-->

சனி, 21 மே, 2011

Corporate குடிகாரன்.


முற்காலத்தில், இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை இல்லாதபொழுது அவர்களிடையே மது அருந்துவது ஒரு பழக்கமாக இருந்தது, பின்னர் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைமுறை வந்தபின்னர், பலர் குடியை ஒதுக்கிவைத்தனர், இது அனைவரும் அறிந்ததே.

பெண் பார்க்கும் பேச்சு எடுத்தாலே, மாப்பிளையைப் பற்றிய  முதல் கேள்வி, புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் இருப்பவரா என்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாலிபர்கள் அவ்வளவு சுலபமாக மது அருந்திவிட முடியாது. மது அங்காடியில் விற்பனையாளர் வயதில் இளையோர் குடிக்க வந்தால், அவர்களை அதட்டி அனுப்புவார்கள் என்று கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இளைய சமுதாயத்தினர் பெரும்பாலும் உள்ளூரிலேயே கல்லூரிப் படிப்பையும் படித்துவந்தனர்.

ஆனால், இன்று நிலைமை வேறு. பெரும் விழுக்காட்டினர் வெளியூர் சென்றுதான் படிக்கின்றனர். அதிலும் கல்லூரி விடுதியில் தங்குவதும், வெளி விடுதியில் தங்குவதும்தான் வாடிக்கை. இதனால் கேட்பாறற்று பல பழக்கங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே ஏதோ கட்டவிழ்த்து விட்டது போல நினைப்பு வந்துவிடுகிறது. பக்கத்து வீட்டு ஆயா செத்தாலும் சோகம் என்று சொல்லி குடிப்பது, நண்பனை ஒரு பெண் பார்க்கிறாள் என்றாலும் குஷி என்று சொல்லி குடிப்பது என்று இப்பொழுது தொட்டதிற்கெல்லாம் குடி. போதாக்குறைக்கு அவ்வபோது அரசு நடத்தும் மதுபானக்கடைகிளில் புதியவகைகளை வேறு அறிமுகப்படுத்துகின்றனர்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.


பொங்கல் தினத்தன்று மட்டும் தமிழகத்தில் 90 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து சாதனை படைத்தது முந்தய தி.மு.க ஆட்சி.
இதில் எந்த ஆட்சியையும் விதிவிலக்கல்ல... 
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் பண்டிகை தினத்தன்றும், பிரபல அணிகள் களமிறங்கும் கிரிக்கெட் தினத்தன்றும், அரசு மதுபானக்கடைகளில் ஒரு 'இலக்கு வைத்து விடுகிறார்கள்', குறைந்த பட்சம் 50 கோடி, 100 கோடிக்கு விற்பனை செய்யவேண்டுமென்று. அந்த அளவிற்கு நமது சமுதாயத்தினரை அரசாங்கம் புரிந்து வைத்திருக்கிறது.

கல்லூரி முடித்து பணிக்கு சேர்ந்ததும், உடன் பணிபுரிபவரிடம் கேட்கும் முதல் கேள்வி... அடிக்கடி party எல்லாம் உண்டா? பெற்றோர் பணத்தில் படித்த போதே கேட்பாறற்று மாதம் ஒரு முறை குடிக்கப் பழகியவனுக்கு, பணியிர்சேர்ந்தவுடன் கேட்கவும் வேண்டுமா?


கம்பனிகளிளெல்லாம் இப்பொழுது குடிக்காதவனைத்தான் தீண்டத்தகாதவனைப்போல பார்கிறார்கள் இப்பொழுது.

அவன் குடிகாரன் என்று ஒதுங்கிய காலம் சென்று இப்பொழுது, அவன் 'குடிக்காதவன்' என்று சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் பார்க்கும் போது வள்ளுவரின் 'குர(ல்)ள்' தான் நினைவிற்கு வருகிறது

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. [பொருட்பால்: கள்ளுண்ணாமை]

அதாவது, ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது Corporate குடிகாரனுக்கு.
Blogger Widget

5 கருத்துகள்: