-->

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு

சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி...



பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து சாப்பிடுவோம், மற்ற நாட்களில் வேளைக்கு ஓரிடம் என வகை வகையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். காலை silkboard service ரோட்டில் இருக்கும் அண்ணன் கடை (அவர் பெயர் ராஜேஷ் என்று நினைக்கிறன்) நீங்கள் பெங்களூரில் இருப்பவராக இருந்தால், அவசியம் அங்கே சாப்பிடுங்கள்... காலை சிற்றுண்டி அவ்வளவு ருசியாக இருக்கும்... இட்லி, தோசை, மெதுவடை, வாங்கிபாத் இவை மட்டும் தான், இதனுடன் ஒரு கார சட்னி கொடுப்பார் பாருங்க!!! அச்சோ... அவ்வளவு ருசியாக இருக்கும்! இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே என் நாக்கில் எச்சில் ஊறுகிறது! (அங்கே சென்றால் என் படத்தை காண்பித்து அவரை விசாரித்ததாக சொல்லவும்!), மதியம் சேட்டா கடையில் கேரளா அரிசியுடன் முழு சாப்பாடு, இரவு பெரும்பாலும் அலுவலகத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பாடு அல்லது, அலுவலகத்துக்கு எதிர் ரோட்டில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் தோசை அல்லது ஊத்தப்பம்! ஆஹா... என்ன ஒரு சாப்பாடு!!! நான் தங்கியிருந்த வெங்கடாபுரத்தில் உள்ள கிருஷ்ணா உபஹாரில் இட்லி, வடை, சாம்பார் தான் பெரும்பாலான நாட்களில் காலை சிற்றுண்டி. சாம்பாரில் பெரிய அளவில் இருக்கும் மெது வடை ஊறிக்கொண்டிருக்க, "சாம்பார் இன்னா சொல்பா பேக்கு" என்று கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டு வருவேன்.

இங்கே வரும்போது சாம்பார்பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப்பொடி என்று எனக்கு பிடித்ததெல்லாம் சில மாதங்களுக்கு வருமளவு என் அம்மா எனக்கு அரைத்து கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியில் சாப்பிடவும் அமிர்தம் போல கேசரி கொடுத்து அனுப்பினார். இங்கே வரும் வழியிலேயே அபு தாபியில் அமெரிக்க homeland security அலுவலர்கள் நான் கொண்டு வந்த பையை திறந்துப் பார்த்து கேள்விகேட்டுக் கொண்டிருந்தனர். நானும் ஜீன்ஸ் படத்தில் வரும் லட்சுமி போல டேய் இது கேசரி டா... sweet... சாப்பிடறது என்று கையை வாயில் போடுவது போல சைகை காமித்தும் ஆங்கிலத்தில் சொல்லியும் அதை அவன் என் கையில் கொடுத்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஹோ.. சேரி என்று அவன் கொடுத்ததும் ஆளை விட்டால் போதும்டா சாமி என்று அங்கிருந்து கிளம்பினேன்.

இங்கே வந்திறங்கிய முதல் நாள். என் நண்பன் வீட்டில் தங்கியிருந்தேன், அன்று என்ன சாப்பிட்டேன் என்று கூட நினைவில்லை (இன்றல்ல... அன்றே நினைவில் இல்லை)... பத்தரை மணிநேரம் பின்னோக்கி இங்கே வந்திறங்கினேன் அல்லவா, அதனால் jetlagஇல் இருந்தேன். நேரம் மாறி ஒரு இடத்துக்கு வரும்போது, நம் உடல் அந்த நாட்டில் உள்ள நேரத்துக்கு ஏற்ப அமையும் வரை நாம் மந்தமாகவே இருப்போம். அப்போது எல்லோரும் உறங்கும் நேரத்தில் நாம் அவ்வளவு தெளிவாக இருப்போம், எல்லோரும் விழித்திருக்கும் நேரத்தில் நமக்கு அப்படி ஒரு தூக்கம் வரும். நம் உடல் அந்த நேரத்துக்கு ஏற்ப அமைய பெரும்பாலும் ஒரு வாரம் ஆகும்.

ஆக, முதல் நாள் இரவு நண்பன் சமைத்ததை சாப்பிட்டு உறங்கி, மறுநாள் காலை எனக்கு சமைத்துக்கொண்டு எனது lunchboxஇல் போட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன். நல்லவேளை. அங்கே சென்றால் அலுவலகத்தில் நம்மூர் கான்டீன் போல வகை வகையான உணவெல்லாம் கிடையாது. வகைவகையான மாமிசம் தான்!! எருமை, பன்றி என பெரிய பட்டியலே உண்டு. இதோ... இதுதான் என் அலுவலக கான்டீன் மெனு... ச்சி கருமம் என்கிறீர்களா! ஹ்ம்ம்.. அப்படிதான் எனக்கும் இருந்தது!


இந்த கான்டீன் கூட இல்லாத பல அலுவலகங்கள் உண்டு. பெரிய நகரில் உள்ள அலுவலகம் என்றால் பெரும்பாலானோர் வெளியே சாப்பிடுவார்கள் சிறிய நகரம் என்றால் வெளியே அவ்வளவு கடைகள் இருக்காது. அனால் எந்த நகரானாலும் நம்நாட்டு மக்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுதான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள். அதுதான் நமக்கு த்ரிப்திகரமாக அமையும்!

நம்மை போலவே உணவு உண்ணக்கூடிய பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பல நாட்டினர் இங்கே நியூயார்க் நகரில் கடைகள் வைத்திருப்பார்கள். மதிய உணவு நேரத்தில் தெருக்கடைகளில் கூட்டம் அலை மோதும். அனைத்து விதமான உணவும் கிடைக்கும் இங்கே இருக்கும் தெருக்கடைகளில். எனது திருமணத்திற்கு முன், வாரத்தில் ஒரு நாள் வெளியே சாப்பிடுவேன். Dhal ரொட்டி, சாப்பாடு, vegetable பிரியாணி என்று சைவ உணவு விற்கும் கடைகள் நிறையவே உண்டு.

இந்த ரோட்டோர கடைகள் ஏனோ தானோ என்று இருக்காது. அனைத்து கடைகளும் முறையாக உரிமம் பெற்று நடக்கும் கடைகள், அதனால் ஒவ்வொரு கடைக்கும் அவர்கள் உபயோகப் படுத்த plugpoint தரையுடன் சேர்ந்தாற்போல இருக்கும். ஓசியில் சாப்பிட எந்த காவலரும் வந்து தொல்லை செய்வதோ, தொப்பியை நீட்டி மாமூல் வசூலிப்பதோ கிடையாது. அனைத்து ரோட்டோர கடைகளிலும் கடையின் உரிமத்தின் நகல் போட்டோ பிரேமில் மாட்டப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தள்ளு வண்டிபோல, நிரந்தர கடைகள் அல்ல. அவரவரின் வண்டியின் பின்புறம் கொக்கியில் மாட்டி கொண்டு வந்து கொண்டு செல்வர்.

நியூயார்க் நகரில் நமக்கு தெரிந்த, தெரியாத அனைத்து நாட்டவரின் கடைகளும் இருக்கும். ரோட்டோர கடைகளில் Falafal என்பது மிகவும் பிரபலமானது. அது கிட்டத்தட்ட நம் மசால் வடை போலவே இருக்கும். இது மத்திய கிழக்கு நாடுகளின் உணவு. இந்த ரோட்டோர கடைகள்  பெரும்பாலும் பாகிஸ்தான், வங்காளம், வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களின் கடைகளாக தான் இருக்கும். ஆனாலும் இத்தாலி, தாய்லாந்து ஏன் நம்மவர் ஒருவரின் தோசைக் கடை கூட இங்கு  மிக பிரபலம். (அது Brooklyn நகரில் இருப்பதால் அங்கே இன்னும் செல்ல இயலவில்லை, சென்றால் மேலும் விபரங்களை தெரிவிக்கிறேன்.)



இவர் என் நண்பர், முகமது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். 17 ஆண்டுகளாக இங்கே கடை வைத்துள்ளார். இவருக்கு முன்னிருந்து இவரின் பெற்றோர் 25 ஆண்டுகளாக இங்கே உணவுக்கு கடை வைத்துள்ளனர்.
இது தவிர chain food restaurants பல உண்டு. Subway, Chipotle, Taco Bell, McDonald's, Pizza Hut, Domino's Pizza, Burger King என்று பல கடைகள் உண்டு. இவை அனைத்தும் அமெரிக்காவில் எந்த மூலைக்கு சென்றாலும் இருக்கும். ஏன்? இவற்றில் பாதி இப்போது நம் நாட்டிலேயே உள்ளதே! இவற்றுள் chipotle என்ற மெக்ஸிகோ நாட்டின் கடை நமது மக்கள் மத்தியில் பிரபலம். இந்த கடையில் தான் அரிசி உணவு இருக்கும், மற்ற கடைகளில் வெறும் பர்கர், pizza மட்டும் தான் கிடைக்கும் அது நமக்கு ஒரு முறைக்கு மேல் ஒத்துவராது.

இந்த அமெரிக்க உணவகங்களை தவிர இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பல இந்திய உணவகங்கள் இருக்கும். நம் ஊரில் பிரபலமான ஹோட்டல் சரவணா பவன், அடையாறு ஆனந்த பவன், அஞ்சப்பர் என்று பல பிரபல உணவகங்களும், வேறு சிறிய உணவகங்களும் உண்டு. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், ஹிந்திக்கார ஹோட்டல்கள் என பல உண்டு. தமிழக ஹோட்டலுக்கு சென்றால் இங்கே இருக்கும் தமிழ் மாத இதழ்கள் கிடைக்கும். தென்றல், 8K Express என்று இரண்டு தமிழ் மாத இதழ் அமெரிக்காவில் வெளிவருகின்றன.

ஏதாவது பண்டிகை நாள் என்றால் இங்கே இருக்கும் தமிழக ஹோட்டல்களில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவார்கள். குறிப்பாக இங்கே இருக்கும் ரஜினி என்ற ஹோட்டலில் பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு நாட்களில் வாழையிலையில் சாப்பாடு போடுவார்கள். நம் வீட்டில் பண்டிகை நாட்களில் அம்மா ஆசையாக சமைத்து உணவு பரிமாறும்போது, அட போதும்மா ஏன் இவ்ளோ சாப்பாடு போடுற என்று கோபித்துக் கொண்டவரெல்லாம், இங்கே ஓட்டலில் இரு முறை கொடுக்கும் சாப்பாடு பத்தாமல் extra சாப்பாட்டுக்கு மேலும் காசு கொடுத்து வாங்கும்போது தான் அம்மாவின் அருமையும், பண்டிகைக்கு நம் வீட்டிலும், ஊரிலும் இல்லாத வருத்தமும் தெரியும்.

ஒரு முழு சாப்பாடு பொதுவாக $12 - $15 டாலர் இருக்கும். பண்டிகை நாள் சாப்பாடு என்றால் பெரும்பாலும் $20 - $25 இருக்கும். இங்கேயே குடியுரிமை பெற்ற மக்களுக்கு அது பெரும் தொகையாக இருக்காது, ஆனால் இது ஒரு பெரும் தொகையே. வடை, சமோசா போன்றவையெல்லாம் $5 முதல் $7குள் இருக்கும். இந்த உணவகங்கள் தவிர நான் தங்கியிருக்கும் பகுதியில் நம்மூரில் இருப்பது போலவே bakery ஒன்று உள்ளது. முதன் முதலில் அங்கே சென்ற போது எங்கள் ஓசூரில் பிரபலமான கண்ணையா பேக்கரியின் சின்ன கிளை போலவே இருந்தது. இங்கே பப்ஸ், பாணி பூரி, வடா பாவ், கேக், butter biscuit, ரஸ்க், bread என்று அப்படியே நம்மூரில் இருப்பது போலவே ருசியுடன் இருக்கும். இந்த நாட்டில் நம்மூர் போல bakery எல்லாம் அவ்வளவு கிடையாது, இங்கே Doughnut என்பது தான் மிக பிரபலம். ஒரு Bun அளவில் இருக்கும், உளுந்து வடையில் இருப்பது போல நடுவில் ஓட்டை இருக்கும், அதனுள் cream, jelly, தேங்காய் என்று பல வித flavorகளில் கிடைக்கும். Dunkin Donut, Wawa போன்ற கடைகளில் இந்த Doughnut கிடைக்கும். Dunkin Doughnut என்பது நம் ஊரிலும் கூட இப்போது இருப்பதாக கேள்விப்பட்டேன். இங்கே dunkin donut, Starbucks என்பது நமூரில் தெருவுக்கு ஒன்று என்றிருக்கும்  தேநீர் கடையை போல நூற்றுக் கணக்கில் இருக்கும். ஆனால் இங்கே இந்த கடைகள் பிரபலம் என்ற ஒரே காரணத்தினால் நமூரில் ஒரு காபியை 120 ரூபாய் கொடுத்து வாங்குவதும், ஒரு Bunஐ அறுபது ரூபாய் கொடுத்து வாங்குவதும் காலக் கொடுமை!

