-->

ஞாயிறு, 17 ஜூன், 2012

ஓடி விளையாடு பாப்பா!

ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

பாரதியின் இந்த வரிகளை படிக்காதவரில்லை. ஆற்றல் மிகுந்த இந்த தொலைநோக்கு கொண்ட வீரத்தமிழனின் வரிகளை வெறும் நான்கு மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமே பள்ளியில் புகட்டுகின்றனர்.

மழலை மாறாத வயதிலேயே பள்ளியில் அதிக நேரம் செலவிட வைத்து, மாலை வீடு திரும்பியவுடன் தனி வகுப்பு சென்று பாடம், இரவு வீடு திரும்பியவுடன் பள்ளி வேலைகள் என்று விளையாட வேண்டிய இந்த வயதில் காலை முதல் மாலை வரை புத்தக மூட்டை சுமக்கும் சுமை தாங்கியாக மாற்றியுள்ளது இன்றைய உலகம்.


என்னதான் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு முப்பருவமுரையை கொண்டு வந்தாலும், இன்று அவர்கள் மன நிலை ஒரு இயந்திரம் போலவே தான் உள்ளது.


சர்வதேச தரம் கொண்ட பள்ளிகள் என்று திறக்கப்படும் பள்ளிகள் எல்லாம் ஊருக்கு வெளியே தான் திறக்கப்படுகின்றன. அங்கு தான் இடம் இருக்கிறது என்று அதை நியாயப் படுத்தினாலும், அது ஊருக்கு வெளியில் தானே!


காலை ஏழு மணி முதலே மழலைகள் பள்ளிப் பேருந்திற்காக வெளியில் காத்திருப்பதை பார்த்தால் சில சமயம் பரிதாபமாக தான் உள்ளது.


சில சர்வதேச பள்ளியில் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு வரை அங்கேயே வழங்கப் படுகிறது. அந்த அளவிற்கு வீட்டை விட்டு வெளியே சென்று படிக்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்ய காரணம் பின்னாளில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற காரணம்!


நல்லறிவு, ஆங்கில அறிவு தான் காரணம் என்றால் அது வீட்டருகில் இருக்கும் நம்மூர் பள்ளிகளிலேயே கிடைக்கும்!


ஓடி விளையாட வேண்டிய வயதில், வீட்டிலேயே இயக்குபிடி வைத்துக்கொண்டு தொலைக்காட்சிப்பெட்டியிலும், கணிப்பொறியிலும், கை பேசியிலும் தான் விளையாடும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.


நாம் மட்டும் எண்ணில் அடங்காத பல விளையாட்டுகளை தெருவில் விளையாடிவிட்டு, பெரும் கூட்டம் கூடமாக அக்கம் பக்கத்துக்கு வீட்டு நண்பர்களோடு கூடி விளையாடிவிட்டு இக்கால குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருப்பது எதனால்?


கண்ணாம்பூச்சி, கல்லா-மண்ணா, திருடன்-போலீஸ், பூதொட்டி, கில்லி-தண்டா, சடுகுடு, ஓட்டப்பந்தயம் என்று கணக்கில்லா ஆட்டங்களை விளையாடி மகிழ்ந்தோம். இன்று வீதியில் நடக்கும்போது அங்கு சிறுவர்கள் விளையாடுவதை காண முடியவில்லை!

  

குலை குலையை முந்திரிக்காய் என்று அன்று நாம் விளியாடிய பொது தெருவிற்கே கேட்கும் அந்த சத்தம், இன்று எங்கும் கேட்பதில்லை!


நமது தொன்று தொட்டு வந்த விளையாட்டுகள் இன்று மறைந்து வருகின்றன. பாண்டியாட்டம், பல்லாங்குழி, நான்கு சோழி, பரமபதம் என்று கூட்டம் கூடமாக விளையாடிய இந்த ஆட்டங்கள் இன்று எங்கும் காண இயலவில்லை!
நமது பாரம்பரிய ஆட்டங்கள் வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு ஆட்டத்திலும் சில அர்த்தங்கள் மறைந்திருந்தன. பலாங்குழி, பரமபதம் - வேகமாக கணக்கு போட வைத்தது, நான்கு சோழி - ஆற்றலை வளர்த்தது, சடுகுடு, கண்ணாம்பூச்சி - நண்பர்களோடு ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கியது. இதுபோல பலபல அர்த்தங்கள் நிறைந்த விளையாட்டுகளாக இருந்தன நமது தமிழ் விளையாட்டு.


ஆனால், இன்றைய மேற் குறிப்பிட்ட நவீன மின்ன்னணு விளையாட்டுகளும், தொலைக்காட்சியும் சாதித்த இன்று - சிறு வயதிலேயே குழைந்தைகளை மூக்கு கண்ணாடி போட வைத்தது தான்.
என் குழந்தை Pogo பாத்தாதான் சாப்பிடுவான் என்றும் பெருமை பட்டுக்கொள்ளும் அந்த பெற்றோருக்கு தான்; தன் குழந்தையை வெளியில் சென்று விளையாட சொல்லும் கடமை நிறைந்திருக்கிறது!


தொலைக்காட்சியும், ஏனைய இயந்திரங்களும் தான் சிறு வயதிலேயே அவர்களை வீட்டில் கட்டிப்போட்டிருக்கிறது!


குழந்தைகளுக்கு இனி பாடத்தை கற்பிக்கும் பொது , அதன் அறத்தை கற்பித்தால், நாம் சொலாமலேயே வீதியில் சென்று விளையாட செல்வார்கள்.


இனியும் நீ ஓய்ந்திருத்தல் ஆகாது பாப்பா, நீ ஓடி விளையாடு பாப்பா.


Blogger Widget