-->

வியாழன், 22 மார்ச், 2012

தண்ணீர்... தண்ணீர்...

பல நாட்களாக 'நினைத்துக்' கொண்டிருந்தேன், தண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று, உலக தண்ணீர் தினமான இன்று (22 மார்ச்) தான் அது இயல்பாக அமைந்தது.

பூனாவில் இருந்த சமயம் ஒரு நாள், திடீரென காலை எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வர தொடங்கிவிட்டனர். எங்கள் மேலாளர் உட்பட. முன்பே பணிக்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சர்யம். என்னடா இது!! பத்து மணி ஆனாலும் பணிக்கு வராத இவங்க, இன்று இவ்வளவு சீகரம் வர காரணம் என்ன? என்று.

அனைவரையும் இவ்வளவு சீகரம் வர வைத்தது 'தண்ணீர்' தான்.

ஆம் அனைவரது வீட்டிலும் தண்ணீர் 'வராதது' தான் இவர்கள் 'வர' காரணம்.   பல் தேய்த்து முதல், அனைத்தும் அலுவலகத்தில் தான்.

கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் குடி இருக்கக் கூடிய குடியிருப்பு பகுதி அது. குடியிருப்பு பகுதி, பள்ளி, ஐம்பதிற்கும் மேல் மென்பொருள் நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கும் மாதிரி துணை நகரம் அது.
(இடம் பெயர் - Magarpatta  City).




அங்கு இருக்கும் பெரும்பாலனவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து அங்கு வந்தவர்கள் தாம். கணக்கு இல்லாமல் தண்ணீர் செலவு செய்து, குடிப்பதற்கு தவிர, அடுத்த நாள் பல் தேய்பதற்கு கூட தண்ணீர் சேமித்து வைக்காத/ வைக்க தோணாத தருணத்தில் ஒரு நாள் தான் மேல் சொன்ன சம்பவம் நடந்தது.

இரண்டு மாதம் முழுதும் தண்ணீர் கிடையாது. ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் தண்ணீர் வந்தது. அப்படி பட்ட சூழலில் தாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் பெரியவர்களும் கற்றுக்கொண்டனர்.

இது தாம் தண்ணீர் இருக்கும் பல இடங்களில் நடப்பது, அதன் சேமிப்பு பற்றி யோசிக்காமலேயே இருப்பது. ஏதோ காற்று தொடர்ந்து இருப்பது போல தண்ணீரையும் தொடர்ந்து உபயோகப் படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வாளி தண்ணீரில் குளித்து, துணியும் துவைத்து பழகி வருகிறேன். ஆம், முடிகிறது. நமக்கு தண்ணீர் தர மறுக்கும் பெங்களூரில் தான் இந்த நிலைமை. 

பெங்களூரின் மைய்யப் பகுதியில் குடியிருக்கும் எங்கள் வீட்டில் தண்ணீர் வற்றி விட்டது என்று வீட்டு சொந்தக்காரர் சொன்னபோது அலுவலகம், பொழுபோக்கு என்று சற்று நேரம் எதுவும் நினைவுக்கு வரவில்லை, 'அத்யாவசியத்திர்க்கு' கூட தண்ணீர் இல்லை என்றால் எங்கு செல்வது என்று தான் தோணியது.

வயதில் பெரியவர்களாக இருப்பவர்களிலேயே பலர் தண்ணீரை வீணடிப்பதை பார்க்கும் போது எப்பொழுது அதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள் என்று தான் தோணுகிறது.

தண்ணீர் சேமிப்பு மூலம் நாம் சேமிப்பது தண்ணீரை மட்டும் அல்ல. சேமிக்க கற்றுக்கொள்ளும் பழக்கமும் தாம். இந்த தலைப்பை யோசித்த சமயம் மனதில் நினைவுக்கு வந்தது பள்ளிப் பாடத்தில் கடன் வாங்கியது யார், ஊதாரி யார் என்று பஞ்சாயத்து தலைவர் யசோதையை ஒரு சொம்பு தண்ணீரில் சேற்றில் நினைத்த காலை அலம்ப சொன்னது தான். சேற்றுக் காலை ஒரு சொம்பு தண்ணீரில் அலம்பி தண்ணீரையும் சிறிது மிச்சம் வைத்த அந்த கதை பள்ளியில் காரணம் இல்லாமல் வைக்க வில்லை.அந்த பாடம் இந்த கால குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அவர்கள் பின்னாளில் கடை பிடிக்க வேண்டிய நற்பழக்கத்தயும் புகட்ட வேண்டியதும் நமது கடமை. நம் வீட்டு குழந்தைகளுக்கு தான் இதனை சொல்லி தர வேண்டும் என்று இல்லை,. அக்கம் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள், எங்கேனும் பேச வாய்ப்பு கிடைத்தால் அங்கெல்லாம் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவது என்று நாமாகவே அந்த வாய்ப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும்.


நன்றி: திறந்த குழாயை மூடாமல் படம் பிடித்த விக்னேஷ் பார்த்தசாரதி 
பால் வண்டி, எரிபொருள் ஏற்றி செல்லும் வண்டியில் இருந்தெல்லாம் ஒரு சொட்டு வெளியில் சிந்தி வீணானதாக நினைவு இல்லை. அந்த நிலைமை தண்ணீர் ஏற்றி செல்லும் வண்டிக்கும் வர வேண்டிய கட்டாயம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டது என்பதை உணர வேண்டிய நேரம் இது.

வேண்டிய இடத்திற்கு எடுத்து சென்று, போகும் வழியிலேயே தண்ணீரை காலி செய்யும் தண்ணீர் வண்டி. 
அந்நியன் திரைப்படத்தில் அதிக வாடகை வாங்கியவருக்கு காசை தண்ணீராக குடித்துக்கொள் என்று கோபப்படும் இடம் போல, என்ன வேண்டுமானாலும் ஒருவரிடம் இருக்கலாம், ஆனால் தண்ணீர் பயன் படுத்த வேண்டிய இடத்தில் தண்ணீர் மட்டும் தான் பயன் படுத்த முடியும்.

தண்ணீரின் அவசியத்தை உணர மறந்தால் தாகமெடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கக் கூடிய குரல் 'தண்ணீர்... தண்ணீர்...'
Blogger Widget