இதையெல்லாம் சொல்லி முடிக்கும்போது வெற்றிக்கொடி கட்டு வடிவேலுவின் ஒட்டகப் பால் நியாபகம் தான் நினைவுக்கு வருகிறது. என்ன, இங்கே ஒட்டகப் பால் கிடையாது, ஆனால் பலவகைப் பால்கள்  உண்டு. Whole Milk (இது தான் நம் ஊரில் கிடைப்பது போல இருக்கும்), 2% fat free, 1% low fat, Almond Milk என்று பல வகையில் இருக்கும். நம்மூர் போல காலையில் தினமும் வாங்கிக்கொண்டு வரும் பழக்கமோ வழக்கமோ இல்லை இங்கே. ஒரு முறை வாங்கினால் அது பதினைந்து நாள் வரை கெடாமல் இருக்கும். ஹ்ம்ம்... என்னத்த கலக்குறாங்களோ.. ஆனால் அப்படி மட்டும் தான் கிடைக்கும்.

இந்த உணவு விலைகளை பற்றி மேலே படித்தீர்கள் அல்லவா, இந்த உணவு நம் கோவில்களிலும் கோவில் கேன்டீனில் கிடைக்கும். அங்கே விலை கம்மியாக வைத்து விற்பார்கள். நியூயார்க்கின் Pomona (ஊர் பெயர்) ரங்கநாதர் கோவில், பெனிசில்வேனியாவில் சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் கோவில்களில் மட்டும் இலவச அன்னதானம் வழங்கப்படும். அதுவும் ரங்கநாதர் கோவிலில் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை மடப்பள்ளியில் சுடச்சுட செய்த வெண்பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம் இருக்கும். அபப்டியே மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும்.

கோவிலைப் பற்றி சொன்னதாலேயே அடுத்த அத்தியாயம் எதை பற்றி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அடுத்த அத்தியாயம் விரைவில்...

வாரத்தின் எந்த நாளில் புதிய அத்தியாயங்களை வெளியிடலாம் என நினைக்கிறீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்.

இந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி!

------------

விஜய் மல்லையா போல நிரவ் மோடி 11,400 கோடி மோசடி செய்ததை பற்றிய கேலி வீடியோ ஒன்று தமிழில் டப்பிங் செய்துள்ளேன். இங்கே அந்த விடியோவை காண்க.


https://youtube.com/bhargavkesavan என்ற எனது youtube பக்கத்திற்கு subscribe என்ற பொத்தானை அழுத்தி மேலும் பல காணொளிகளை காண subscribe செய்யவும்.

நன்றி.




Blogger Widget

8 கருத்துகள்:

  1. ஞாயிற்றுக்கிழமை புது அத்தியாயம் வெளியிட உகந்த நாள்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி திரு.கந்தசாமி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. " நம் வீட்டில் பண்டிகை நாட்களில் அம்மா ஆசையாக சமைத்து உணவு பரிமாறும்போது, அட போதும்மா ஏன் இவ்ளோ சாப்பாடு போடுற என்று கோபித்துக் கொண்டவரெல்லாம், இங்கே ஓட்டலில் இரு முறை கொடுக்கும் சாப்பாடு பத்தாமல் extra சாப்பாட்டுக்கு மேலும் காசு கொடுத்து வாங்கும்போது தான் அம்மாவின் அருமையும், பண்டிகைக்கு நம் வீட்டிலும், ஊரிலும் இல்லாத வருத்தமும் தெரியும்." - This is very true, Padikkum pothu appadiye US'la irukkum pothu aanathelaam appadiye kan munaadi vanthu pochi.

    Btw, Really well written and i enjoyed / enjoy reading this, thank you and please continue to write more.

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து மகிழ்ந்து படிப்பதற்கும், இங்கே கருத்து பதிவிட்டமைக்கும் மிக்க நன்றி, கார்த்திக்.
    உணவு பற்றிய இந்த பதிவில், உனது உணவு பற்றிய பதிவுகளுக்கும், புகைப்படங்களுக்கு நான் விசிறி என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் :)

    பதிலளிநீக்கு