக விளங்குகிறது அமெரிக்கா.


அடுத்த அத்தியாயம் விரைவில்...
Blogger Widget

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு கேசவ். மிகவும் ரசித்து படித்தேன். இரண்டு டீனேஜ் பெண்களை இல்லத்தில் இருப்பதால்.. எங்கே போனாலும் கமெரா - போன் - ஹெட் போன்ஸ் போன்றவை அடிக்கடி மறந்து விட்டு விட படும். அடித்து பிடித்து ஓடி சென்று பார்த்தால் அங்கேயே இருக்கும்.

    அதே போல் ஒரு முறை குடும்பத்தோடு நான்கு நாள் வெளியூர் பயணம் போகையில் வீட்டின் கராஜ் கதவை முழுக்க திறந்து வைத்து சென்று விட்டேன். தாம் அறிந்தது போல் கராஜ் வழியாக இல்லத்தின் எந்த அரைக்கும் செல்லலாம்.

    பயணம் முடிந்து மீண்டும் இல்லத்தை அடைகையில் .. அலறியே விட்டேன். யார் திறந்து இருப்பார்கள் என்று. பக்கத்து வீட்டின் ஆள் தான் நீங்கள் கதவை திறந்து வைத்து சென்று விட்டீர்கள் என்று சொன்னார். இல்லம் பத்திரமாக இருந்தது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. அடித்து பிடித்து ஓடி சென்று பார்த்தால் அங்கேயே இருக்கும். // இல்லம் பத்திரமாக இருந்தது.// கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது விசு ஜி. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு